சிலையை தொட்டதால் "ஃபைன்"! வீட்டில் சாமி படங்களை தூக்கிய குடும்பம்! பதிலுக்கு வந்த அம்பேத்கர் படம்
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் சாமி சிலையை தொட்டதற்காக பட்டியலினத்தை சேர்ந்த சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் தற்போது சிறுவனின் வீட்டிலிருந்த சாமி படங்களை அகற்றிவிட்டு அங்கு புத்தர் மற்றும் அம்பேத்கர் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சிறுமியின் தாய் எவ்வளவோ கெஞ்சியும் சாமி தீட்டாகிவிட்டது எனவே இதனை கழிக்க ரூ.60 ஆயிரம் கொடுத்தே ஆக வேண்டும் என கோயில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பஞ்சாயத்து தலைவர்கள் வற்புறுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சாமி சிலையை தொட்ட சிறுவனுக்கு ரூ.60000 பைன்!
வழக்கம்
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள உள்ளேரஹல்லியில் அமைந்துள்ளது இந்து மதத்தின் பூதம்மா கோயில். கிராம தெய்வமான இக்கோயிலுக்குள் காலங்காலமாக பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் செல்வதை தவிர்த்து வந்துள்ளனர். ஆனால் அவர்கள் செல்லக்கூடாது என்கிற கட்டுப்பாடு எதுவும் இல்லையென்றாலும், இவ்வூரில் விநோதமான பழக்கம் ஒன்று கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. அதாவது, பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் இக்கோயிலுக்குள் சென்றால் சாபத்திற்கு ஆளாகி விடுவார்கள் என்பதால் இவர்கள் கோயிலுக்குள் செல்வதில்லை. இது பழக்கமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
ஊர்வலம்
இப்படி இருக்கையில் கடந்த வாரம் இந்த பூதம்மா சாமி சிலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டிருக்கிறது. இந்த சிலையை பார்த்து ஆச்சரியமடைந்த பட்டியலினத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் கோயில் கருவறைக்குள் சென்று சிலையை தொட்டு பார்த்திருக்கிறான். இதைக்கண்ட இதர சமூகத்தினர் பஞ்சாயத்து கூட்டி சிறுவனின் குடும்பத்தினரை கிராமத்தினர் முன்னர் அவமானம் செய்துள்ளனர். மேலும், சிறுவன் தொட்டதால் சாமி தீட்டாகி விட்டது என்றும், இதனை கழிக்க ரூ.60 ஆயிரம் அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
அபராதம்
ஆனால் சிறுவனின் குடும்பம் கூலி வேலை செய்து வருவதால் இவ்வளவு பெரிய தொகையை எங்களால் செலுத்த முடியாது என்று கூறியுள்ளனர். இதை ஏற்காத பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் ஊர் நிர்வாகிகள் குடும்பத்தினரை மேலும் இழிவுபடுத்தியுள்ளனர். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த 'அம்பேத்கர் சேவா சமிதி' எனும் தலித் நல அமைப்பினர் இந்த பிரச்னையில் தலையிட்டு பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் ஊர்க்காரர்களின் கருத்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
வழக்குப்பதிவு
பின்னர் இது தொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இதற்கு காரணமானவர்கள் மீது சிவில் உரிமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது இதனைத்தொடர்ந்து சிறுவனின் குடும்பத்தினர் தங்கள் வீடுகளில் இருந்த இந்து மத தெய்வங்களின் படங்களை அகற்றிவிட்டு அங்கு புத்தர் மற்றும் அம்பேத்கரின் படங்களை வைத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.