என்னாச்சு பெங்களூருக்கு.. மீண்டும் பகீர்.. கார் பேனட்டில் வாலிபரை தொங்கவிட்டு இழுத்து சென்ற இளம்பெண்
பெங்களூர்: கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் பரபரப்பான சாலையில் கார் பேனட்டில் இளைஞர் ஒருவரை தொங்க விட்ட படி இளம்பெண் கார் ஓட்டிச்செல்லும் வீடியோ காட்சி இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் நடைபெற்ற இந்த சம்பவம் சக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் முழு விவரத்தையும் கீழே காணலாம்.
சாலைகளில் பயணிக்கும் போது வாகன ஓட்டிகள் இடையே வாக்குவாதம் கைகலைப்பு ஏற்படும் சம்பவங்கள் தினமும் எங்காவது நடந்து கொண்டுதான் இருக்கிறது.
பல சமயங்களில் இது பெரிய அளவு சண்டையாக மாறாமல் முடிந்து விட்டாலும் சமீப காலமாக வாகன ஓட்டிகள் சிலர் நடந்து கொள்ளும் சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்து வருகிறது.
மகளிர் ஆணைய தலைவிக்கே நேர்ந்த கொடூரம்.. நள்ளிரவில் அத்துமீறிய கார் டிரைவர்! தலைநகரில் 'ஷாக்’ சம்பவம்
டெல்லி இளம்பெண் சம்பவம்
தலைநகர் டெல்லியில் கடந்த புத்தாண்டு தினத்தில் மொபைட் பைக்கில் வந்த இளம் பெண் அஞ்சலி சிங் என்பவரை மோதிவிட்டு சென்ற போலினோ ரக கார்.. பின்னர் அந்த பெண்ணை பல கி.மீட்டர் தொலைவுக்கு சாலையிலேயே தர தரவென இழுத்துச்சென்ற சம்பவமும் அந்தப்பெண் நிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்டதும் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த படுபாதக செயலில் ஈடுபட்ட காரில் இருந்தவர்கள் தங்களுக்கு தெரியாமலே இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்று விட்டதாக கூறி மேலும் அதிர வைத்தனர்.
முதியவர் ஒருவரை தரதரவென..
தற்போது இந்த விவகாரத்தில் தொடர்புடைய நபர்கள் மீது கொலைக்குற்றச்சாட்டு பதியப்பட்ட்டுள்ளது. காரில் இருந்த 5 பேர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் அதிர்வலைகள் முழுமையாக நீங்குவதற்கு முன்பாக கடந்த வாரத்தில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பரபரப்பான சாலையில் முதியவர் ஒருவரை சாலையில் இழுத்தபடி இருசக்கர வாகனத்தை இளைஞர் ஒருவர் ஓட்டிச்சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சினிமா சண்டை காட்சிகளை மிஞ்சும் வகையில்
முதியவர் வந்த கார் மீது பைக்கை மோதி விட்டு உரிய பதிலளிக்காமல் இளைஞர் செல்ல முயன்ற போது தடுத்து நிறுத்த பைக்கை பிடித்த அந்த முதியவரை இளைஞர் கொஞ்சம் கூட இரக்கம் இன்றி இழுத்துச்சென்றது தெரியவந்தது. இந்த தொடர்பான வீடியோ பதிவுகளும் வெளியாகி அதிரவைத்தது. இந்த நிலையில், பெங்களூருவில் சினிமா சண்டை காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு தற்போது ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு..
பெங்களூருவில் உள்ள ஜனன பாரதி நகர் பகுதியில் டாடா நிக்சான் கார் ஒன்று முன்பக்க பேனட்டில் ஒருவரை தொங்கி கொண்டிருக்க வேகமாக சென்று கொண்டிருந்தது. சுமார் ஒரு கி.மீட்டர் தூரத்திற்கு கார் இப்படி சென்றதால் சக வாகன ஓட்டிகள் அதிர்ந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டதாவது:- தர்ஷன் என்பவர் வந்து கொண்டிருந்த ஸ்விப்ட் ரக கார் மீது டாடா நிக்சான் காரில் வந்த பிரியங்கா என்ற இளம்பெண் மோதியிருக்கிறார்.
பேனட்டை பிடித்து தொங்கியபடி..
இதனால் காரை நிறுத்திய தர்ஷன் அந்தப் பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது காரை அங்கிருந்து எடுத்துசெல்ல பிரியங்கா முயன்று இருக்கிறார். இதனால் காரை நிறுத்தும் நோக்கில் குறுக்கே தர்ஷன் வந்துள்ளார். ஆனால், அப்போதும் காரை பிரியங்கா வேகமாக ஓட்டியதால் கார் மோதுவதை தவிர்க்க பேனட்டை பிடித்து தர்ஷன் தொங்கியிருக்கிறார். அப்போதும் பிரியங்கா காரை நிறுத்தாமல் ஓட்டிச்சென்றுள்ளார். இது குறித்த தகவல் கிடைத்ததும் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினோம். இருவரும் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்துள்ளனர். பிரியங்கா மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தர்ஷன் மற்றும் அவரது நண்பர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றனர்.