‘ஹோம்ஸ்டே-வில் கொடூரம்.. அமெரிக்க சுற்றுலா பயணி பலாத்காரம்.. மயக்க மருந்து கொடுத்து வெறிச்செயல்
பெங்களூர்: கர்நாடகாவின் குடகு மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற அமெரிக்காவை சேர்ந்த பெண்ணின் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து 'ஹோம்ஸ்டே'-வில்' வைத்து ஊழியர் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர வைத்துள்ளது. மேலும் சம்பவத்தை மூடி மறைக்க முயன்றதாக 'ஹோம்ஸ்டே' உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகாவில் மிகவும் முக்கியமான சுற்றுலா தலமாக குடகு மாவட்டம் உள்ளது. இங்கு காவிரி ஆறு, காபி தோட்டங்கள், யானை முகாம்கள் உள்ளன. மலை பிரதேசம் என்பதால் குளுமையாக இருக்கும். இதனால் தான் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் அதிகமானவர்கள் வந்து செல்கின்றனர்.

குடகு மாவட்டத்தில் 'ஹோம்ஸ்டே' வசதிகள் உள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் சில நாட்கள் தங்கி இயற்கை அழகை ரசித்து செல்வது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் சுற்றுலா வந்தார்.
இந்த அமெரிக்க பெண் குட்டா கிராமத்தில் உள்ள 'ஹோம்ஸ்டே'-வில் தங்கினார். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஊழியர் அங்கு பணியாற்றி வந்தார். இவர் சமையல் தொழிலாளியாகவும், 'கேர் டேக்கராகவும்' பணியாற்றி வந்தார். இந்த ஊழியர் அமெரிக்க சுற்றுலா பயணியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்துள்ளார்.
அதுமட்டுமின்றி அமெரிக்க பெண் குடிக்கும் பானத்தில் மயக்கமருந்து கலந்து கொடுத்துள்ளார். அதில் அந்த பெண் மயங்கவே, ஊழியர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதோடு சம்பவம் குறித்து அந்த பெண் வெளியில் கூறிவிடுவார் என பயந்த ஊழியர்3 நாட்கள் அறையிலேயே பூட்டி வைத்துள்ளார். செல்போனை பிடுங்கி வைத்துகொண்டார்.
இருப்பினும் இந்த சம்பவம் பற்றி 'ஹோம்ஸ்டே' உரிமையாளருக்கு தெரிந்துவிட்டது. ஆனால் அவரும் ஊழியருக்கு ஆதரவாக அந்த பெண்ணின் அறையில் உள்ள வை-பை வசதி உள்பட பிற வசதிகளை துண்டித்துள்ளார். அந்த பெண் யாரையும் தொடர்பு கொள்ள முடியாத வகையில் உரிமையாளர் செயல்பட்டுள்ளார்.
அதன்பிறகு சம்பவம் குறித்து வெளியில் கூறக்கூடாது என்று மிரட்டி ஊழியர் அந்த பெண்ணை அனுப்பி உள்ளார். குடகில் இருந்து மைசூருவுக்கு வந்த பெண் சம்பவம் தொடர்பாக அமெரிக்க தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் அளித்தார். இதையடுத்து தூதரகம் உதவி வழங்கப்பட்டதோடு, போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதுபற்றி குடகு மாவட்ட எஸ்பி பிந்து மணி ஆர்கே கூறுகையில், ''சம்பவம் தொடர்பாக ஹோம்ஸ்டே உரிமையாளர், ஊழியர் என 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் மே 3ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்'' என்றார்.












Click it and Unblock the Notifications