அரசு வேலைக்கு பெண்கள் படுக்கையை பகிரும் நிலை உள்ளது.. கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ சர்ச்சை பேச்சு
பெங்களூர்: கர்நாடகத்தில் அரசு பணி பெற, பெண்கள் படுக்கையை பகிர வேண்டிய நிலை உள்ளது என காங்கிரஸ் எம்எல்ஏ பிரியங்க் கார்கே பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருப்பவர் மல்லிகார்ஜூன கார்கே. ராஜ்யசபா எம்பியாக உள்ளார். இவரது மகன் பிரியங்க் கார்கே.
பிரியங்க் கார்கே கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் சீதாபூர் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில செய்தி தொடர்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.

சர்ச்சை பேச்சு
இந்நிலையில் தான் பிரியங்க் கார்கே பாஜக ஆட்சியில் நடந்த ஊழல் பற்றியும், அரசு பணி நியமனம் குறித்தும் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் அரசு பணியில் பெண்கள் நியமனம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதுதொடர்பாக பிரியங்க் கார்கே கூறியதாவது:

விசாரணை குழு
கர்நாடகத்தில் அரசு பணி, பதவிகளை விற்க அரசு முடிவு செய்துள்ளது. இதனால் பணி நியமனத்தில் ஊழல், முறைகேடு நடந்துள்ளது. இதுபற்றி விசாரிக்க நீதிமன்ற விசாரணை அல்லது சிறப்பு விசாரணை குழு ஒன்றை உருவாக்க வேண்டும். இந்த அரசில் பணம் கொடுக்காவிட்டால் அரசு பணியை பெற முடியாது. இதுதொடர்பாக ஏற்கனவே 2 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

படுக்கையை பகிர வேண்டும்
இளைஞர்கள் அரசு பணியை பெற வேண்டும் என்றால் பணம் கொடுக்க வேண்டும். பெண்கள் என்றால் படுக்கையை பகிர வேண்டிய நிலை உள்ளது. அதாவது அமைச்சர் ஒருவர் இளம்பெண் ஒருவரை படுக்கைக்கு அழைத்துள்ளார். அதன்பிறகு அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நான் கூறும் குற்றச்சாட்டுக்கு இதுதான் சான்று.

ரூ.300 கோடி வரை லஞ்சம்
கர்நாடகத்தில் மின்சாரத்துறையில் ஜுனியர் என்ஜினீயர் பணிக்கு ரூ.30 லட்சம், உதவி என்ஜினீயர் பணிக்கு ரூ.50 லட்சம் வரை லஞ்சமாக வசூலிக்கப்படுகிறது. கர்நாடகாவின் மின்பரிமாற்ற கழகத்தில் நடந்த 1,429 பதவிகளுக்கான நியமனத்தில் மொத்தம் 600 பதவிகளுக்கு பேரம் பேசப்பட்டுள்ளது. ரூ.300 கோடி வரை லஞ்சம் பெறப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பணியிலும் முறைகேடு உள்ளதால் ஏழை மற்றும் திறமைசாலிகளுக்கு பணி கிடைக்காத நிலை உள்ளது. ஊழல் வெளியுலகுக்கு தெரிந்தாலும் கூட தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications