தக் லைஃப் படத்தை திரையிட விரும்புறோம்.. வாங்க உட்காந்து பேசலாம்.. கமலுக்கு கர்நாடக வர்த்தக சபை பதில்
பெங்களூர்: கமலின் தக் லைஃப் திரைப்படத்தை திரையிட விரும்புவதாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபை பதில் அளித்துள்ளது. பிரச்சினையை பேசி தீர்த்து தக் லைஃப் படத்தை வெளியிடுவதற்கான வழியை பார்ப்போம். கர்நாடகாவில் கமலுக்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம் என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தெரிவித்துள்ளது. கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவருக்கு கமல் கடிதம் எழுதியிருந்த நிலையில் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளது.
கன்னட மொழி குறித்து பேசியதற்கு நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கன்னட அமைப்பு மற்றும் கர்நாடக திரைப்பட வர்த்தக சபையும் தெரிவித்து இருந்தது. மேலும் கமலின் படத்தை திரையிட்டால் தியேட்டர்களை தீயிட்டு கொளுத்துவோம் என்று கன்னட அமைப்புகள் தெரிவித்ததால், தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்புக்கு உத்தரவிடக் கோரி கமல்ஹாசன் தரப்பு கர்நாடக உயர்நீதிமன்றத்தை நாடியது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நாக பிரசன்னா, தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என கமல்ஹாசன் சொல்வதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? கமல்ஹாசனாக இருந்தாலும் சரி வேறு யாராக இருந்தாலும் சரி இது போல் மக்கள் மனம் புண்படும்படி பேசக் கூடாது. ரூ 300 கோடி போட்டு படம் எடுத்திருந்தால் கமல் மன்னிப்பு கேட்கலாமே.. என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை ரிலீஸ் செய்து சில கோடி லாபம் பார்க்க வேண்டும் என்றால் மன்னிப்பு ஒன்று தான் தீர்வு என நீதிபதி கூறினார். இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் கர்நாடக திரைப்பட வர்த்தக அமைப்புக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், கன்னடத்தை சிறுமைப்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற நோக்கத்தில் அப்படி பேசினேன்.
நான் பேசிய பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது. நான் சிவராஜ்குமார் மீது உண்மையான பாசத்துடன் சொன்னது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது. இதனால் சிவராஜ்குமார் பல்வேறு அவமானங்களை சந்தித்தது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. என்று தெரிவித்து இருந்தார். மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது இந்த கடிதம் சமர்ப்பிக்கப்பட்டது. அதை வாசித்த நீதிபதி, இதில் மன்னிப்பு என்ற வார்த்தையே இல்லை என்று கூறினார்.
ஏன் சுற்றி வளைக்கிறீர்கள். நீங்கள் மன்னிப்பு கேட்குமாறு நீதிமன்றம் கேட்கவில்லை. பிலிம் சாம்பர்தான் கேட்கிறது என நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து கமல்ஹாசன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாகவும், மேலும் இதற்கு ஒரு வார கால அவகாசம் வேண்டும் என்று கூறினார். இதையடுத்து நீதிபதி இந்த வழக்கை வரும் 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் தான் கமல்ஹாசன் எழுதிய கடிதத்துக்கு, கர்நாடக திரைப்பட வர்த்தக அமைப்பு பதில் தெரிவித்துள்ளது. இதில் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றும், கர்நாடகத்திலும் கமல் ரசிகர்கள் அதிகம் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது. கமலின் தக் லைஃப் திரைப்படத்தை திரையிட விரும்புகிறோம். பிரச்சினையை பேசி தீர்த்து தக் லைஃப் படத்தை வெளியிடுவதற்கான வழியை பார்ப்போம்.
கர்நாடகாவில் கமலுக்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். பேச்சுவார்த்தைக்கு கமல்ஹாசனுடன் தயாராக உள்ளோம் என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications