விராட் கோலி ‛பப்’பில் விதிமீறல்.. பறந்துபோன நோட்டீஸ்.. பெங்களூர் மாநகராட்சி எடுத்த அதிரடி முடிவு
பெங்களூர்: பெங்களூரில் செயல்பட்டு வரும் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு சொந்தமான ‛பப்' விதிமீறலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து பெங்களூர் மாநகராட்சி சார்பில் விராட் கோலியின் பப்புக்கு அதிரடியாக நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் விராட் கோலி. இவர் கிரிக்கெட்டுக்கு நடுவே மும்பை, பெங்களூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ரெஸ்டாரண்ட், பப்புகள் நடத்தி வருகிறார்.

அந்த வகையில் பெங்களூரில் விராட் கோலிக்கு சொந்தமான பப் ஒன்று உள்ளது. One8 Commune என்ற பெயர் கொண்ட இந்த பப் என்பது பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தின் அருகே அமைந்துள்ளது.
அதாவது எம்ஜிரோட்டில் உள்ள ரத்னம் வளாகத்தின் 6வது தளத்தில் இந்த பப் என்பது இயங்கி வரகிறது. விராட் கோலிக்கு சொந்தமான பப்பில் விதிமீறல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது பொதுவாக பப், ரெஸ்டாரண்ட்டுகள் உள்ளிட்டவை தீத்தடுப்பு நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக கூறி தடையில்லா சான்று பெற வேண்டும்.
ஆனால் விராட் கோலியின் இந்த பப் என்பது தீத்தடுப்பு தொடர்பாக தடையில்லா சான்றை பெறவில்லை. இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் குனிகல் நரசிம்மமூர்த்தி மற்றும் எச்எம் வெங்கடேஷ் ஆகியோர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் 29ம் தேதியே புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தான் தற்போது பெங்களூர் மாநகராட்சி நிர்வாகம் அதிரடியாக விராட் கோலியின் பப்புக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்த நோட்டீசை பெங்களூர் மாநகராட்சியின் சாந்திநகர் மண்டல சுகாதாரத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதாவது விராட் கோலியின் பப் இன்னும் 7 நாட்களில் தீத்தடுப்பு தொடர்பான தடையில்லா சான்றிதழை பெற வேண்டும். இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விராட் கோலியின் இந்த பப் இப்படியாக சர்ச்சையாக சிக்குவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு இந்த பப் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதாவது அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக பப் செயல்பட்டதாக இதற்கு முன்பு இந்த பப் மீது கப்பன் பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications