81 லட்சம் போலி ஆதார் கார்டுகள் முடக்கம்: உங்க ஆதார் உயிரோட இருக்கா?
11 லட்சம் போலி பான் கார்டுகளை செயலிழக்க வைத்த மத்திய அரசாங்கம், இப்போது 81 லட்சம் போலி ஆதார் கார்டுகளை முடக்கியுள்ளது.
டெல்லி: ஏழை எளிய மக்கள் பயன்பெற வேண்டிய திட்டங்களை குறுக்கு வழியை பயன்படுத்தி பயன் அடைந்த சுமார் 81 லட்சம் போலி ஆதார் கார்டுகளையும் 11 லட்சம் பேன் கார்டுகளையும் மத்திய அரசு முடக்கி வைத்து செல்லாததாக அறிவித்துள்ளது.
நேர் வழியில் யோசிப்பவர்களுக்கு ஒரு வழிதான் தோன்றும். ஆனால், குறுக்கு வழியில் யோசிப்பவர்களுக்கு பல வழிகள் தோன்றும்.
அதுபோலத்தான் மத்திய அரசும் மாநில அரசும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் எவ்வளவுதான் நல்ல திட்டங்களை தீட்டினாலும், அதை அபகரிக்க குறுக்கு வழியில் யோசிப்பவர்கள் பல திட்டங்களை தீட்டி அதை செயல்படுத்துவார்கள்.
போலிகள் அழிப்பு
அதுபோலவேதான், நிதிச் சீர்திருத்த நடவடிக்கையின் ஒரு கட்டமாக போலியான ஆதார் கார்டு , பான் கார்டு மற்றும் ரேசன் கார்டுகளை கண்டறிந்து அவற்றை செயலிழப்பு செய்வதற்காக ஆதார் கார்டுடன் பான் கார்டு மற்றும் ரேசன் கார்டை இணைக்கும் திட்டத்தை கொண்டுவந்தது.
ஆதார் கார்டு அவசியம்
ஏழை எளிய மக்கள் பயன்பெறும் திட்டங்களான கேஸ் மானியம், குறைந்த விலையில் ரேசன் பொருட்கள் மற்றும் இலவச அரிசி வாங்குவது, முதியோர் பென்ஷன் போன்ற பல திட்டங்களுக்கு ஆதார் கார்டு அவசியம் ஆகும். ஆதார் கார்டு இல்லை என்றால் இந்த மாதிரியான பயன்பாட்டினை பெறுவது இயலாத காரியம்.
சமூக விரோதிகள் சுரண்டல்
எனவேதான், இந்த வகையான திட்டங்களுக்கு ஆதார் கார்டு கட்டாயம் வேண்டும் என்பதால்தான், ஆதார் கார்டு கட்டாயம் என்று மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி உள்ளது. ஆனால், இந்த திட்டங்களை பல சமூக விரோதிகள், தங்களின் செல்வாக்கை பயன்படுத்தி போலியாக ஒன்றுக்கும் மேற்பட்ட ஆதார் கார்டுகளையும் பான் கார்டுகளையும் பெற்று அவற்றின் மூலம் மத்திய மாநில அரசுகளின் பயன்களை சுரண்டி பல ஆண்டுகளாக அனுபவித்து வந்தனர்.
ஏழைகளுக்கு சலுகைகள்
இந்நிலையில், ஏழை எளிய மக்களுக்கு பயன்தர வேண்டிய பல சலுகைகள் மற்றும் பயன்கள் அனைத்தும் குறுக்கு வழியில் சமூக விரோதிகளின் கைகளுக்கு செல்வதை தடுப்பதற்காக பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பின்பு மத்திய அரசு ஆதார் கார்டையும் ரேஷன் கார்டு மற்றும் பான் கார்டு எண்ணையும் இணைப்பது கட்டாயம் என்று நெருக்கடி கொடுத்தது.
மக்கள் பணம் மக்களுக்கே
பான் கார்டு மற்றும் ரேசன் கார்டையும் ஆதார் கார்டுடன் இணைப்பதால், மத்திய மாநில அரசுகளின் சலுகைகள் மற்றும் இலவசங்கள் அனைத்தும் நேரடியாகவே ஏழை எளிய மக்களின் கைகளுக்கு சென்றடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
81 லட்சம் போலிகள்
மத்திய மாநில அரசுகள் எதிர்பார்த்தது போலவே பெரும்பாலான மக்கள் தங்களின் ரேசன் கார்டு மற்றும் பான் கார்டையும் ஆதார் கார்டுடன் இணைத்தனர். இதனையடுத்து அனைத்து ஆதார், பான் கார்டு மற்றும் ரேசன் கார்டுகளும் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டது. இதில் கிட்டத்தட்ட 81 லட்சம் ஆதார் கார்டுகள்கள் போலியானவை என்று தெரியவந்தது.
ஆதார் கார்டு செயலிழப்பு
இதனை அடுத்து இந்த கார்டுகள் அனைத்தும் ஆதார் மேலாண்மையின் வழிகாட்டுதலின்படி செயலிழப்பு (Deactivate) செய்யப்பட்டது. அதுபோலவே சுமார் 11 லட்சத்திற்கும் அதிகமான பான் கார்டுகளும் செயலிழப்பு செய்யப்பட்டது. ஒருவரின் பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆதார் கார்டுகள் இருக்கும்பட்சத்தில், அந்த கார்டுகளை செல்லாமல் ஆக்குவதற்கான அதிகாரம் மத்திய அரசுக்கு இருப்பதினால், இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது.
உங்க ஆதார் உயிரோடு இருக்கா?
உங்கள் ஆதார் கார்டு செல்லுபடியாகும் நிலையில் உள்ளதா, இல்லை என்பதை அறிய https://resident.uidai.gov.in/aadhaarverification
இந்த இணைப்பிற்கு சென்று செக் செய்யுங்கள்.