"தமிழர்கள் இங்கு வேலை செய்றாங்க".. மேகதாது அணையை எதிர்க்காதீங்க! டிகே சிவக்குமார் சொன்ன வார்த்தை
சென்னை: காவிரி குறுக்கே மேகதாதுவில் புதிதாக அணை கட்டுவதில் கர்நாடகா உறுதியாக உள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்நிலையில் தான்''தமிழ்நாட்டில் இருந்து வந்து இங்கு (பெங்களூர் உள்பட கர்நாடகாவில்) நிறையபேர் வேலை செய்கின்றனர். அதேபோல் இங்கிருந்து நிறைய பேர் தமிழ்நாடு சென்று வேலை செய்கின்றனர். நாம் அதற்கு பிரச்சனை செய்ய வேண்டுமா?. கிடையாது. நான் அவர்களுடன் அமர்ந்து பேச எப்போதும் தயாராக இருக்கிறேன்'' என்று கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக டிகே சிவக்குமார் செயல்பட்டு வருகிறார். கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே ராமநகர் மாவட்டம் மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதில் உறுதியாக உள்ளது. குறிப்பாக மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்பதில் முதல்வர் டிகே சிவக்குமார் உறுதியாக உள்ளார்.

மேகதாது அணை டிகே சிவக்குமாரின் சொந்த மாவட்டமான ராமநகர் மாவட்டத்தில் வருகிறது. இதனால் தான் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் மேகதாது அணை கட்டும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் தான் தற்போது முதல்வராகி உள்ளதால் மீண்டும் அவர் மேகதாது அணை கட்டுவதில் உறுதியாக உள்ளார்.
இதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீர் கிடைக்காமல் போகலாம் என்ற அச்சம் உள்ளது. இதனால் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், விவசாய சங்கத்தினர் தொடர்ந்து மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் மேகதாது அணை விவகாரம் பற்றி முதல்வர் டிகே சிவக்குமாரிடம் இன்று கேள்வி கேட்கப்பட்டது. அப்போது பத்திரிகையாளர் ஒருவர்,''மேகதாது அணை திட்டத்தை தடுக்க தமிழ்நாடு சட்ட வழிமுறைகளை தேடுகிறதே?'' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு டிகே சிவக்குமார்,''மேகதாது திட்டம் என் இதயத்துக்கு நெருக்கமானது மட்டுமில்லை. கர்நாடகாவை விட தமிழ்நாட்டுக்கு தான் இந்த திட்டத்தால் அதிக பலன் கிடைக்கும்.
தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டிய 177 டிஎம்சி தண்ணீர் கொடுக்க நாங்கள் ரெடியாக இருக்கிறோம். இதுபற்றி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும் இது. அதேபோல் மேகதாது அணை கட்ட மத்திய நீர்வள ஆணையம் தான் அனுமதி கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 177 டிஎம்சியில் இருந்து ஒரு வாளி தண்ணீரை கூட நாம்மால் எடுக்க முடியாது. பெங்களூரில் தற்போது மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இதனால் பெங்களூர் மக்களின் குடிநீருக்காக தான் இந்த அணை தண்ணீர் பயன்படுத்தப்பட உள்ளது.
நான் அவர்களுடன் (தமிழ்நாடு அரசு) அமர்ந்து பேச எப்போதும் தயாராக இருக்கிறேன். அதில் எந்த பிரச்சனையும் இல்லை. தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்கட்டும். கர்நாடகாவை சேர்ந்தவராக இருக்கட்டும். இருவரும் இந்தியர்கள். ஒரே தண்ணீரை குடித்து வாழ்பவர்கள். காவிரி தண்ணீர் விவசாயத்துக்கும் வேண்டும். குடிநீருக்கும் வேண்டும். அனைத்து உயிர்களுக்கும் வேண்டும். எல்லா தொழிற்சாலைகளுக்கும் வேண்டும்.
தமிழ்நாட்டில் இருந்து வந்து இங்கு நிறையபேர் வேலை செய்றாங்க.. அதேபோல் இங்கிருந்து நிறைய பேர் தமிழ்நாடு சென்று வேலை செய்றாங்க. நாம் அவர்களை பிரிக்க வேண்டுமா?. கிடையாது. இந்த திட்டம் கர்நாடகாவை காட்டிலும் தமிழ்நாட்டுக்கு தான் அதிக பலன் கிடைக்கும். கோடைகாலங்களில் சேமித்து வைத்த தண்ணீரை அவர்களுக்கு வழங்க முடியும். தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுக்க வேண்டும். அதை கொடுப்போம்.
அதேபோல் அணையில் தண்ணீர் தேக்கிவைத்துவிட்டு தட்டுப்பாடு வரும்போது கர்நாடகாவில் மண்டியா, ஹாசன், சாம்ராஜ்நகர், துமகூரு மாவட்டங்களுக்கும் இங்கிருந்து தண்ணீர் கொடுப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும் வாழ வேண்டும். கர்நாடகாவை சேர்ந்தவர்களும் வாழ வேண்டும். அணையில் மின்சாரம் தயாரிப்பு என்பதில் கர்நாடகாவிற்கு லாபம் இருக்கு. அதனை நான் மறுப்பதற்கு இல்லை. 400 மெகாவாட் மின்சாரம் வரை தயாரிக்க முடியும். இந்த திட்டம் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
மேகதாது திட்டத்துக்கு அனுமதி வழங்குவது குறித்து மத்திய நீர் ஆணையம் விரைவாக தீர்மானிக்க வேண்டும். நாங்கள் தமிழ்நாடு விவசாயிகளின் நலனை காக்க வேண்டும். மேகதாது அணைியல் ஒரு பாக்கெட் நீரை கூட பாசனத்துக்கு பயன்படுத்த மாட்டோம். பெங்களூருவில் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. நாங்கள் கிருஷ்ணா ஆற்றில் இருந்து நீரை கொண்டு வர முடியாது. காவிரி ஆறு ஒன்றுதான் எங்கள் முன்பு உள்ள ஒரே வாய்ப்பு.
தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் கடந்த 40 ஆண்டுகளாக மேகதாது திட்டத்தை எதிர்ப்பதை தங்களது நோக்கமாக கொண்டு செயல்படுகிறார்கள். அவர்களின் அரசியலில் நாங்கள் தலையிடுவது இல்லை. உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை கூறியுள்ளது. தமிழ்நாட்டில் அரசியல் உள்நோக்கத்தில் இதற்கு எதிராக பேசுகிறார்கள்.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு வேறு என்ன உள்ளது?. கர்நாடகம் 177 டி.எம்.சி. நீர் திறக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறியது. இதை நாங்கள் ஏற்கவில்லையா?. இந்த விஷயத்தில் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பார்கள். இந்த விஷயத்தில் நாங்கள் யாரும் அரசியல் செய்யவில்லை. இரண்டு மாநில மக்களின நலனை காக்க வேண்டும்.
கடந்த ஆண்டுகளில் மழை அதிகமாக பெய்தபோது 400 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீர் கடலில் வீணாக கலந்தது. தமிழ்நாட்டில் காவிரி ஆற்றின் பகுதிகளில் நிறைய அணைகளை கட்டுகிறார்கள். நாங்கள் அவற்றுக்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. அவர்களின் மண்ணில் அவர்கள் அணை கட்டி கொள்கிறார்கள்.
இதே விஷயம் குறித்து உச்சநீதிமன்றத்திலும் வாதிடப்பட்டது. இந்த திட்டத்துக்கு நாங்கள் நிதி உதவியோ அல்லது வேறு ஏதேனும் உதவியோ கேட்கவில்லை. இந்த அணையால் தமிழ்நாட்டுக்கு வறட்சி காலங்களில் தண்ணீர் திறக்க முடியும். மிக குறைந்த செலவில் இந்த திட்டத்தை அமல்படுத்துவோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications