கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் நானே மீண்டும் முதல்வர்.. பற்றவைத்த பசவராஜ் பொம்மை! அப்போ அவரு?
பெங்களூர் : கர்நாடகாவில் பாஜக வென்றால் அடுத்த முதல்வராக சிடி ரவி, பிஎல் சந்தோஷ் ஆகியோரில் ஒருவர் முதலமைச்சராக வரக்கூடும் எனப் பேச்சுகள் கிளம்பியுள்ள நிலையில், பாஜக ஆட்சிக்கு வந்தால் நானே மீண்டும் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
கர்நாடகா சட்டசபைத் தேர்தல் வரும் மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. ஆளும் பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், பாஜக தரப்பில் பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களும், காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, பிரியங்கா போன்ற தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் அடுத்த முதல்வராக சித்தராமையா வருவாரா டிகே சிவகுமார் வருவாரா என்ற குழப்பம் இருக்கிறது. அதேபோல, பாஜகவில் பசவராஜ் பொம்மை குறித்து பெரிய அளவில் அதிருப்தி நிலவுவதால் பாஜகவிலும் அடுத்த முதல்வர் யார் என்பதில் குழப்பமே நிலவுகிறது. எடியூரப்பா, பசவராஜ் பொம்மைக்கு மாற்றாக வேறொருவர் வரக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
கர்நாடகாவின் தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மையையே முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவதாக கூறப்படுகிறது. கர்நாடக சட்டசபை தேர்தலில் பசவராஜ் பொம்மை தலைமையில் சட்டசபை தேர்தலை சந்திப்பதாகவும், பாஜக வெற்றி பெற்றால் அவர் மீண்டும் முதலமைச்சர் ஆவார் என்றும் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார்.

இதற்கிடையே முன்னாள் அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா, சி.டி.ரவி அடுத்த முதல்வராக வர வாய்ப்புள்ளது என்கிற ரீதியில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. கர்நாடகா முதல்வராக பசவராஜ் பொம்மை இருக்கும் நிலையில், சி.டி.ரவி, அடுத்த முதல்வராக வரவாய்ப்புள்ளது என்ற அர்த்தத்தில் கே.எஸ்.ஈஸ்வரப்பா பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து விளக்கம் அளித்த ஈஸ்வரப்பா, 'கர்நாடகாவின் அடுத்த முதல்வராக பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவியின் பெயரை குறிப்பிட்டுப் பேசவில்லை. கட்சியின் முதல்வர் வேட்பாளரை தீர்மானிக்கும் அதிகாரம் எனக்கு இல்லை. சி.டி.ரவி சிறந்த தலைவராக சிறப்பாக கட்சிப் பணியை ஆற்றி வருகிறார் என்று தான் பேசினேன்' என்று கூறினார். இதேபோல, பி.எல்.சந்தோஷ் முதல்வராகக்கூடும் என்ற பேச்சும் ஓடுகிறது.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பசவராஜ் பொம்மை, "என் மீது இருக்கும் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு காரணமாக எங்கள் கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா என்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்து இருக்கிறார். தலைமையின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுப்பேன். பாஜகவை மீண்டும் கர்நாடகாவில் ஆட்சி கட்டிலில் அமர்த்த கடுமையாக உழைப்பேன்.
பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிப்பது உறுதி. பாஜகவை பொறுத்தவரை யார் முதல்வராக இருக்கிறாரோ, அவரது தலைமையில் தேர்தலை சந்திப்பது தான் வாடிக்கையாக நடந்து வருகிறது. அடுத்த முதலமைச்சர் யார் என்பதை எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திலும், பாஜக மேலிட தலைவர்களும் சேர்ந்து ஆலோசித்து முடிவு எடுப்பார்கள். கட்சி எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்." என்றார்.












Click it and Unblock the Notifications