நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற வியூகம்.. திரைமறைவு வேலைகளில் எடியூரப்பா மும்முரம்!
பெங்களூர்: கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபித்து காட்ட பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார்.
கர்நாடக சட்டசபையில் காலம் காலமாக அவ்வப்போது நடக்கும் நாடகங்கள் தற்போது குமாரசாமி ஆட்சியிலும் நடந்து அவரது ஆட்சியை காலி செய்து விட்டது. இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவோடு இரவாக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து எடியூரப்பா ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இதையடுத்து நேற்றைய தினம் கர்நாடக முதல்வராக 4-ஆவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். இந்த நிலையில் வரும் 31-ஆம் தேதிக்குள் எடியூரப்பா பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

திங்கள்கிழமை
இதை ஏற்ற எடியூரப்பா வரும் திங்கள்கிழமையே பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க போவதாக அறிவித்துள்ளார். அன்று சட்டசபை கூடியது எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கொண்டு வருவார். இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும்.

221 பேர்
கர்நாடக சட்டசபையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 224 ஆகும். அதில் 3 எம்எல்ஏக்களின் பதவியை சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்துவிட்டார். இதனால் சபாநாயகரையும் சேர்த்து மொத்தம் 221 ஆக உள்ளது.

பாஜக
இதில் 111 எம்எல்ஏக்களின் ஆதரவை பெற்றால்தான் பாஜக அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறது என்பதாகும். தற்போது பாஜகவுக்கு தற்போது 105 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். ஒரு சுயேச்சை எம்எல்ஏ ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால் பாஜக பலம் 106-ஆக உள்ளது. எடியூரப்பா மெஜாரிட்டியை நிரூபிக்க மேலும் 5 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. அதிருப்தி எம்எல்ஏக்களில் மேலும் 13 பேர் மீது இன்னமும் சபாநாயகர் எந்த முடிவும் எடுக்காமல் உள்ளார்.

பாஜக
அவர்களது பதவியை கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் பறித்தால் சட்டசபையில் மொத்தம் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும். அது எடியூரப்பாவுக்கு சாதகமாக மாறும். இதை கருத்தில் கொண்டு சபாநாயகர் ரமேஷ்குமார் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என பாஜகவும் அதன் தலைவர்களும் நம்பிக்கையில் உள்ளனர்.

திரைமறைவு
மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ.க்களில் சிலர் வெளிப்படையாகவே எடியூரப்பாவை ஆதரிக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள். இது பாஜக தலைவர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அந்த எம்எல்ஏக்களின் ஆதரவை பெறவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் மீண்டும் கர்நாடகத்தில் திரைமறைவு பேரங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.












Click it and Unblock the Notifications