ஜோதிடரிடம் நல்ல நேரம் குறித்து போலீசாருடன் சென்ற ரேவண்ணா? கைதாகும்போது என்ன நடந்தது? பின்னணி
பெங்களூர்: பாலியல் புகாரில் சிக்கிய தேவகவுடாவின் மகனும், பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தையுமான ரேவண்ணாவை நேற்று சிறப்பு விசாரணை குழுவினர் அதிரடியாக கைது செய்தனர். பெண்ணை கடத்தி சிறை வைத்ததாக அளிக்கப்பட்ட புகாரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் ஜோதிடர் கூறிய நேரத்தில் அவர் தனது தந்தை தேவகவுடாவின் வீட்டில் இருந்து வெளியே வந்து போலீசாருடன் சென்றதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் ரேவண்ணா கர்நாடகாவில் ஹோலேநரசிப்புரா எம்எல்ஏவாக உள்ளார். அவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணா ஹாசன் எம்பியாக உள்ளார். மீண்டும் பிரஜ்வல் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணியில் ஜேடிஎஸ் வேட்பாளராக போட்டியிட்டுள்ளார்.
இந்த தொகுதிக்கு கடந்த மாதம் 26ம் தேதி தேர்தல் நடந்தது. அப்போது அவரது ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் ஜெர்மனி சென்றுவிட்டார். இந்த ஆபாச வீடியோ தொடர்பாக சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே தான் ரேவண்ணா வீட்டில் வேலை செய்த பணிப்பெண் ரேவண்ணா மற்றும் பிரஜ்வல் மீது பாலியல் புகாரளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருவரையும் விசாரணைக்கு அழைத்து எஸ்ஐடி நோட்டீஸ் வழங்கியும் அவர்கள் ஆஜராகவில்லை. இதற்கிடையே தான் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான பெண் ஒருவரை விசாரணைக்கு செல்ல விடாமல் ரேவண்ணா கடத்தி சிறை வைத்ததாக மைசூர் மாவட்டம் கேஆர் நகர் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ரேவண்ணா முன்ஜாமீன் கோரிய நிலையில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று தள்ளுபடி செய்தது. இதையடுத்து இன்று மாலையில் ரேவண்ணா பெங்களூர் பத்மநாபநகரில் உள்ள தனது தந்தையும், முன்னாள் பிரதமருமான தேவகவுடாவின் இல்லத்தில் இருந்தார். அங்கு சென்று ரேவண்ணாவை எஸ்ஐடி போலீசார் கைது செய்தனர். விசாரணைக்காக வீட்டில் இருந்து அழைத்த செல்லப்பட்ட ரேவண்ணா இரவில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் தான் ரேவண்ணா கைது குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது ரேவண்ணாவின் முன்ஜாமீன் மனு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து ஏற்கனவே சம்மன் அனுப்பபப்பட்டுள்ளதால் எஸ்ஐடியால் கைது செய்யப்படலாம் என ரேவண்ணா நினைத்தார். இதனால் அவர் தனது தந்தையான முன்னாள் பிரதமர் தேவகவுடா வீட்டில் பதுங்கியதாக கூறப்படுகிறது.
தேவகவுடா முன்னாள் பிரதமர் என்பதால் அவரது வீட்டுக்கு போலீசார் வரமாட்டார்கள் என நினைத்து ரேவண்ணா இந்த முடிவை எடுத்துள்ளார். ஆனால் சிறப்பு விசாரணை குழுவினர் தேவகவுடா வீட்டை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். ரேவண்ணா, தேவகவுடா வீட்டில் இருப்பதையும் அவர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து முன்ஜாமீன் மனு தள்ளுபடி ஆகும் வரை காத்திருந்த சிறப்பு விசாரணை குழுவினர் தேவகவுடா வீட்டுக்கு சென்றனர்.
அப்போது தேவகவுடாவின் வீட்டில் இருந்த ரேவண்ணா வீட்டை விட்டு வெளியே வரவில்லை. வீட்டின் கதவு பூட்டியே இருந்தது. இதனால் சிறப்பு விசாரணை குழுவினர் சில நிமிடங்கள் காத்திருந்தனர். அதன்பிறகு ரேவண்ணா வீட்டில் இருந்து வெளியே வந்தார். ரேவண்ணா சரியாக மாலை 6.50 மணிக்கு வீட்டை விட்டு வெளியே வந்தார். இந்த நேரத்தை குறித்து கொடுத்தவர் அவரது ஜோதிடர் என கூறப்படுகிறது. இந்த நேரத்தில் வெளியே சென்றால் ஆபத்தில் இருந்து தப்பலாம் என ஜோதிடர் கூறியதை நம்பி ரேவண்ணா மாலை 6.50 மணிக்கு வெளியே வந்து போலீசாருடன் விசாரணைக்கு சென்றார்.
அதன்பிறகு ரேவண்ணாவை பெங்களூரு கேஆர் நகரில் உள்ள சிறப்பு புலனாய்வு குழு அலுவலகத்தில் வைத்து போலீஸ் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினர். அதன்பிறகு அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்து கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications