இதுதான் சித்தராமையா.. முதல் கூட்டத்திலேயே அதிரடி.. உள்ளே புகுந்த டிகே சிவக்குமார்.. என்ன சொன்னார்
பெங்களூர்: கர்நாடக முதல்வரான சித்தராமையா போலீஸ் உயர் அதிகாரிகளுடன் முதல் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். முதல் கூட்டத்திலேயே அவர் பல்வேறு முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், அதைப் பொய்யாக்கும் வகையில் காங்கிரஸ் வெற்றியைப் பதிவு செய்தது.

அங்கே மொத்தம் 224 தொகுதிகள் இருக்கும் நிலையில், காங்கிரஸ் 135 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து காங்கிரஸின் சித்தராமையா முதல்வராகவும் டிகே சிவக்குமார் துணை முதல்வராகவும் பதவியேற்றார்.
கர்நாடகா: முதல்வராக பதவியேற்ற முதல் நாளே காங்கிரஸ் அங்கே அளித்த 5 வாக்குறுதிகளை நிறைவேற்றினார் சித்தராமையா. அதைத் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை அவர் தொடர்ச்சியாக எடுத்து வருகிறார். இதனிடையே சமீபத்தில் நேற்றைய தினம் கர்நாடகாவில் உள்ள முக்கிய போலீஸ் அதிகாரிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டிகே சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அந்தக் கூட்டத்தில் கர்நாடக மாநிலத்தில் கலாச்சார காவலர்களைப் போல போலீசார் செயல்படுவதை முற்றிலுமாக ஒழிக்குமாறு உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு அம்மாநில முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். மேலும், சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தவே போலீசார் உள்ளதாகவும், கடமையை நிறைவேற்றும் போது பாரபட்சம் மற்றும் மத ரீதியான பாகுபாட்டைக் காட்டக் கூடாது என்றும் சித்தராமையா வலியுறுத்தினார்.

சித்தராமையா: கர்நாடக முதல்வராகப் பதவியேற்ற பிறகு போலீஸ் உயிர் அதிகாரிகளுடன் நடந்த முதல் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய சித்தராமையா, ஒரு பகுதியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என்று எச்சரித்தார். மேலும், சமூக ஊடகங்களில் வெறுப்பு மற்றும் பொய்களைப் பரப்பி நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.
அந்தக் கூட்டத்தில் சித்தராமையா மேலும் பேசுகையில், "போலீசார் மக்களுக்கு நண்பர்களாக இருக்க வேண்டும். புகார் அளிக்க வரும் மக்களிடம் அவர்கள் கண்ணியமாக இருக்க வேண்டும்.. ரவுடிசம், கிளப், போதைப்பொருள் போன்ற சம்பவங்கள் எந்தவொரு போலீஸ் நிலை எல்லைக்குள் நடக்கிறதோ.. அதற்குச் சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் மட்டுமல்ல, டி.சி.பி-க்களும் பொறுப்பேற்க வேண்டும்.. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

கலாச்சார காவலர்கள்: சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் போது, மதங்களை வைத்து எந்தவொரு பாகுபாடும் காட்டக் கூடாது. அனைவரையும் சமமாகப் பார்க்க வேண்டும்.. சமமாகப் பாதுகாக்கப்பட வேண்டும்.. குறிப்பாக மற்றொன்றைத் தெளிவாகச் சொல்லிக் கொள்கிறேன். கர்நாடகாவில் போலீசார் சிலர் கலாச்சார காவலர்களைப் போலச் செயல்பட்டு வருகிறார்கள். அந்த முறைக்கு நாம் இன்றுடன் முடிவு கட்ட வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார்.
சமூக வலைத் தளங்களில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான கருத்துகளைப் பதிவிட்டு சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் நபர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் சித்தராமையா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
டிகே சிவக்குமார்: இந்தக் கூட்டத்தில் டிகே சிவக்குமாரும் கலந்து கொண்டார். முந்தைய பாஜக ஆட்சியில் நடந்த சில பழைய சம்பவங்களைக் குறிப்பிட்ட டிகே சிவக்குமார், போலீசார் காவிமயமாக்கலை தற்போதைய கர்நாடக அரசு நிச்சயம் துளியும் அனுமதிக்காது என்று உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தார். மேலும் டிகே சிவக்குமார் பேசுகையில், "பாஜக ஆட்சியின் போது சித்தராமையா, நான் என பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை போலீஸார் பதிவு செய்தனர்..
இனிமேல் எந்தவொரு கட்சியினர் மீதும் பொய்யான நடவடிக்கை எடுக்கக் கூடாது. ஏனென்றால் எங்களுக்கு யார் மீதும் வெறுப்பு இல்லை.. இதுபோன்ற நடவடிக்கையில் எங்களுக்கு நம்பிக்கையும் இல்லை. நீங்கள் மாறுங்கள், பழையதை அப்படியே விட்டு விடுங்கள். இப்போது நமக்கு புதிய வேலை இருக்கிறது. அதை ஆரம்பிக்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications