தமிழ்நாட்டின் ஓசூர் விமான நிலையத்துக்கு கர்நாடகா முட்டுக்கட்டையா? அமைச்சர் பாட்டீல் விளக்கம் இது!
பெங்களூர்: கர்நாடகா-தமிழக எல்லையில் உள்ள ஓசூரில் 2 ஆயிரம் ஏக்கரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து தற்போது பெங்களூர் அருகே 2வது புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் சூடுபிடித்துள்ளது. ஓசூருக்கு போட்டியாக பெங்களூர் அருகே 2வது விமான நிலையத்தை கொண்டு வர கர்நாடகா முனைப்பு காட்டுவதாக கூறப்படும் நிலையில் அதுபற்றி அந்த மாநிலத்தின் உள்கட்டமைப்பு துறை அமைச்சர் எம்பி பாட்டீல் கொடுத்த விளக்கம் கவனம் பெற்றுள்ளது.
கடந்த மாதம் 27 ம் தேதி தமிழக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் விதி 110ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, ‛‛மின்னணு மற்றும் மின் வாகனங்கள் உற்பத்தித் துறையில் ஓசூர் கடந்த சில ஆண்டுகளில் முதலீடுகளை அதிகளவில் ஈர்த்து வருகிறது. இதனால் வேகமாக வளர்ந்து வரும் ஓசூர் நகரை, தமிழ்நாட்டின் முக்கியமான பொருளாதார வளர்ச்சி மையமாக உருவாக்குவதற்காக நவீன உட்கட்டமைப்புகளை அமைக்கும் நோக்கில் பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களை தமிழ்நாடு அரசு தற்போது செயல்படுத்தி வருகிறது.

அந்தவகையில், ஒசூர் நகரத்திற்கான ஒரு மாஸ்டர் தயாரிக்கப்பட்டு, அது முடிவடையும் தருவாயில் உள்ளது. ஓசூர் மட்டுமல்லாது, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி பகுதியின் ஒட்டுமொத்த சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் ஒசூரில் ஒரு விமான நிலையம் அமைப்பது அவசியம் என இந்த அரசு கருதுகிறது. ஒசூரில் இரண்டாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில், ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளைக் கையாளக்கூடிய வகையில், ஒரு பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்பதை அறிவிக்கிறேன்'' என்றார்.
முதல்வர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டதில் இருந்தே கர்நாடகா அரசு பதற்றமாகி போனது. ஏனென்றால், பெங்களூரில் இடநெருக்கடியால் பல நிறுவனங்கள் அதன் அருகே உள்ள புறநகர் பகுதிகளுக்கு இடம்பெயர்கின்றன. அந்த வகையில் ஓசூருக்கும் நிறுவனங்கள் வருகின்றன. இந்த வேளையில் ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைந்தால் அது கர்நாடகாவின் பொருளாதாரத்துக்கும், குறிப்பாக பெங்களூருவின் வளர்ச்சிக்கும் சிக்கலை ஏற்படுத்தும் என கர்நாடகா அரசு நினைக்கிறது.
இதனால் தான் ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என கூறியதற்கு பிறகே கர்நாடகா அரசு பெங்களூரில் 2வது விமான நிலையத்தை அமைக்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. நேற்றைய தினம் கர்நாடகாவின் பெரிய மற்றும் நடுத்தர தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத்துறை அமைச்சர் எம்பி பாட்டீல் உயரதிகாரிகளுடன் இதுதொடர்பாக பெங்களூர் விதான சவுதாவின் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பிறகு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
பெங்களூர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் நாட்டின் 3வது பெரிய விமானம். டெல்லி, மும்பைக்கு அடுத்ததாக பெரிய விமான நிலையம் பெங்களூர் ஆகும். பெங்களூர் விமான நிலையத்துக்கு ஆண்டுக்கு 52 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்.. அப்படியென்றால் 5.20 கோடி பயணிகள்) பயணிகள் வந்து செல்கின்றனர். 0.71 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளது. இந்த விமானநிலைய விரிவாக்கத்தால் ஆண்டுக்கு 110 மில்லியன் பயணிகள் வந்து செல்லும் வகையிலும், 1.10 மில்லியன் டன் கையாள முடியும். இந்த விமான நிலையம் 2035ம் ஆண்டில் உச்சபட்ச அளவை தொடும்.
இந்த விமான நிலையத்தை மேற்கொண்டு விரிவாக்கம் செய்ய முடியாது. இதனால் 2வது விமான நிலையம் அவசியமாகும். பொதுவாக 150 கிலோ மீட்டர் தொலைவுக்குள் புதிய விமான நிலையம் அமைக்க முடியாது. ஆனால் மும்பை, டெல்லியில் இத்தகைய நிபந்தனைகள் இல்லை. ஆகையால் 2-வது விமான நிலையத்தை அமைக்கும் பணியை கர்நாடகா அரசு தொடங்க இருக்கிறது. மைசூரு ரோடு, மாகடி, தாபஸ்பேட்டை, ஜிகினி, துமகூரு, கனகபுரா உள்ளிட்ட 6 இடங்களில் ஆய்வு தொடங்க உள்ளோம். புதிய விமான நிலையமும் பெங்களூர் கெம்பேகவுடா விமான நிலையத்தின் அளவுக்கு அமைக்கப்பட வேண்டும். இதனால் 4,500 ஏக்கர் முதல் 5,000 ஏக்கர் நிலம் வேண்டும்'' என்றார்.
இதுதான் தற்போது சர்ச்சையாகி உள்ளது. ஏனென்றால் கர்நாடகா அரசு விமான நிலையம் அமைக்க தேர்வு செய்துள்ள அனைத்து இடங்களும் ஓசூரில் இருந்து மிகவுக்கும் பக்கத்திலேயே அமைந்துள்ளது. குறிப்பாக ஜிகினி 26 கிலோமீட்டர் தொலைவில் மட்டுமே அமைந்துள்ளது. கர்நாடகா அமைச்சர் 6 இடங்கள் என குறிப்பிட்டாலும் பெங்களூர் விமான நிலையத்துக்கு போட்டியாகவே ஓசூர் விமான நிலையம் இருக்கும் என்பதால் ஜிகினியில் விமான நிலையம் அமைக்கத்தான் முயற்சிக்கும் என சொல்லப்படுகிறது.
இதுபற்றி அமைச்சர் எம்பி பாட்டீலிடம் பத்திரிகையாளர் ஒருவர் கேட்டார். அதாவது, ‛‛பெங்களூருக்கு அருகிலேயே தமிழ்நாடு அரசு ஓசூரில் புதிதாக விமான நிலையம் அமைக்க உள்ளது. இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' என கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் எம்பி பாட்டீல், ‛‛தமிழக அரசு எப்போது ஓசூரில் விமான நிலையம் அமைக்கும் என கூறியுள்ளது. நாம் அறிவித்தது பிறகு தானே. மேலும் அது அவர்களின் மாநிலம். அவர்கள் முடிவு செய்யலாம். அதேபோல் நம் மாநிலத்தில் நாம் முடிவு செய்யலாம். இது நமது முடிவு. அவர்களின் (தமிழ்நாடு) முடிவு பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை'' என்றார்.












Click it and Unblock the Notifications