கர்நாடகா எல்லைகளில் பேருந்துகள் தடுத்து நிறுத்தம்.. பந்த் காரணமாக தமிழக வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு
பெங்களூர்: ஓசூர் வழியாக இயக்கப்படும் பேருந்துகள் மட்டுமல்லாது, ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிருந்தும் இயக்கப்படும் பேருந்துகளும் கர்நாடக எல்லைகளில் நிறுத்தப்பட்டிருக்கிறது.
காவிரி நீரை பெறுவதற்கு தமிழ்நாடு தொடர்ந்து கர்நாடக மாநிலத்திடம் போராடி வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் விநாடிக்கு 25,000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்று தமிழ்நாடு வலியுறுத்தியிருந்தது. இதனை கர்நாடகா ஏற்கவில்லை. எனவே உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு நாடியது. அதேபோல கர்நாடக அரசும் நீதிமன்றத்தை நாட காவிரி மேலாண்மை ஆணையமே இந்த விவகாரம் குறித்து முடிவெடுக்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆணையமானது, விநாடிக்கு 5,000 கனஅடி நீரை திறக்க கர்நாடகாவுக்கு கூறியது. ஆனால் கர்நாடக இதை ஏற்கவில்லை. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் போதுமான மழை இல்லாததாலும், ஒட்டுமொத்தமாக பருவமழை குறைந்ததாலும் நீர் வரத்து குறைவாக இருக்கிறது என்று கூறி இந்த நீரை திறக்க மறுத்துவிட்டது. இதனையடுத்து உச்சநீதிமன்றமானது, காவிரி மேலாண்மை ஆணையம் வழிகாட்டிய அளவுக்கு தண்ணீரை திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இப்படி இருக்கையில் இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 26ம் தேதியன்று காணொலி வாயிலாக காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு 18 நாட்கள் தொடர்ச்சியாக விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஆனால் கர்நாடக அரசு இந்த உத்தரவுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. அதுமட்டுமல்லாது மழை இல்லாததால் இவ்வளவு நீரை திறக்க முடியாது என்றும் கூறியுள்ளது.
மறுபுறம் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது என்று பல்வேறு கன்னட அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இன்று மாநிலம் தழுவிய பந்த் போராட்டத்தை கன்னட அமைப்புகள் நடத்துகின்றன. இதனால் தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. ஓசூர் வழியாக கர்நாடகாவின் பெங்களூர் செல்லும் தமிழக பதிவெண் கொண்ட பேருந்துகள் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இது தவிர ஈரோடு மாவட்டத்தின் பண்ணாரியிலிருந்து செல்லும் தமிழக பதிவெண் கொண்ட பேருந்துகள், நீலகிரியின் கக்கநல்லா சோதனைச் சாவடி, கூடலுரின் தொரப்பள்ளி வனத்துறை சோதனை சாவடியில், உதகையிலிருந்து மசினக்குடி வழியாக செல்லுமு் தமிழக பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில் கக்கநல்லா சோதனை சாவடி வழியாகதான் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவை ஏராளமான அளவில் கேரளாவுக்கு செல்கின்றன.












Click it and Unblock the Notifications