சந்திரயான் 3: இவ்ளோ கஷ்டப்பட்டு அனுப்பி.. வெறும் 14 நாள் மட்டுமே ஆய்வு.. ஏன்? பெரிய காரணமே இருக்கு!
பெங்களூர்: சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் மற்றும் ரோவர் கருவிகள் நிலவின் தென் துருவத்தில் 14 நாட்கள் மட்டுமே ஆய்வு செய்ய இருக்கிறது. இந்த 14 நாட்களில் என்ன மாதிரியான ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறது.. ஏன் வெறும் 14 நாளில் ஆய்வை முடித்து விடுகிறது என்பதற்கான காரணத்தை இங்கே பார்க்கலாம்.
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ, கடந்த 2019 ம் ஆண்டு சந்திரயான்-2 என்ற விண்கலத்தை விண்ணில் ஏவியது. பல்வேறு கட்ட பயணங்களுக்கு பின்பு சந்திரயான்-2 விண்கலம், 2019 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிலவின் சுற்று வட்டப் பாதையை சென்றடைந்தது. எனினும், தொழில்நுட்பக் கோளாறால் திட்டமிட்டபடி லேண்டர் கலன் தரையிறங்காமல் நிலவில் மோதியது. கடைசி கட்டத்தில் இந்த பின்னடைவு ஏற்பட்டாலும் விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

சந்திரயான் 2 வில் இருந்து பாடம் கற்றுக் கொண்ட இஸ்ரோ ரூ.615 கோடியில் சந்திரயான்-3 என்ற விண்கலத்தை வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்விஎம்-3 எம்-4 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜூலை 14ஆம் தேதி மதியம் 2.35 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டது. பூமியின் சுற்று வட்டப்பாதை மற்றும் நிலவின் சுற்று வட்டப்பாதையை கடந்து 40 நாட்கள் பயணத்திற்கு பிறகு ஆகஸ்ட் 23ல் நிலவில் சந்திரயான் 3 வெற்றிகரமாக கால் பதித்தது.
நிலவின் தென் துருவத்தில் இதுவரை எந்த ஒரு நாடும் ஆய்வு செய்தது இல்லை என்ற நிலையில், இந்த சரித்திர சாதனையை இந்தியா நிகழ்த்தியிருக்கிறது. அதுபோக அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக நிலவில் சாஃப்ட் லேண்டிங் செய்த 4 வது நாடு என்ற பெருமையும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. தற்போது நிலவில் தரையிறங்கியுள்ள லேண்டர் கலனில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியே வந்துள்ளது.
பிரக்யான் ரோவர் 14 நாட்கள் நிலவில் ஆய்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு கஷ்டப்படு, விண்ணுக்கு அனுப்பிய விண்கலம் ஏன் வெறும் 14 நாள் தான் ஆய்வு செய்ய வேண்டுமா? கூடுதல் நாட்கள் ஆய்வு மேற்கொள்ள முடியாதா என்ற கேள்வி எழுவது இயல்புதான்...அதற்கான காரணத்தை இங்கே பார்க்கலாம்.. நிலவின் தரைப்பகுதியில் தொட்ட ரோவர் கருவி, நிலவில் குறிப்பிட்ட தூரத்துக்கு ஊர்ந்து சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள்ள இருக்கிறது.
ஆய்வின் போது எடுக்கும் படங்களையும் உடனுக்கு உடன் இஸ்ரோவுக்கு அனுப்பும். நாம் வசிக்கும் பூமியை பொறுத்தவரை, ஒரு நாள் என்பது 12 மணி நேரம் பகல், 12 மணி நேரம் இரவு என்பதை குறிக்கிறது. ஆனால், நிலவில் அப்படி இல்லை. நிலவில் ஒரு நாள் என்பது பூமியின் 28 நாளை குறிக்கும். எளிதாக சொல்வது என்றால் நிலவில் தொடர்ந்து 14 நாட்கள் பகல், அடுத்த 14 நாட்கள் இரவாக இருக்கும். இதனால், அங்கு ஒருநாள் என்பது பூமியின் 28 நாளுக்கு சமமாக பார்க்கப்படுகிறது.
இதை மனதில் வைத்துதான் பகல் தொடங்கும் நாளில் லேண்டரை நிலவில், தரையிறக்க விஞ்ஞானிகள் தீவிரம் காட்டினர். திட்டமிப்படி இதை சாதித்தும் விட்டார்கள். அடுத்த 14 நாட்கள் சூரிய வெப்பத்தை பயன்படுத்தி கொண்டு லேண்டர் கருவி செயல்பட இருக்கிறது. ரோவர் கருவியும் இடைவிடாமல் தனது ஆய்வுப் பணியை செய்யும். நிலவின் மேற்பரப்பில் மேற்கொள்ளப்படும் அனைத்து ஆய்வுகளும் நிலவில் பகல் பொழுதான 14 நாட்களுக்குள் முடித்து விடும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
அதன்பிறகு நிலவில் இரவு தொடங்கிவிடும். தொடர்ந்து 14 நாள் இருளாகவே இருக்கும் என்பதால் லேண்டர் கருவிக்கு சூரிய ஒளி கிடைக்காது. இதனால், லேண்டர் கருவி செயல் இழந்து விடும். ரோவர் கருவியில் நிலவில் காணப்படும் அடர்ந்த இருட்டில் எதுவும் செய்ய முடியாத நிலைக்கு சென்றுவிடும். இதனால்தான் மொத்த ஆய்வும் 14 நாட்களுக்குள் முடிவடையும் வகையில் அமைக்கப்பட இருக்கிறது.












Click it and Unblock the Notifications