"பெங்களூரில் பிழைப்பு நடத்தும் தமிழர்கள்.." கன்னடர்களின் ஏளனத் தொனி இன்னும் மாறலையே!
பெங்களூர்: பெட்டிக் கடை வைத்து பெங்களூரில் பிழைக்கும் தமிழர்கள் "அண்ணா ஆர்சிபி ஜெர்சி வாங்கண்ணா.." என்று கன்னடர்களிடம் விற்கிறார்கள். நாங்களும் வாங்கி வாழ்வு கொடுக்கிறோம்.. என்று சுமார் 27 வயதான ஒரு இளைஞர் பேசிய வீடியோ கன்னட மீடியாக்களில் ஒளிபரப்பானபோது "திக்" என்று இருந்தது. 1990களில் ஆரம்பித்த இந்த நக்கலும், நையாண்டியும், கேலியும், இப்போது அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்பட்டுவிட்டதே என்ற அச்ச உணர்வுதான் அது.
நாம் மேலே குறிப்பிட்டது ஒரு சாம்பிள் வீடியோதான். சமூக வலைத்தளங்களில் எங்கு பார்த்தாலும், தமிழர்களை காட்பாடிகள், குடிசைவாசிகள் என்று கேலியாகத்தான் அழைக்கிறார்கள் பெரும்பாலான கன்னடர்கள்.

கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்வியறிவு இல்லாத ஏழை எளிய மக்கள், பெங்களூரில் பழம் விற்பனை செய்வது, கட்டிட வேலை செய்வது போன்ற தொழில்களை செய்து, குடிசை பகுதிகளில் வாழ்வதை "குத்திக்காட்டுகிறார்களாம்" இந்த சீமான்கள்.
சென்னை, கொங்கு மற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பெரும் தொழில் அதிபர்களாகவும், ஐடி ஊழியர்கள், அதிகாரிகளாகவும் பெங்களூரில் இருப்பதை நைசாக மறைத்துவிட்டு, ஏழைகளை குறிவைத்து பேசும் இந்த ஏளனப்போக்கு 1990களில் பங்காரப்பா ஆட்சி காலத்தில் தொடங்கியதாக சொல்கிறார்கள் பெங்களூரில் பல ஆண்டுகாலமாக வாழ்பவர்கள்.
ஏனெனில் அப்போதுதான் காவிரி பிரச்சினை பூதாகரமாக வெடித்தது. பல தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். என்னதான் காலம் மாறினாலும், கன்னடர்களில் பலரும் தமிழர்களை பார்க்கும் பார்வை ஏளனமாகவே இருப்பதாக கூறுகிறார்கள் அங்குள்ள தமிழர்கள்.
தமிழர்கள் மீது கன்னடர்களின் எதிர்மறை மனப்பாங்கு
- பெங்களூரு உள்ளிட்ட கர்நாடகாவின் பல பகுதிகளில் தமிழர்கள் பல தலைமுறைகளாக குடியேறி வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் தொழிலாளர்கள், வியாபாரிகள், மற்றும் சிறு தொழில்கள் நடத்துபவர்கள். இந்த குடியேற்றம் பெரும்பாலும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்றது.
- இந்த குடியேற்றம், குறிப்பாக பெங்களூருவின் வளர்ச்சியில் தமிழர்களும் முக்கிய பங்கு வகித்தனர் என்ற உண்மையை ஏற்படுத்தியது. ஆனால், இதன் எதிர்வினையாக, "உழைப்பைத் தேடி வந்தவர்கள் வேலை வாய்ப்புகளை பிடித்து விட்டார்கள்" என்ற ஒரு உள்ளார்ந்த எதிர்மறை உணர்வு சில கன்னடர்களிடையே உருவாகியது.
அரசியல் மற்றும் காவிரி நீர் பிரச்சினை
- காவிரி நீர் பிரச்சினை என்பது தமிழர்களுக்கும் கன்னடர்களுக்கும் இடையே உள்ள முக்கியமான அரசியல் மற்றும் உணர்ச்சி சார்ந்த பிரச்சினையாகும். காவிரி தீர்ப்புகளுக்குப் பிறகு, 1991, 2016 போன்ற ஆண்டுகளில் பெரும் கலவரங்கள், வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன.
- இந்த பிரச்சினை எழும்பும் போதெல்லாம், பொதுவாக நட்பாக இருந்த நண்பர்கள் கூட திடீரென எதிரிபோல நடந்துகொள்வார்களாம். தமிழர்கள் மீது தாக்குதல், கடைகள், வாகனங்கள் மீது வன்முறை ஆகியவை நிகழ்கின்றன.
ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களின் பங்கு
- காவிரி பிரச்சினை போன்ற சமயங்களில், சில ஊடகங்கள் உணர்ச்சிவசப்படுத்தும் செய்திகளை பரப்பி, மக்கள் மனதில் கோபம் மற்றும் பகைமை உருவாக்குகின்றன.
- சமூக ஊடகங்களில் கூட, விளையாட்டு வெற்றிகள் (உதாரணம்: RCB வெற்றி) போன்றவற்றை தமிழர்களை கேலி செய்யும் வகையில் சிலர் பயன்படுத்துகிறார்கள். இது சமூகத்தில் உள்ள பிளவுகளை மேலும் தீவிரப்படுத்துகிறது.
பொருளாதார போட்டி மற்றும் வேலை வாய்ப்பு
- பெரும்பாலான தமிழர்கள் தொழிலாளர்களாக, வியாபாரிகளாக, சிறு கடைகள் நடத்துபவர்களாக இருப்பது, "நாங்கள் வாங்கி அவர்களுக்கு பிழைப்பு தருகிறோம்" என்ற வகையில் சிலர் பேசும் நிலையை உருவாக்கியுள்ளது.
- வேலை வாய்ப்பில் போட்டி, குடியேற்றம் அதிகரிப்பது போன்றவை, "நம் உரிமைகள் பறிக்கப்படுகின்றன" என்ற மனப்பாங்கை உருவாக்குகிறது.
ஊடகங்களின் பங்கு
- அனைத்து கன்னடர்களும் தமிழர்களை இழிவாகப் பார்க்கிறார்கள் என்று பொதுவாக சொல்ல முடியாது. குறிப்பாக காவிரி பிரச்சினை தீவிரமாக உள்ள சில மாவட்டங்களில் மட்டுமே இந்த மனப்பாங்கு அதிகமாக உள்ளது. தாவணகெரே, ஷிமோகா உள்ளிட்ட மத்திய மாவட்டங்கள் மற்றும் அதற்கு வடக்கே உள்ள மாவட்ட மக்கள் அனைவரும் தமிழர்களை மிகவும் அன்போடு பார்த்துக்கொள்கிறார்கள். மங்களூர் போன்ற கடலோர மாவட்டங்களிலும் தமிழர்களை தனித்துப் பார்ப்பதில்லை.
- தென் மாவட்டங்களில்தான், ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகள் இந்த பிரச்சினையை பெரிதாக்கி, பொதுமக்களில் பகைமை உணர்வை தூண்டுகிறார்கள்.
தமிழர்கள் மீது சில கன்னடர்களிடையே காணப்படும் எதிர்மறை மனப்பாங்குக்கு வரலாறு, அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் ஆகியவை பின்னணி காரணங்களாக உள்ளன. ஆனால், இது முழு கர்நாடகாவிலும், அனைத்து கன்னடர்களிடமும் பொதுவாக இல்லை.
சமூக ஊடகங்கள், ஊடகங்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் இந்த பிளவை பெரிதாக்கும் பங்கு வகிக்கிறார்கள். தமிழ் ஊடகங்கள் என்றுமே இரு பிரிவினர் இடையே வன்முறையை தூண்டும் விஷயங்களை யார் பேசினாலும் சென்சார் செய்துவிடும். ஆனால் கர்நாடகாவில், காதில் ரத்தம் வரும் அளவுக்கு காலை முதல் இரவு வரை வெறுப்பை அவர்களே தயாரித்து உமிழ்வதை பார்க்க முடியும். இது கன்னடர்கள் குறிப்பாக தென் மாவட்ட கன்னடர்களின் ரத்தத்தில் தொடர்ந்து விஷமாக ஏற்றப்படுகிறது.
இந்த நிலை மாறுவதற்குதான், எடியூரப்பா முதல்வராக இருந்தபோது திருவள்ளுவர் சிலை திறப்பு உட்பட பல விஷயங்களை முன்னெடுத்தார். ஆனால் காவிரியை தாண்டி இப்போது ஆர்சிபி, கமல் பேச்சு என வெறுப்பை தூண்ட மட்டும் ஆயிரம் காரணங்கள் தினமும் கிடைக்கின்றன அவர்களுக்கு. ஆர்சிபிக்கு சென்னையிலும் ரசிகர்கள் உண்டு, ஆனால் சிஎஸ்கேவிற்கு கன்னடர்கள் ஏன் சப்போர்ட் செய்வதில்லை என்பதில் புரிந்துகொள்ளலாம், இரு மாநில மக்களின் பரந்த மனநிலை எப்படியானது என்பதை.












Click it and Unblock the Notifications