Exclusive: விஜய் சேதுபதி படங்களை ரிலீஸ் செய்ய விடமாட்டோம்.. ஓரணியில் திரண்ட கர்நாடக தமிழ் அமைப்புகள்
பெங்களூர்: சிங்கள தேசிய கொடியை மார்பில் குத்திக்கொண்டு தமிழ் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதியின் திரைப்படங்களை இனிமேல் கர்நாடகாவில் ஓட விடமாட்டோம் என்று கர்நாடக தமிழர் பாதுகாப்பு இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் உலக அளவில் மிகப்பெரிய சுழல் பந்து வீச்சாளராக வலம் வந்தார்.
தமிழரான அவர் இலங்கை கிரிக்கெட் அணிக்காக விளையாடி 800 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்தவர் ஆகும்.
முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் ஸ்ரீபதி என்பவர் பயோகிராபி படமாக இயக்குகிறார். இந்த படத்தில் முரளிதரன் கதாபாத்திரத்தில் தமிழ் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார்.
முரளிதரன் போல விஜய் சேதுபதி
இந்த படம் தொடர்பான மோஷன் போஸ்டர் நேற்று, வெளியாகியது. அதில் முத்தையா முரளிதரனின் பழைய தோற்றத்தைப் போலவே விஜய் சேதுபதியின் முகம் மற்றும் முடி வெட்டு உள்ளிட்டவை பக்காவாக பொருந்தி இருந்தது. இந்த நிலையில்தான், விஜய் சேதுபதிக்கு தமிழ்தேசியவாதிகள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
முரளிதரன் மீது குற்றச்சாட்டு
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிகட்ட இனப் போரின்போது இலங்கை அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர் முத்தையா முரளிதரன் என்று பரவலாக குற்றச்சாட்டு உண்டு. தமிழர்களுக்கு ஆதரவாக அவர் குரல் ஒலித்து இருந்தால், உலக அளவில் அதற்கு தனி கவனம் கிடைத்திருக்கும். ஆனால் அவர் சிங்கள அரசுக்கு தோள் கொடுத்தார் என்பது தமிழ் தேசியவாதிகள் குற்றச்சாட்டு.
ஹேஷ்டேக் டிரெண்ட்
இந்த நிலையில்தான், "விஜய் சேதுபதியால் வெட்கம்" என்று பொருள்படும் வகையில், டுவிட்டரில் விஜய் சேதுபதிக்கு எதிராக, தேசிய அளவில், ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டது. இந்த நிலையில் கர்நாடக தமிழர் பாதுகாப்பு இயக்கம் அமைப்பு, ஒரு எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டது. அதில் கூறியுள்ளதாவது: தமிழ் பட நடிகர் விஜய் சேதுபதி, பீட்சா, ரம்மி, 96 போன்ற படங்களில் நடித்து புகழ் அடைந்தவர். தமிழ்படங்களால் வளர்ந்தவர். ஆனால் முத்தையா முரளிதரன் என்ற, இலங்கை கிரிக்கெட் வீரர் ஈழப்படுகொலையை மகிழ்ச்சியான நாள் என பேசியவர்.
பணத்திற்காக எதையும் செய்வதா
இனப்படுகொலையாளன் ராஜபக்சவை போற்றிப் புகழ்ந்தவர். அப்பேர்பட்ட தமிழினத் துரோகியின் வாழ்க்கை வரலாற்று கதையில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக் கொண்டுள்ளது உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் வேலையை காட்டுகிறது. பணத்திற்காக எதையும் செய்ய துணிந்துள்ள, இதுபோன்ற சுயநலவாதிகள், தமிழினத்துக்கு எதிரானவர்களை நாம் கண்டிக்க தவறினால், நாளை எல்லோரும் தமிழர்களுக்கு எதிராக பேசத் தொடங்குவார்கள்.
கர்நாடக தமிழர்கள்
விஜய் சேதுபதி, "800" என்ற படத்திலிருந்து விலக வேண்டும். இல்லை என்றால் தமிழர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். எந்த வேகத்தில் வளர்ந்தாரோ, அதே வேகத்தில் சரிவார். விடுதலைப் புலிகளையும், தமிழர்களையும் இழிவுபடுத்தி யார் பேசினாலும் கர்நாடக தமிழர்கள் வேடிக்கை பார்க்க மாட்டார்கள். விஜய்சேதுபதியின் படங்களை கர்நாடகாவில் ஓட விடமாட்டோம். இவ்வாறு கர்நாடக தமிழர் பாதுகாப்பு இயக்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பல இயக்கங்கள் ஒன்றிணைகிறது
இது தொடர்பாக அந்த இயக்கத்தின் தலைவர் கோபி ஏகாம்பரம், 'ஒன்இந்தியா தமிழ்' இணையதளத்திடம் வழங்கிய பிரத்யேக பேட்டியின்போது கூறியதாவது: கர்நாடக தமிழர் பாதுகாப்பு இயக்கம் மட்டுமின்றி, கர்நாடகாவிலுள்ள பிற தமிழ் இயக்கங்களையும் இந்த விஷயத்தில் ஒன்றிணைத்து வருகிறோம். கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம், பெரியார் திராவிடர் கழகம், நாம் தமிழர், கர்நாடக தமிழர் பேரவை உள்ளிட்ட அனைவருமே ஒத்த திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.
எதிர்ப்பு உறுதி
"முரளிதரன் சாதனை தமிழர் என்பதால் அவர் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கிறேன், என்று விஜய் சேதுபதி கூறுகிறாரே, இலங்கை அரசுக்கு ஆதரவாக, விஜய் சேதுபதி நடிக்க வேண்டியதன் அவசியம் என்ன?" என்று நாம் எழுப்பிய கேள்விக்கு, பதிலளித்த கோபி ஏகாம்பரம், "முத்தையா முரளிதரன் ஈழப் படுகொலையை கொண்டாடியவர். அந்த இனப் படுகொலையை யாராலும் ஜீரணிக்க முடியாது. அப்படியிருக்கும்போது தமிழருக்கு எதிரான படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது அவர் வன்மத்தைக் காட்டுகிறது. ஈழப் பிரச்சினையில், மக்களின் கோபம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை ஆழம் பார்க்க இந்த படம் எடுக்கப்படுவதாக நாங்கள் நினைக்கிறோம். தமிழகத்திலுள்ள கட்சிகள் எப்படி ஒன்றிணைகிறார்களோ தெரியாது. ஆனால், கர்நாடகாவிலுள்ள தமிழ் அமைப்புகள், ஒன்றிணைந்து எதிர்ப்போம், என்றார் அழுத்தம் திருத்தமாக.