‛‛கவனம் பெற்ற பதில்’’.. அரசியலுக்கு வருகிறாரா இன்போசிஸ் நாராயணமூர்த்தி? என்ன சொன்னார் தெரியுமா?
பெங்களூர்: இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான நாராயணமூர்த்தியிடம் அரசியலில் ஈடுபட வாய்ப்புள்ளதா? என கேள்வி கேட்கப்பட்ட நிலையில் அவர் அளித்த பதில் என்பது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
இந்தியாவில் உள்ள முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர் நாராயணமூர்த்தி. இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர்களில் ஒருவர். இதன்மூலம் இன்போசிஸ் நாராயணமூர்த்தி என்ற பெயரில் அறியப்பட்டு வருகிறார். இவரது மனைவி சுதா மூர்த்தி. இவரும் சமூக சேவைகள் மூலம் மக்கள் பணியாற்றி வருகிறார்.

இந்த தம்பதியின் மகள் அக்சதா மூர்த்தியின் கணவரான ரிஷி சுனக் தான் பிரிட்டன் பிரதமராக உள்ளார். இதனால் இன்போசிஸ் நாராயணமூர்த்தி மற்றும் அவரது குடும்பம் என்பது இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் புகழ் பெற்றுள்ளது.
ஏற்கனவே இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்து அவர் ஓய்வு பெற்ற நிலையில் தற்போது பொது நிகழ்ச்சிகளில் அதிகமாக பங்கேற்று வருகிறார். குறிப்பாக நாராயணமூர்த்தி பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசி வருகின்றனர். மேலும் தொலைக்காட்சிகளில் நேர்க்காணல்களில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் தான் என்டி டிவிக்கு இன்போசிஸ் நாராயணசாமி தனது மனைவி சுதா மூர்த்தியுடன் பேட்டியளித்தார்.
இந்த பேட்டியில், ‛‛அரசியலில் ஈடுபடும் திட்டம் இருக்கிறதா?'' என்ற கேள்வி நாராயணமூர்த்தியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‛‛எனக்கு வயதாகிவிட்டது என நினைக்கிறேன். ஏனென்றால் இப்போது 78 வயது ஆகிறது. எனது பேரக்குழந்தைகளை முன்னேற்றமடைய செய்ய வேண்டிய நேரம் இது என்று நினைக்கிறேன். மேலும் சகஊழியர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது, இயற்பியல், கணிதம், பொருளாதாரம், தத்துவங்கள் உள்ளிட்டவற்றறை படிக்க வேண்டிய காலம் என நான் நினைக்கிறேன். அதோடு இசையை ரசிக்க வேண்டிய நேரம் இது'' எனக்கூறி அவர் அரசியலுக்கு வரமாட்டேன் என்பதை உறுதி செய்தார்.
அதேபோல் அவரது மனைவி சுதா மூர்த்தியும், ‛‛பொதுமக்களுக்கு சேவை செய்ய அரசியலுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. நான் பொதுச்சேவைகளை செய்துள்ளேன். மக்களுக்கு உதவி உள்ளேன். 14 தேசிய பேரிடர்கள், கொரோனா பிரச்சனைகளை கையாண்டு இருக்கிறேன். இதற்கு எந்த பதவியும் தேவையில்லை'' என்றார்.
முன்னதாக கடந்த ஆண்டு நாராயண மூர்த்தி கூறிய கருத்து என்பது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது, ‛இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும்'' என கூறினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளப்பியது. ஒருநாளைக்கு 8 மணிநேரம் தான் வேலை. வாரத்தில் ஒருநாள் விடுப்பு என்ற நடைமுறை இந்தியாவில் உள்ள நிலையில் அவரது இந்த கருத்தை பலரும் விமர்சிக்க தொடங்கினர். இது பெரிய அளவில் விவாதமாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications