"கேஸ் சிலிண்டர்கள்.." கர்நாடகா மேடைகளில் "சம்பவங்கள்.." கையை பிசையும் பாஜக! ஏதேதோ சொல்ல போய்.. பாவமே
பெங்களூர்: கர்நாடகாவில் தேர்தலுக்கு இன்னும் கொஞ்சக் காலமே இருக்கும் நிலையில், கேஸ் சிலிண்டர்கள் இப்போது அங்கே பேசு பொருளாக மாறியுள்ளது.
கர்நாடகாவில் இப்போது தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அங்கு இன்னும் சில வாரங்களில் தேர்தல் நடக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர்.
அங்கே இதுவரை வெளியான கருத்துக்கணிப்புகளில் பலவற்றில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது. இதனால், காங்கிரஸ் உற்சாகமாகத் தேர்தல் பிரசாரத்தை நடத்தி வருகிறது.

கர்நாடக தேர்தல்: தேர்தலுக்கு சில வாரங்களே இருக்கும் நிலையில், இரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளன. இதனிடையே இப்போது அங்கே கேஸ் சிலிண்டர்கள் பிரசாரத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் கேஸ் சிலிண்டர் விலையால் மக்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில், அதைப் பயன்படுத்திக் கொள்ளக் காங்கிரஸும் ஜேடி(எஸ்) கட்சியும் முயல்கிறது. அதேநேரம் சர்வதேச கச்சா எண்ணெய் விலையே கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்குக் காரணம் என்கிறது பாஜக.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் பங்கேற்ற மேடையிலேயே கேஸ் சிலிண்டரை காங்கிரஸ் தொண்டர்கள் வைத்தார்கள். அதைத் தொட்டுக் கும்பிட்டு அங்கிருந்தவர்களை அதிர வைத்தார் டிகே சிவக்குமார்.

கேஸ் சிலிண்டர்: அங்கே பேசிய சிவக்குமார், "சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. வாக்களிக்கச் செல்லும் முன், உங்கள் வீட்டில் உள்ள கேஸ் சிலிண்டரைக் கும்பிட்டுவிட்டுச் செல்லுங்கள். அப்போது உங்களுக்கு யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தெரியும்" என்று பேச நல்ல ரெஸ்பான்ஸும் கிடைத்தது.
காங்கிரஸ் தலைவர்கள் இதை முன்வைத்தே பிரசாரம் செய்து வருகிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் (2014க்கு முன்) 410 ரூபாயாக இருந்த கேஸ் சிலிண்டர் விலை இப்போது 1,100 ரூபாயாக உயர்ந்துள்ளதாகக் காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகின்றனர். கேஸ் சிலிண்டர் விலை உயர்வு என்பது நடுத்தர வர்க்கத்தினரிடையே குறிப்பாக இல்லத்தரசிகளிடையே நல்ல வரவேற்பைத் தரும் என்பதால் இது குறித்து அனைத்து பொதுக் கூட்டங்களிலும் தொடர்ந்து பேசுமாறு காங்கிரஸ் தனது வேட்பாளர்களிடம் வலியுறுத்தியுள்ளது.

பெரிய சிக்கல்: ஜேடிஎஸ் கட்சி இந்த விவகாரத்தில் மேலும் ஒரு படி சென்றுவிட்டது. ஜேடிஎஸ் ஆட்சி அமைத்தால், ஆண்டுக்கு ஐந்து கேஸ் சிலிண்டர்களை இலவசமாக வழங்குவதாக ஜேடிஎஸ் அறிவித்துள்ளது. மேலும், ஆண்டுக்கு 10 கேஸ் சிலிண்டர்களை சலுகை விலையில் வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.
இது குறித்து ஜேடிஎஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறுகையில், "உஜ்வாலா திட்டத்தின் கீழ், சிலிண்டருக்கு மானியம் வழங்குவதாக மத்திய அரசு உறுதியளித்தது. ஆனால் இந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இன்று, கேஸ் சிலிண்டர் விலை 1,000 ரூபாய்க்கு மேல் தான் இருக்கிறது. இதனால் கிராமப்புறங்களில் உள்ள மக்களும் ஏழை மக்களும் குடும்பத்தை நடத்தவே சிரமப்படுகிறார்கள்" என்றார்.
கர்நாடக தேர்தலில் இந்த முறை களமிறங்கும் ஆம் ஆதமி கட்சியும் பாஜகவை கேஸ் சிலிண்டர் விவகாரத்தில் கடுமையாகச் சாடியுள்ளது. இதனால் எல்லா பக்கத்தில் இருந்தும் கேஸ் சிலிண்டர் விலை விவகாரத்தில் பாஜக எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறது.
பாஜக பதில்: இதைச் சமாளிக்கும் வகையில் பாஜக, "கேஸ் சிலிண்டர்கள் காங்கிரஸ் ஆட்சியில் அப்பர் மிட்டில் கிளாஸ் மக்களிடம் மட்டுமே இருந்தது. ஆனால், இதை நாங்கள் அனைத்து தரப்பு மக்களிடமும் எடுத்துச் சென்றுள்ளோம். கர்நாடகாவில் மட்டும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 37 லட்சம் பேருக்கு கேஸ் சிலிண்டர் இணைப்பு கொடுத்துள்ளோம். இதில் இருந்து பல கோடி பேர் பயன் பெற்றுள்ளனர். இதை வைத்து அவர்களால் அரசியல் செய்ய முடியாது" என்றனர்.
பாஜக இப்படியொரு விளக்கத்தைக் கொடுத்த போதும் கேஸ் சிலிண்டர் விலை குறித்து மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவே கூறப்படுகிறது. இந்த தேர்தலில் அது ஓர்க் அவுட் ஆனால் ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநிலச் சட்டசபைத் தேர்தல்களிலும் இதே திட்டத்தைப் பயன்படுத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications