அம்மியில் மசாலா அரைத்த பெண்கள்.. புதுவையில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு.. பாஜக ஆர்ப்பாட்டம்
புதுவை: புதுச்சேரி மாநிலத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து பாஜகவினர் மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு மிக்சி கிரைண்டர், வாஷிங் மெஷின் உள்ளிட்ட மின்சாதனங்களை உடைத்தும், தீ பந்தம் கொளுத்தியும் நூதன ஆர்ப்பாட்டம். பெண்கள் சாலையில் அம்மி கல்லை வைத்து மசாலாவும் அரைத்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
புதுச்சேரி மாநிலத்தில் மின் கட்டணம் 4.59 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு வருகின்ற ஜீன் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என மின்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதுச்சேரி அரசின் மின்கட்டண உயர்வுக்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் 100 க்கும் மேற்பட்ட பாஜகவினர் உப்பளம் பகுதியில் உள்ள மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டும் தீ பந்தம் மற்றும் விளக்குகள் ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
என்ன நடந்தாலும் ஈரானுடன்தான் நிற்போம்.. களமிறங்கும் ஈராக்.. அமெரிக்காவிற்கு எதிராக புது அணி?
போராட்டம்
அப்போது திடீரென மிக்சி, கிரைண்டர், வாஷிங் மெஷின் உள்ளிட்ட மின்சாதனங்களை சாலையில் போட்டு உடைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் புதுச்சேரி அரசு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை உடனடியாக திரும்ப பெறாவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் எனவும் பாஜகவினர் எச்சரிக்கை விடுத்தனர்.
நடவடிக்கை
இதனிடையே மின் கட்டண உயர்வு குறித்து செய்தியாளர்கள் சந்தித்து பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் மின் கட்டணம் உயர்வு தொடர்பான கோப்பு தனக்கு வரவில்லை என்றும், தற்போது அதிகாரிகளை அழைத்துள்ளேன். இது குறித்து விரைவில் ஆலோசித்து மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
புதுவை அரசு
புதுச்சேரி மாநிலத்தில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி மின் கட்டணம் 4.59 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. கட்டண உயர்வு வரும் ஜுன் 1 ந்தேதி முதல் அமலுக்கு வருவதாக புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ரகளை
யூனியன் பிரதேசங்களுக்கான மின்சார ஒழுங்கு முறை இணை ஆணையம் 2019 மற்றும் 2020 ஆண்டிற்கு மின் கட்டணம் உயர்த்துவது தொடர்பாக கடந்த இரு மாதங்களுக்கு முன்பு புதுச்சேரியில் பொது மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தியது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள், நுகர்வோர் அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் புதுச்சேரி மாநிலத்தில் மின் கட்டணம் உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இந்த கூட்டம் மிகப்பெரிய ரகளையில் முடிந்தது.
புதுவை மாநிலம்
இந்நிலையில் யூனியன் பிரதேசங்களுக்கான மின்சார ஒழுங்குமுறை இணை ஆணையத்தின் 2019 - 2020 க்கான மின் கட்டணம் உயர்த்துவது தொடர்பான பரிந்துரையை ஏற்று புதுச்சேரி மாநிலத்தில் பொதுமக்கள் மாதந்தோறும் செலுத்தும் மின் கட்டணத்தில் 4.59 சதவீதம் கூடுதலாக உயர்த்தி வசூலிக்கப்படும் என்றும், ஏற்கனவே விதிக்கப்பட்டு வந்த 4 சதவீத துணை கட்டணமுன் சேர்த்து வசூலிக்கப்படும் என புதுச்சேரி அரசு மின் துறை தற்போது அறிவித்துள்ளது.
எதிர்ப்பு
அதன்படி தற்போது வீடுகளில் மின் பயன்பாட்டு கட்டணம் ரூ.100 என கணக்கிடும்போது, அதனுடன் சேர்த்து 8.59 சதவீத தொகையினையும் சேர்த்து ரூ.108.59 ரூபாயினை செலுத்த வேண்டும். மேலும் வரும் 1 ந்தேதி முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகின்றது. இதற்கு நுகர்வோர் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வாக்குப் பதிவு
இதனிடையே மக்களவை தேர்தல் முடிந்தவுடன் ஆளும் காங்கிரஸ் அரசு மின்கட்டணத்தை உயர்த்தி உள்ளதாகவும், தேர்தல் வாக்குறுதியில் வீட்டு வரி, மின்சார வரி, குப்பை வரி குறைக்கப்படும் என காங்கிரஸ் அளித்த வாக்குறுதியை நம்பி மக்கள் அக்கட்சிக்கு வாக்களித்து வெற்றிபெற செய்துள்ளனர்.
எதிர்க்கட்சிகள்
ஆனால் தேர்தலுக்காக கையில் வைத்த மை அழியும் முன்னரே மின் கட்டணத்தை உயர்த்தி காங்கிரஸ் அரசு மக்களுக்கு துரோகம் செய்துவிட்டதாகவும், மின் கட்டண உயர்வை கண்டித்து மக்களோடு சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளனர்.