அடுத்த மாதமே எகிற போகுது தங்கம் விலை.. கூடவே அந்த தங்க பத்திரத்தை பாருங்க! ஆனந்த் சீனிவாசன் நறுக்
சென்னை: தங்கம் விலை தீபாவளிக்குப் பிறகுச் சற்றே சரிந்த நிலையில், இது வரும் காலங்களில் தொடருமா இல்லை மீண்டும் அதிகரிக்குமா என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். மேலும், தங்கப் பத்திரங்கள் குறித்தும் அவர் சில முக்கிய கருத்தைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நமது நாட்டில் தங்கம் விலை தீபாவளி வரை தொடர்ந்து அதிகரித்தே வந்தது. இருப்பினும், தீபாவளி முடிந்த மறுநாளான நேற்று மட்டும் ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 70 வரை குறைந்து ரூ. 7385ஆக உள்ளது.

வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் குறையுமா இல்லை அதிகரிக்குமா என்பது குறித்து பலருக்கும் கேள்வி இருக்கிறது. இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் இது தொடர்பாக விளக்கியுள்ளார்.
ஆனந்த் சீனிவாசன்: அவர் தனது யூடியூப் வீடியோவில் கூறுகையில், "கடந்த ஓராண்டில் மட்டும் தங்கம் விலை 35% முதல் 40% வரை அதிகரித்துள்ளது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கம் வாங்கியோருக்கு ஹேப்பி நியூஸ் தான். அடுத்த தீபாவளிக்குள் தங்கம் விலை மேலும் அதிகரிக்கவே போகிறது. இப்போது தங்கம் விலை ரூ.7500 அருகே உள்ளது.. இதுபோக தனியாக ஜிஎஸ்டி, செயக்கூலி வேறு தனியாக இருக்கிறது. மறுபுறம் 24 கேரட் தங்கமும் ரூ.8100ஐ தொட்டுவிட்டது.
ரூபாயின் மதிப்பும் கூட சரிந்து வருகிறது. தங்கம் விலை அதிகரிக்க இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. கோல்ட் பீஸ் வாங்க விரும்புவோர் வாங்கலாம்.
சீனாவை விட அதிகம்: கடந்த 3 மாதங்களில் சீனாவுடன் ஒப்பிடும் போது இந்தியர்கள் 51% கூடுதலாகத் தங்கம் வாங்கியுள்ளனர். நாம் சீனாவை பின்னுக்குத் தள்ளி இருக்கிறோம். கோல்ட் காயின்கள், தங்க நகைகளை இந்தியர்கள் அதிகம் வாங்கியுள்ளனர். இந்தியர்கள் 250 டன் தங்கம் வாங்கியுள்ளனர். இதேநேரம் சீனாவில் வெறும் 165 டன் தங்கம் மட்டுமே வாங்கியுள்ளனர். ஜூலை- செப். காலாண்டில் கடந்தாண்டு உடன் ஒப்பிடும் போது சுமார் 18% கூடுதலாகத் தங்கம் வாங்கியுள்ளனர்.
மத்திய அரசு இறக்குமதி வரியைக் குறைத்ததால் இதற்கு முன்பு கருப்பு தங்கமாக உள்ளே வந்தது வெள்ளைத் தங்கமாக மாறி இருக்கிறது. இதற்கு முன்பு இறக்குமதி வரி அதிகமாக இருந்தபோது முறைகேடாகத் தங்கத்தைக் கடத்தி வந்தனர். இப்போது 15% இறக்குமதி வரை 6%ஆக குறைக்கப்பட்டுள்ளதால், தங்கக் கடத்தல் குறைந்துள்ளது. அதிகாரப்பூர்வமாகத் தங்கத்தை எடுத்து வருவதே அதிகரித்துள்ளது. தங்கம் இறக்குமதி அதிகரிக்க இதுவும் ஒரு காரணம்.
என்ன காரணம்: சிலர் இதை Revenge buying என்கிறார்கள். அதாவது மத்திய அரசின் இறக்குமதி வரி குறைப்பைத் தொடர்ந்து அதற்குப் பழிவாங்கும் வகையில் தங்கத்தை வாங்குகிறார்கள் என்று சர்வதேச வல்லுநர்களும் சொல்கிறார்கள். கடந்த 8 காலாண்டுகளில் நாம் பார்க்கும் போது 2 காலாண்டுகளில் நாம் தங்கத்தை அதிகம் வாங்கியுள்ளோம்.
மீதமுள்ள 6 காலாண்டுகளில் சீனா அதிகம் தங்கத்தை வாங்கியுள்ளது. இப்படி போட்டிப் போட்டுக் கொண்டு இரு நாடுகளும் தங்கத்தை வாங்கியுள்ளன. 2 நாட்டு கரன்சியும் பலவீனமாக இருக்கும் நிலையில், இந்த இரு நாடுகளில் உள்ள வங்கிகளும் பெரிதாக வட்டியைத் தரவில்லை. இதன் காரணமாகவே இந்த நாடுகளில் உள்ள மக்கள் அதிகளவில் தங்கம் வாங்குகிறார்கள்.
அடுத்த மாதம் மேலும் உயரும்: சில மக்கள் டிச. மாதம் இந்திய ரிசர்வ் வங்கி தனது வட்டியைக் குறைக்கலாம் என்கிறார்கள். அப்படி வட்டியைக் குறைத்தால் இந்திய ரூபாய் மதிப்பு மேலும் குறையும். இதனால் தங்கம் விலை மேலும் அதிகரிக்கவே செய்யும். அதேபோல தங்க பத்திரத்தை இனிமேல் போடப்போவதில்லை என்று மத்திய அரசு சொல்லாமல் சொல்லியுள்ளது. ஏற்கனவே 2 தங்கப் பத்திரத்தை முன்கூட்டியே வாபஸ் வாங்கியதாகச் சொன்னதாகத் தெரிகிறது" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications