இங்கிட்டு அம்பேத்கர்.. அங்கிட்டு திருமாவளவன்.. கர்நாடகாவில் ‘மாஸ்’.. உற்சாகத்தில் சிறுத்தைகள்!
பெங்களூர்: தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்ததும், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் செய்துள்ளார் விசிக தலைவர் திருமாவளவன். அங்கு திருமாவுக்கு கிடைக்கும் ஆதரவு விடுதலை சிறுத்தைகளை உற்சாகப்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 89 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நாளை (ஏப்ரல் 26ஆம் தேதி) இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.

கர்நாடகாவில் திருமாவளவன்: கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், நேற்றுடன் அங்கு பிரச்சாரம் ஓய்ந்தது. கர்நாடகாவில் விசிக தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
முன்னதாக, கர்நாடகாவில் விசிக சார்பில் வேட்பாளர்கள் களமிறங்குவார்கள் என அறிவித்திருந்த திருமாவளவன், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தமது கட்சி வேட்பாளர்களை நிறுத்தாமல், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
காங்கிரஸுக்கு ஆதரவாக திருமா பிரச்சாரம்: கர்நாடகா மாநிலம், பெங்களூர் ரூரல் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் டி.கே.சுரேஷை ஆதரித்து ஆர். ஆர். நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கை சின்னத்துக்கு வாக்கு கேட்டு பரப்புரை மேற்கொண்டார் திருமாவளவன்.
அதேபோல, பெங்களூர் தெற்கு நாடாளுமன்றத் தொகுதி கோரமங்களா ராஜாஜி நகரில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டியைஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டு கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் திருமாவளவன்.
உற்சாக வரவேற்பு: பெங்களூர் மத்திய நாடாளுமன்றத் தொகுதியில் ஆஸ்ட்டின் டவுன் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மன்சூர் அலிகானை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார் திருமாவளவன். பெங்களூரில் இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட போது காங்கிரஸ் கட்சியின் சார்பில் பழங்களால் ஆன பிரமாண்ட மாலையை அணிவித்து திருமாவளவனை வரவேற்றனர்.
பிரமாண்ட சுவர் ஓவியம்: கர்நாடகாவில் திருமாவளவனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டிருப்பது விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. மேலும் கர்நாடகாவில் ஒரு இடத்தில் அம்பேத்கர், திருமாவளவன் ஓவியங்கள், அதற்கு மத்தியில் கர்நாடகா வரைபடம் ஆகியவை ஒரு பெரிய சுவரில் வரையப்பட்டுள்ளன.
அந்தச் சுவர் ஓவியம் முன்பு நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டுள்ளார் விசிக தலைவர் திருமாவளவன். கர்நாடகாவில் திருமாவளவனுக்கு இருக்கும் செல்வாக்கை குறிப்பிட்டு விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வன்னி அரசு பெருமிதம்: வன்னியரசு வெளியிட்டுள்ள பதிவில், "இந்த படத்தைப்பாருங்கள். கர்நாடக மாநிலத்தில் வரையப்பட்ட ஓவியம். புரட்சியாளர் அம்பேத்கருக்கும், பேராசான் தொல்.திருமாவளவன் அவர்களுக்கும் நடுவே கர்நாடக மாநில வரைபடம் வரையப்பட்டுள்ளது.
தமிழ்த்தேசிய அடையாளத்தோடு தொடங்கப்பட்டாலும் தேசிய இனங்களுக்கிடையே ஓர் ஐக்கியத்தை உருவாக்க வேண்டும் என தொடர்ந்து தலைவர் திருமாவளவன் அவர்கள் செயலுத்தியை மேற்கொண்டார். தமிழ்த்தேசிய இனத்துக்கு கன்னட தேசிய இனமோ தெலுங்கு தேசிய இனமோ பகையாக இருக்க முடியாது; இந்தியம் தான் பகையாக இருக்க முடியும் என முழங்கினார்.
இன்று கன்னட தேசிய இனக்குழு தமிழ்த்தேசியப் பெருந்தலைவரை ஏற்றுக்கொண்டதற்கு காரணம், மற்ற தேசிய இனங்களின் விடுதலைக்கும் களமாடுவதே காரணம். எழுச்சித் தமிழர் இப்போது தேசிய இனங்களின் விடுதலைப்போராளியாக நிமிர்ந்து நிற்பது நமக்குப் பெருமை!" எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் விசிக 2 இடங்களில் பானை சின்னத்தில் போட்டியிட்ட நிலையில், அண்டை மாநிலங்களிலும் விசிகவுக்கு கிடைத்து வரும் வரவேற்பு அக்கட்சியினருக்கு உற்சாகம் கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications