பட்ஜெட்டில் மருத்துவச் செலவிற்கு கூடுதல் வரி விலக்கு கிடைக்குமா? - மக்கள் எதிர்பார்ப்பு
மாதச்சம்பளம் பெறுபவர்கள், தங்களின் பெற்றோர்களுக்கு செய்யும் மருத்துவச் செலவிற்கு 15000 ரூபாய் வரை மட்டுமே வரி விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், அதை 30000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு
டெல்லி: பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே அருண் ஜெட்லி இன்று நான்காவது நான்காவது ஆண்டு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறார். இதில் மாதச்சம்பளம் பெறுபவர்களுக்கு அதிக சலுகைகள் இருக்க வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது,
வருமான வரி செலுத்துபவர்களில் 60 சதவீதத்திற்கு மேல் உள்ளவர்கள் மாதச்சம்பளம் வாங்குபவர்கள்தான். ஆனால், அவர்களின் எதிர்பார்ப்பை எந்த ஒரு நிதி அமைச்சரும் ஒவ்வொரு வருடமும் கால்வாசி அளவு கூட நிறைவேற்றுவதில்லை. யானைப் பசிக்கு சோளைப் பொரியை கொடுத்ததுபோல கிள்ளித்தான் கொடுக்கிறார்கள்.
கூடுதல் சலுகை
சென்ற நிதி ஆண்டில் போக்குவரத்து சலுகையானது, 19200 ரூபாயாக இருந்தது. இதை 24000 ரூபாயாக உயர்த்த வாய்ப்புகள் உள்ளன. ஏன் என்றால், மாதச் சம்பளதாரர்களில் பெரும்பாலானவர்கள் இரு சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள். இவர்கள் தங்களின் மாதச் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை பெட்ரோல் செலவுகளுக்காக பழுது பார்ப்பு செலவுகளுக்காவும் ஒதுக்கியிருப்பவர்கள். ஆனால், ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒரு முறை பெட்ரோல் விலை ஏறுவதால், தங்களின் மற்ற செலவுகளுக்காக வைத்திருக்கும் பணத்தில் கை வைக்கும் சூழல் ஏற்படுகிறது. இந்த இக்காட்டான நிலையை தவிர்க்க கூடுதல் சலுகை கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள்.
மருத்துவ செலவீனங்கள்
மாதச்சம்பளம் பெறுபவர்கள், தங்களின் பெற்றோர்களுக்கு செய்யும் மருத்துவச் செலவிற்கு 15000 ரூபாய் வரை மட்டுமே வரி விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், அதை 30000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று பெரும்பாலானவர்கள் எதிர்பார்க்கின்றனர். ஏன் என்றால், இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் சுமார் 40 சதவிகிதத்தினர் 60 வயதை தாண்டியவர்கள். அவர்களுக்கு ஆகும் மருத்துவச் செலவுகளும் மிக அதிகமாக இருக்கிறது.
மோடி செய்வாரா?
பிரதமர் மோடி அவர்கள் பெரியவர்களின் மேல் அதிக மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பது அனைவரும் அறிந்ததே. அவர் இந்த விஷயத்தில் தலையிட்டு அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார் என்று மாதச்சம்பளம் வாங்குபவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ரொக்கம் இல்லா பண பரிவர்த்தனை
அதுபோல், மாதச்சம்பளம் வாங்குபவர்களில் 75 சதவிகிதத்தினர் தங்களின் சம்பளத்தை வங்கிக் கணக்கின் மூலமே பெறுகின்றனர். உயர் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்பு ரொக்கம் இல்லா பணப் பரிவர்த்தனைக்கு மாறுவதற்கு மத்திய அரசு ஊக்கம் அளித்துவருவதால். மின்னணு பணப் பரிவர்த்தனைக்கு உதவியாக இருக்கின்ற கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்க்கிங் பரிவர்த்தனைகளுக்கு சிறப்பு சலுகைகள் கிடைக்கம் என்று எதிர்பார்க்கின்றனர்.
அந்த எதிர்பார்ப்பை இந்த பட்ஜெட்டில் ஜெட்லி பூர்த்தி செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.