வீடியோ காலில் பெண்களை நிர்வாணமாக வர சொன்ன இளைஞர் கைது! செல்போனில் 13 ஆயிரம் ஆபாச வீடியோ! போலீஸ் ஷாக்
பெங்களூர்: பெங்களூரில் வீடியோ காலில் நிர்வாணமாக வரச் சொல்லி, அவர்கள் வராவிட்டால், அந்த பெண்களின் பெயரில் சமூகவலைதளங்களில் ஆபாச வீடியோ வெளியிட்டதாக இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவத்தின் முழு விவரங்களையும் பார்க்கலாம்.
கர்நாடகா மாநிலம் பெல்லாரி மாவட்டம் சண்டூர் பகுதியை சேர்ந்தவர் சுபம் குமார் மனோஜ் (25). இவர் டெல்லியில் கம்ப்யூட்டர் என்ஜினியரிங் படித்துள்ளார். டெல்லியில் சில மாதங்கள் வேலை பார்த்திருந்தார்.

அப்போது அவருடைய சமூகவலைதளம் மூலம் இளம்பெண்களுடன் நட்பில் இணைந்தார். நன்றாக பேசும் பெண்களை காதல் வலையில் விழ வைத்தார். பின்னர் அந்த பெண்களிடம் வீடியோ கால் அழைப்பில் சென்று நிர்வாணமாக வரும்படி அழைத்துள்ளார்.
அதிர்ச்சி
இதனால் அதிர்ச்சி அடைந்த சில பெண்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். இவ்வாறு மறுக்கும் இளம்பெண்களின் பெயரில் சமூகவலைதளங்களில் போலி கணக்குகளை தொடங்கி ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.
மறுக்கும் பெண்கள்
மறுக்கும் பெண்களின் பெயர் மட்டுமின்றி புகைப்படத்தையும் பயன்படுத்தி வந்துள்ளார். அண்மையில் மும்பையை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியின் பெயரில் போலி கணக்கு தொடங்கி சில ஆபாச வீடியோக்களை பதிவிட்டு வந்ததாக தெரிகிறது.
மும்பை சைபர் போலீஸ்
இதுகுறித்து அந்த மாணவி மும்பை சைபர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், சுபம் குமாரை தேடி வந்தனர். அவரை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் டெல்லியில் இருந்து சொந்த ஊரான பெல்லாரி மாவட்டத்தின் சண்டூருக்கு வந்த சுபம், தலைமறைவாக இருந்தார் என்பது தெரியவந்தது.
ஆபாச வீடியோ
இதனிடையே கூகுளை தொடர்பு கொண்ட போலீஸார், ஆபாச வீடியோ பதிவிட்ட சமூகவலைதளம் குறித்த தகவலை பெற்றனர். அதில் சுபம் குமார் தனது காம வலையில் விழாத இளம்பெண்களின் பெயரில் சமூகவலைதள கணக்கு தொடங்கி, அதில் ஆபாச வீடியோக்களையும் புகைப்படங்களையும் அப்லோடு செய்திருந்தார்.
10 போலி கணக்குகள்
இதைத் தொடர்ந்து பெல்லாரி வந்த மும்பை போலீஸார், சுபம் குமாரை கைது செய்தனர். விசாரணையில் சுபம் குமார், 10 போலி சமூகவலைதள கணக்குகளை தொடங்கி இருப்பது தெரியவந்தது. இந்த கணக்குகளை தொடங்க 90 -க்கும் மேற்பட்ட ஈமெயில் கணக்குகளையும் சுபம் தொடங்கியிருந்தது தெரியவந்தது.
13,500 ஆபாச வீடியோக்கள்
இதையடுத்து அவரது செல்போனை பறிமுதல் செய்த போலீஸார் அதை ஆய்வு செய்தனர். அதில் பல பெண்களின் ஆபாச வீடியோக்களை கொட்டி கிடந்தன. கிட்டத்தட்ட 13,500 ஆபாச வீடியோக்கள் அந்த போனில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
சுபம் குமார் கைது
இதை பார்த்து போலீஸாரே அதிர்ச்சி அடைந்தனர். சுபம் குமாரை மும்பைக்கு அழைத்துச் சென்ற போலீஸார் அங்கு அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆபாச வீடியோக்களை யாரிடமாவது பணத்துக்காக விற்றுள்ளாரா, இல்லை பாதிக்கப்பட்ட பெண்களிடம் இருந்து பணத்தை பெற்றாரா, வேறு யாரை எல்லாம் அவர் காதல் வலையில் விழவைத்து ஏமாற்றினார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீஸ் அறிவுரை
முன்பின் தெரியாத நபர்களுடன் சமூகவலைதளங்களில் பெண்கள் நட்புடன் கூட பழக வேண்டாம் என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். அது போல் பெண்களுக்கு எதிரான சைபர் கிரைம் தாக்குதல்கள் குறித்து தைரியமாக வந்து புகார் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications