சாக்கடை பிரச்னை எல்லாம் விடுங்க! "தேர்தலுக்கு லவ் ஜிகாத் மேட்டரை கையில் எடுங்க!" பாஜக தலைவர் சர்ச்சை
பெங்களூர்: கர்நாடகாவில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே தேர்தல் வியூகம் குறித்து கர்நாடக பாஜக தலைவர் நளின் கட்டீல் கூறியுள்ள கருத்துகள் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கர்நாடகாவில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் பாஜக உள்ளது. இதற்காகப் பிரசாரத்தை இப்போதே தொடங்கிவிட்டது.
அதேநேரம் அங்கு மாநில பாஜக அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதாகவும் இதனால் காங்கிரஸ் கட்சி தான் தேர்தலில் வெல்லும் என்றும் அக்கட்சியினர் கூறி வருகின்றனர். இதனால் தேர்தல் களம் இப்போதே அங்குச் சூடு பிடித்துவிட்டது.

கர்நாடக தேர்தல்
கர்நாடகாவில் பாஜக இப்போதே தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டது. கடந்த தேர்தலைப் போலத் தனிப்பெரும்பான்மை இழந்துவிடக் கூடாது என்பதில் அக்கட்சி உறுதியாக உள்ளது. ஏற்கனவே, இதற்காக அனைத்து சமூகத்தினரையும் கவரும் வகையில் கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. இதற்கு மத்திய அமைச்சர் அமித் ஷாவும் ஒப்புதல் தந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வரும் தேர்தலில் பிரசாரம் எதை வைத்து இருக்க வேண்டும் என்பது குறித்து பாஜக தலைவர்கள் நிர்வாகிகளுக்கு ஆலோசனை கொடுத்து வருகின்றனர்.

பாஜக தலைவர் சர்ச்சை
அப்படி கர்நாடக பாஜக தலைவர் கூறியுள்ள கருத்துகள் தான் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சாலை மற்றும் கழிவுநீர் பிரச்சனைகள் போன்றவற்றைச் சிறிய பிரச்சினைகள் என்று குறிப்பிட்ட கர்நாடக பாஜக தலைவர் நளின் கட்டீல், அதற்குப் பதிலாக லவ் ஜிஹாத் விவகாரத்தில் கவனம் செலுத்துமாறு தனது நிர்வாகிகளுக்கு அட்வைஸ் செய்துள்ளார். இந்தாண்டு தேர்தலை எதிர்கொள்வது குறித்துக் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் அவர் இந்த கருத்துகளைத் தெரிவித்தார்.

லவ் ஜிகாத்
இது தொடர்பாக அவர் அந்தக் கூட்டத்தில் பேசுகையில், "சாலை, கழிவுநீர் போன்ற சின்ன சின்ன பிரச்னைகள இருக்கத் தான் செய்யும். ஆனால், அது குறித்து எல்லாம் பேசாதீர்கள்.. உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்துக் கவலைப்பட வேண்டும் என்றால்.. "லவ் ஜிகாத்தை" பற்றிப் பேசுங்கள். அந்த பிரச்சினையைச் சரி செய்ய பாஜகவால் மட்டுமே முடியும். லவ் ஜிகாத்தில் இருந்து விடுபட வேண்டும் என்றால் பாஜக தேவை.. இதை மக்களிடம் எடுத்துச் செல்லுங்கள்" என்று அந்தக் கூட்டத்தில் அவர் கூறியிருந்தார்.

காங்கிரஸ் எதிர்ப்பு
இதற்குக் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆளும் பாஜக மக்களிடையே பிளவை ஏற்படுத்தி வாக்குகளைப் பெற முயல்வதாகச் சாடியுள்ளது. இது குறித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் கூறுகையில், "இது மிகவும் மோசமான பேச்சு... அவர்கள் வளர்ச்சியைப் பார்க்கவில்லை.. அவர்கள் வெறுப்பைப் பார்க்கிறார்கள்.. அவர்கள் நாட்டைப் பிளவுபடுத்துகிறார்கள். ஆனால், நாங்கள் வளர்ச்சியை மட்டுமே முன்னிறுத்தி பிரசாரம் செய்கிறோம்.

வளர்ச்சி முக்கியம்
அவர்கள் மக்களை உணர்ச்சிவசப்படுத்தி, அதில் விளையாட முயல்கிறார்கள். நமது மக்களுக்கு வேலை தேவை.. விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதைக் கட்டுக்குள் வைக்க நடவடிக்கை தேவை. அதையெல்லாம் பற்றிப் பேசாமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம். மக்களின் அன்றாட வாழ்க்கை குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். அதை முன்னிறுத்தியே எங்கள் பிரசாரம் இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.

லவ் ஜிகாத்
கர்நாடகாவில் சட்டசபைத் தேர்தல் நடக்க சில மாதங்களே உள்ளது. அங்குள்ள வலதுசாரி அமைப்புகள் இஸ்லாமிய இளைஞர்கள் காதல் என்ற பெயரில் இந்து பெண்களை ஏமாற்றி மதம் மாற கட்டாயப்படுத்துவதாகவும் இதைத் தடுக்க கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே, பாஜக ஆளும் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் லவ் ஜிகாத் என்று வலதுசாரிகள் கூறும் இதைத் தடுக்க சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. கர்நாடகாவில் கட்டாய மதமாற்றத்திற்கு எதிராகச் சட்டம் உள்ளது, ஆனால் இந்து "லவ் ஜிஹாத்" என்று இவர்கள் சொல்லும் இதற்கும் தனிச் சட்டம் வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்

கர்நாடகா
கர்நாடகாவில் கடந்த கடந்த 2018இல் நடந்த சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு என்ன நடந்தது என அனைவருக்கும் தெரியும். 104 இடங்களில் வென்று பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், அவர்களால் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் வெல்ல முடியவில்லை. இருப்பினும், முதலில் எடியூரப்பா 2018இல் ஆட்சி அமைத்தார். அதன் பின்னர் அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனது. இதையடுத்து வெறும் ஆறே நாட்களில் அவர் பதவி விலகினார். அதன் பின்னரே காங்கிரஸ் கூடன் கூட்டணி அமைத்து ஜேடிஎஸ் கட்சியின் குமாரசாமி முதல்வராகப் பதவியேற்றார்.

கடந்த தேர்தல்
குமாரசாமி முதல்வராகப் பதவியேற்ற விழாவில் பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இருப்பினும், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைத் தக்க வைப்பது என்பது சிக்கலாகவே இருந்தது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குமாசராமிக்கு சிக்கலைக் கொடுத்தனர். சுமார் ஓராண்டு மட்டுமே இந்த ஆட்சி இருந்த நிலையில், 2019இல் குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து பதவியை இழந்தது. மீண்டும் எடியூரப்பா கர்நாடக முதல்வராகப் பதவிக்கு வந்தார். அதுவும் கூட சில ஆண்டுகள் மட்டுமே நீட்டித்தது. எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக தற்போதைய பசவராஜ் பொம்மை முதல்வர் பதவிக்குக் கொண்டு வரப்பட்டார்.












Click it and Unblock the Notifications