பட்ஜெட் 2017: சண்முகம் செட்டியார் முதல் அருண் ஜெட்லி வரை
இந்திய சுதந்திரத்தின் முதல் நிதியமைச்சர் சண்முகம் செட்டியார் தாக்கல் செய்த பட்ஜெட் முதல் 25வது நிதியமைச்சர் அருண் ஜெட்லி வரை பல வித மாற்றங்களையும் பயணங்களையும் கடந்து வந்துள்ளது மத்திய பொது பட்ஜெட்.
டெல்லி: இந்தியாவின் 25ஆவது நிதியமைச்சரான அருண் ஜெட்லி இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இது அருண் ஜெட்லி தாக்கல் செய்யும் நான்காவது பட்ஜெட்டாகும். மோடி அரசின் நான்காவது பொது பட்ஜெட், சுதந்திர இந்தியாவின் ஒருங்கிணைந்த பட்ஜெட் தாக்கலாகிறது.
1947 நவம்பர் 26ஆம் தேதி முதல் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போதைய நிதியமைச்சர் சண்முகம் செட்டி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பிரதமர் நேருவின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஆர்.கே.ஷண்முகம் செட்டியார் என்ற தமிழர் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்களிலேயே அதிகமுறை பட்ஜெட் தாக்கல் செய்த சாதனைக்குரியவர் முன்னாள் பிரதமரும் நிதியமைச்சருமான மொரார்ஜி தேசாய்.
மொரார்ஜி தேசாய்
நேரு ஆட்சிக்காலத்தில் நிதியமைச்சராகவும் அதனைத் தொடர்ந்து இந்திராகாந்தி ஆட்சிக்காலத்தில் துணை பிரதமராகவும் இருந்த மொரார்ஜி தேசாய் 10 முறை பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருக்கிறார். இவர் 1958 முதல் 1963ஆம் ஆண்டு வரையில் 7 பட்ஜெட்களையும், அதன்பின்னர் 1967 முதல் 1969 வரையில் 3 பட்ஜெட்களையும் தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் என்ற பெருமையை மொரார்ஜி தேசாய் பெற்றுள்ளார்.
பிறந்தநாளில் பட்ஜெட்
தனது பிறந்த நாளில் பட்ஜெட் தாக்கல் செய்தவர் என்ற பெயரும் மொரார்ஜிக்கு உண்டு. 1964 மற்றும் 1968ல் தனது பிறந்தநாளான பிப்ரவரி 29ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்தார் மொரார்ஜி தேசாய்.
ப.சிதம்பரம்
மொரார்ஜி தேசாயைத் தொடர்ந்து ப.சிதம்பரம் 8 முறை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இவரைத் தொடர்ந்து தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, யஸ்வந்த் சின்ஹா மற்றும் சி.டி.தேஷ்முக் ஆகிய நிதியமைச்சர்கள் தலா 7 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர்.
மன்மோகன் சிங்
அதேபோல, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நிதியமைச்சராக 6 முறையும், டி.டி.கிருஷ்ணமாச்சாரி 6 முறையும் தாக்கல் செய்துள்ளனர். அருண்ஜெட்லி தற்போது 4வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
ஜஸ்வந்த் சிங், வி.பி. சிங்
முன்னாள் குடியரசுத் தலைவரும் நிதியமைச்சருமான ஆர்.வெங்கட்ராமன் மூன்று முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். மேலும், ஜஸ்வந்த் சிங், வி.பி.சிங், ஜான் மத்தாய், ஷண்முகம் செட்டி ஆகியோர் தலா 2 முறையும் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர்.