ஒரு கோடி ரூபாயை நோக்கி பாயும் பிட்காயின்.. வரும் காலத்தில் என்னவாகும்? நம்பி பணத்தை போடலாமா!
சென்னை: தங்கத்தைத் தூக்கிச் சாப்பிடும் வகையில் இப்போது பிட்காயின் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சர்வதேச சந்தையில் பிட்காயின் மதிப்பு ஒரு லட்சத்தைத் தாண்டிவிட்டது. பிட்காயின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், வரும் காலத்தில் இது தொடர்ந்து உயருமா இல்லை குறையுமா என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
சர்வதேச சந்தையில் ஒரு பிட்காயின் விலை ஒரு லட்சம் அமெரிக்க டாலரை தாண்டிவிட்டது. அதாவது இந்திய மதிப்பில் ஒரே ஒரு பிட்காயின் மதிப்பு சுமார் 84.72 லட்ச ரூபாயாக உயர்ந்துள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு கோடியை நோக்கி வேகமாகப் பாய்ந்து வருகிறது.

இது சர்வதேச நிதிச் சந்தையில் பிட்காயினுக்கு மிக முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. டிரம்பின் வெற்றி, அமெரிக்கா பிட்காயினை ஒழுங்கு முறைப்படுத்தலாம் என்ற தகவல் உள்ளிட்டவையே பிட்காயின் இந்தளவுக்கு உயர முக்கிய காரணமாக இருக்கிறது.
பிட்காயின்: இந்தாண்டு தொடக்கத்துடன் ஒப்பிடுகையில் பிட்காயின் மதிப்பு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிக்குப் பிறகு சுமார் 45% வரை பிட்காயின் மதிப்பு அதிகரித்துள்ளது. அதேநேரம் இந்த விலை உயர்வு தொடருமா அல்லது இதில் இருந்து மீண்டும் சரிவின் பாதைக்குச் செல்லுமா என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. இதற்கான பதிலை நாம் பார்க்கும் முன்பு, பிட்காயின் விலையேற்றத்திற்கான காரணங்களை நாம் பார்க்கலாம்.
முதல் காரணம் டிரம்ப்பின் வெற்றி.. அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வென்றது கிரிப்டோகரன்சி சந்தையில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல கிர்போட் ஆதரவு நிலைப்பாடு கொண்ட எலான் மஸ்க், பால் அட்கின்ஸ் ஆகியோர் தனது நிர்வாகத்தில் டிரம்ப் நியமித்துள்ளார். இதனால் அமெரிக்காவில் கிரிப்டோ ஆதரவு கொள்கைகள் வரலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பிட்காயின் மதிப்பு உயர்ந்துள்ளது.
என்ன காரணம்: மேலும், முதலீட்டாளர்கள் அதிகளவில் பிட்காயினில் நம்பி முதலீடு செய்து வருகிறார்கள். பெரிய முதலீட்டாளர்கள் முதல் சில்லறை முதலீட்டாளர்கள் வரை பலரும் பிட்காயினில் நேரடியாக முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். அது புதிய உச்சத்தைத் தொட இதுவும் முக்கிய காரணமாக இருக்கிறது.
இது தொடர்பாகக் காயின் டிசிஎக்ஸ் நிறுவனத்தின் தலைவர் சுமித் குப்தா கூறுகையில், "ஒரு லட்ச டாலரை பிட்காயின் கடந்துள்ளது ரொம்பவே முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ஒரு லட்ச டாலர் என்பது வெறும் நம்பர் மட்டும் இல்லை. உளவியல் ரீதியாக முதலீட்டாளர்களுக்கு இது நம்பிக்கை தருவதாக இருக்கிறது" என்றார்.
எப்படி இருக்கும்: வரும் காலத்தில் பிட்காயின் எப்படி இருக்கும் என்ற கேள்விக்குப் பதிலளித்த சுமித், "இப்போது பலரும் பிட்காயினை ஒரு நல்ல, நிலையான முதலீடாகப் பார்க்கிறார்கள். வரும் காலங்களில் மேலும் பலர் இதை முதலீடாகக் கருதி முதலீடு செய்யத் தொடங்குவார்கள் என்றே நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை நீண்ட கால நோக்கில் பிட்காயின் நல்ல முதலீடாக இருக்கும் என்றே கருதுகிறேன்" என்றார்.
இது தொடர்பாக கோசாட் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ முகமது ரோஷன் அஸ்லாம் கூறுகையில், "பிட்காயினுக்கு அடுத்து வரும் காலகட்டம் தான் ரொம்பவே முக்கியமானது. சர்வதேச அளவில் பாலிசிக்கள் உருவாக்கப்படும் போது பிட்காயினை வைத்து தனது வளர்ச்சியைத் தக்கவைக்குமா என்பது முக்கியமானது.
உலக நாடுகள்: இப்போது அமெரிக்கா எப்படித் தங்கத்தைக் கையிருப்பாக வைத்து இருக்கிறதோ.. அதேபோல பிட்காயினையும் அவர்கள் சொத்தாகச் சேமிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை அனைத்தும் பிட்காயினுக்கு மதிப்பை அதிகரிக்கவே செய்யும். இது பிட்காயினை முதலீட்டாளர்கள் விற்பதைத் தடுக்கும். இதன் மூலம் அதன் மதிப்பு மேலும் நிலையானதாகும்" என்கிறார்.
சீனாவும் கூட பிட்காயினை தனி நபர்கள் வைத்திருப்பதற்குப் போட்ட தடையை நீக்கியுள்ளது. மேலும் பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகளும் பிட்காயினை சொத்தாகச் சேமித்து வைப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் காயின் சுவிட்ச் பிஸ்னஸ் பிரிவு தலைவர் பாலாஜி குறிப்பிட்டுள்ளார். இதனால் அடுத்தாண்டில் பிட்காயின் மதிப்பு மேலும் 50% உயர வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது சாதாரண செய்தி மட்டுமே.. இதை நிச்சயம் முதலீட்டு ஆலோசனையாகக் கருதக் கூடாது. மேலும், இந்தியாவில் பிட்காயின் உள்ளிட்ட க்ரிப்டோ கரன்சிகள் ஒழுங்குபடுத்தப்படாதவையாகவே உள்ளன. எனவே, முதலீடு குறித்த முடிவுகளை எடுக்கும் முன்பு பொருளாதார ஆலோசகரிடம் ஆலோசனை பெற்று முடிவை எடுக்கவும்.












Click it and Unblock the Notifications