வீரப்பன் கொல்லப்பட்டு 15 வருடங்களுக்கு பிறகு பிடிபட்ட ஸ்டெல்லா.. கர்நாடக போலீஸ் தீவிர விசாரணை
பெங்களூர்: சந்தனக் கடத்தல் வீரப்பன் கொல்லப்பட்ட சுமார், 15 ஆண்டுகளுக்கு பிறகு, அவரின் கூட்டாளி என கருதப்படும் பெண் ஒருவர் கர்நாடக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக-தமிழக வனப்பகுதிகளை கிட்டத்தட்ட தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் வீரப்பன். இவரை தமிழக அதிரடிப்படையும், கர்நாடக அதிரடிப்படையும் தீவிரமாக தேடி வந்த நிலையில், சுமார் 15 வருடங்கள் முன்பு, அதாவது 2004ம் ஆண்டு, தமிழக அதிரடிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த நிலையில்தான், ஸ்டெல்லா மேரி எனப்படும் 40 வயதாகும் பெண்மணியை, கொள்ளேகால் கிரைம் பிராஞ்ச் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். இவர் 27 வருடங்களாக போலீசுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தலைமறைவாக இருந்தவர்.
யானையை சுட்டார்
தனது 13 வயதில், வீரப்பன் கூட்டத்தோடு, ஸ்டெல்லாவுக்கு பழக்கம் ஏற்பட்டதாம். "1993ம் ஆண்டு முதல் ஸ்டெல்லா தலைமறைவாகிவிட்டார். அவர் மீது, பயங்கரவாத மற்றும் சீர்குலைப்பு நடவடிக்கைகள் (தடுப்பு) (TADA) சட்டத்தின் கீழ் வழக்கு உள்ளது. வீரப்பனின் நெருங்கிய உதவியாளரான இவர், தனது கரும்பு வயலில் இருந்து யானைகளை விரட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கைது செய்யப்பட்டார்.
கூட்டாளி
துப்பாக்கியை பயன்படுத்தியதால் போலீசார் ஆச்சரியமடைந்தனர். "துப்பாக்கியை இயக்குவதற்கு அவருக்கு எப்படித் தெரியும் என்று போலீசார் துருவி துருவி கேள்வி எழுப்பியபோது, வீரப்பன் மற்றும் அவரது கும்பலுடன் அவர் கொண்டிருந்த தொடர்பு குறித்த தகவல் வெளியானது, " என்று சாம்ராஜ்நகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்.டி.ஆனந்த குமார் கூறினார்.
காதல் திருமணம்
வீரப்பனோடு தனது டீனேஜ் காலத்தில் காட்டில் வசிக்க வேண்டிய தேவை எழுந்தபோது, வீரப்பன் கூட்டாளிகளில் ஒருவரான வெள்ளையனுடன் காதல் ஏற்பட்டது. அவரையே திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், வெள்ளையன் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதால், வேலுசாமி என்பவரை திருமணம் செய்து கொண்டு, வாடகை நிலத்தில் தம்பதிகள் கரும்பு விவசாயம் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
விசாரணை
வீரப்பன் நடத்திய தாக்குதல்கள் குறித்து போலீசார் விசாரித்தபோது, பெண்களை வீரப்பன் நம்ப மாட்டார் என்றும், எனவே தாக்குதல் திட்டங்கள் குறித்து அவர் தன்னிடம் கூறியதில்லை என்றும் ஸ்டெல்லா கூறியுள்ளார். மேலும் ஒருமுறை வீரப்பன் பதுக்கி வைத்திருந்த பணத்தை தானும், தனது மைத்துனரும் திருடிவிட்டதாக கூறி, தங்களை அவர், கடத்திச் சென்று மிரட்டியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.