பட்ஜெட் 2017: மாத சம்பளதாரர்களின் எதிர்பார்ப்பு என்ன?
நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதில் வருமான வரிவிலக்கு வரம்பு உயருமா? என்று அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களிடம் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லி: பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே அருண் ஜெட்லி இன்று நான்காவது ஆண்டு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறார். இதில் மாதச்சம்பளம் பெறுபவர்களுக்கு அதிக சலுகைகள் இருக்க வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது,
வருமான வரி செலுத்துபவர்களில் 60 சதவீதத்திற்கு மேல் உள்ளவர்கள் மாதச்சம்பளம் வாங்குபவர்கள்தான். ஆனால், அவர்களின் எதிர்பார்ப்பை ஒவ்வொரு ஆண்டும் பாதி அளவு கூட நிறைவேற்றுவதில்லை.
மாதச்சம்பளம் வாங்குபவர்கள் தற்போது 2.50 லட்சம் வரையிலும் வருமான வரி கட்டத்தேவை இல்லை. இன்று வெளியாக உள்ள பட்ஜெட்டில் இது 5 லட்சம் வரையிலும் உயர்த்தி அறிவிக்க வாய்ப்பு உள்ளது, குறைந்த பட்சம் 4.5 லட்சம் வரையிலுமாவது இருக்க வாய்ப்பு உள்ளது.
80C வரம்பு
இந்த நிதி ஆண்டு வரையிலும், மாதச்சம்பளம் வாங்குபவர்கள், வரி கட்டுவதை தவிர்க்க 80C பிரிவின்கீழ் 1.50 லட்சம் வரையில் வரி கட்டுவதை தவிர்க்க பங்குகள் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளிலும் 50ஆயிரத்தை நேசனல் பென்சன் திட்டத்திலும் முதலீடு செய்து வந்தனர், ஆனால், இதை 2.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், ஜெட்லி கடந்த பட்ஜெட்டில் ஏமாற்றி விட்டார். வரும் பட்ஜெட்டில் இந்த வரம்பை 3.00 லட்சம் வரையில் மியூச்சுவல் ஃபண்டுகளிலும் 1 லட்சம் ரூபாயை நேசனல் பென்சன் திட்டத்திலும உயர்த்தி அறிவிக்க வாய்ப்புகள் உள்ளன.
வீட்டுக்கடன்
மேலும் வீட்டுக்கடன் வாங்கியவர்கள், வீட்டுக் கடனுக்கான வட்டியில் இரண்டு லட்சம் வரையிலும் வரி விலக்கு பெற்று வருகின்றனர். ஆனால், இநத வரம்பை ஐந்து லட்சமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அநேகமாக இதை மூன்று லட்சமாக உயர்த்த வாய்ப்பு உள்ளது.
போக்குவரத்து சலுகை
சென்ற நிதி ஆண்டில் போக்குவரத்து சலுகையானது, 19200 ரூபாயாக இருந்தது. இதை 24000 ரூபாயாக உயர்த்த வாய்ப்புகள் உள்ளன. எது எப்படியோ இன்னும் சற்று நேரத்தில் பட்ஜெட் தாக்கலாகப் போகிறது. மத்தியதர வர்க்கத்தினர், மாத சம்பளதாரர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா அருண் ஜெட்லி பார்க்கலாம்.