மேகதாது அணை! தமிழகத்திற்கு 1 மாதம் டைம்! கர்நாடகாவில் தமிழ் படங்கள் ஓடாது- வாட்டாள் நாகராஜ் மிரட்டல்
பெங்களூர்: மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசு ஆட்சேபம் இல்லை என கூறாவிட்டால் கர்நாடகாவில் தமிழ் திரைப்படங்கள் ஓடாது என கன்னட அமைப்பை சேர்ந்த வாட்டாள் நாகராஜ் மிரட்டல் விடுத்துள்ளார். அதையும் ஒரு மாதத்திற்குள் கூற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடக சட்டசபையில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான ஆயத்தப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டதாகவும் மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் மேகதாது அணை கட்டி முடிக்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார்.

மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தீவிரமாக முயன்று வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் இது குறித்து தமிழக நீர் வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் தலைகீழாக நின்றாலும் கர்நாடகாவால் மேகதாது அணையை கட்ட முடியாது என பதிலடி கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் மேகதாது அணையை கட்ட வலியுறுத்தி தமிழக கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது வாட்டாள் நாகராஜ் கூறுகையில் மேகதாது அணை கட்ட தமிழக அரசு ஒரு மாதத்திற்குள் அனுமதிக்கவில்லை என்றால் தமிழ் படங்கள் ஓடாது. காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கவே மேகதாது அணை கேட்கிறோம் என நாகராஜ் தெரிவித்திருந்தார்.
மேகதாது அணை கட்டுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேகதாதுவில் அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடகம் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில் அதை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது நல்லதல்ல. காவிரி ஆற்றின் குறுக்கே தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடகத்திற்கு எந்த உரிமையும் இல்லை. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படியும், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படியும் கடைமடை பாசன மாநிலமான தமிழ்நாட்டின் ஒப்புதல் இன்றி மேகதாது அணையை கட்ட முடியாது. இதை மத்திய நீர்வளத்துறை அமைச்சர்களாக இருந்த உமாபாரதி உள்ளிட்டவர்கள் உறுதி செய்திருக்கிறார்கள். அவ்வாறு இருக்கும் போது மேகதாது அணைக்கான ஆயத்தப் பணிகளை கர்நாடக அரசு மேற்கொள்வதே சட்டவிரோதம் ஆகும்.
கர்நாடகத்தில் காவிரி மற்றும் துணை நதிகளின் குறுக்கே இப்போதுள்ள அணைகளின் கொள்ளளவு 114.57 டிஎம்சி ஆகும். இவ்வளவு கொள்ளளவுள்ள அணைகள் இருக்கும் போதே கர்நாடகம் தமிழகத்துக்கு தண்ணீர் தருவதில்லை. 70 டிஎம்சி கொள்ளளவுள்ள மேகதாது அணை கட்டப்பட்டால் கர்நாடக அணைகளின் கொள்ளளவு 184 டிஎம்சியாக அதிகரிக்கும். மேட்டூர் அணை கொள்ளளவை விட கிட்டத்தட்ட இரு மடங்கு தண்ணீரை கர்நாடகம் தேக்கி வைத்தால் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காது. காவிரி படுகை பாலைவனமாகிவிடும்.
ஆனால், மத்திய அரசும், தமிழக அரசும் இதைக் கருத்தில் கொள்ளாமல் கர்நாடகத்தின் செயல்களை கண்டுகொள்ளாமல் இருப்பதால் தான் அணைக்கான ஆயத்தப் பணிகளை முடிக்கும் அளவுக்கு கர்நாடகம் சென்றிருக்கிறது. மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்திற்கான முதல் துரோகம் கடந்த 2018 -ஆம் ஆண்டில் தான் இழைக்கப்பட்டது. அப்போது தான் மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதை வைத்துக் கொண்டு தான் மேகதாது அணைக்கான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயாரித்து, அதனடிப்படையில் அனுமதி கோரி வருகிறது.
மேகதாது அணைத் திட்டத்தைக் கைவிடுவதாக கர்நாடக அரசு அறிவிக்கும் வரை அம்மாநில அரசுடன் எந்த விதமான உறவையும், ஒத்துழைப்பையும் தமிழக அரசு வைத்துக் கொள்ளக் கூடாது. மக்களவைத் தொகுதிகள் மறுவரையறை குறித்து விவாதிக்க வரும் 22-ஆம் தேதி சென்னையில் தமிழக அரசு கூட்டியுள்ள 7 மாநில முதல்வர்கள் கூட்டத்தில் பங்கேற்க கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications