தீபாவளி கிப்ட்... ஊழியர்களுக்கு அல்வா கொடுத்த நிறுவனங்கள்!
பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி உள்ளிட்ட காரணங்களினால் நடப்பாண்டு தீபாவளி பரிசு கொடுப்பதற்கான செலவை கார்ப்பரேட் நிறுவனங்கள் 35 சதவிகிதம் முதல் 40 சதவிகிதம் வரை குறைத்து விட்டதாக அசோசெம் நடத்திய ஆய்வில் தெர
இந்திய பொருளாதார வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பணமதிப்பு நீக்கம் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி பாதிப்பினால் தீபாவளி பரிசு கொடுப்பதற்கான செலவை கார்ப்பரேட் நிறுவனங்கள் 35 சதவிகிதம் முதல் 40 சதவிகிதம் வரை குறைத்து விட்டதாக அசோசெம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
வழக்கமாக தங்களது ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், விற்பனைக்கு உதவும் பிற நிறுவனங்களுக்கு தீபாவளி நேரத்தில் தான் கார்ப்பரேட் நிறுவனங்கள் கிப்டுகளை வாரி வழங்கும்.
தீபாவளி பரிசு
இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்காக ஊழியர்களுக்கு, துணை நிறுவனங்களுக்கு மற்றும் வாடிக்கை நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கும் பரிசுப் பொருட்கள் செலவு பெருமளவு குறைந்துள்ளதாக அசோசெம் நிறுவனம் நடத்திய ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.
758 நிறுவனங்களில் ஆய்வு
சென்னை, மும்பை, டெல்லி, ஐதராபாத், பெங்களூரு, ஜெய்ப்பூர், கொல்கத்தா, லக்னோ, அகமதாபாத் ஆகிய நகரங்களில் உள்ள சுமார் 758 நிறுவனங்களிடம் தொலைப்பேசி வழியாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
செலவை குறைத்த கார்ப்பரேட்டுகள்
இந்த ஆய்வறிக்கையில்,'பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்ற மத்திய அரசின் நடவடிக்கைகளால் தனியார் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பையடுத்து இந்நிறுவனங்கள் தீபாவளி பண்டிகைக்கு வழங்கும் பரிசுப்பொருட்களின் செலவை 35 முதல் 40 சதவிகிதம் வரை குறைத்துள்ளன.
ஸ்மார்ட் போன் விற்பனை சரிவு
இதனால் நுகர்பொருள் விற்பனையிலும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு சரிவு ஏற்பட்டுள்ளது.
வழக்கமாக தீபாவளிப் பண்டிகையின் போது ஸ்மார்ட்போன் விற்பனை சிறப்பாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு விற்பனையில் பெரும் சரிவையே கண்டுள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி
இந்திய பொருளாதார வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டதன் தாக்கம் நுகர்வோர் விற்பனைத் துறையையும் பெருமளவு பாதித்துள்ளது என்பதை அசோசெம் நடத்திய இந்த ஆய்வறிக்கை உறுதிப்படுத்துகிறது.
தீபாவளி பரிசு தொகை
கடந்த 2009ம் ஆண்டில் தீபாவளி பரிசுகளுக்காக இந்திய நிறுவனங்கள் செலவிட்ட தொகை சுமார் ரூ. 2,000 கோடியாகும். இது 2010ம் ஆண்டில் ரூ. 3,200 கோடியானது. ஆனால், இதைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்வதேச அளவிலான பொருளாதாரத் தேக்கம் காரணமாக கடந்த 2011ம் ஆண்டில் தீபாவளி கிப்டுகளுக்காக இந்திய நிறுவனங்கள் செலவிட்ட தொகை ரூ. 2,400 கோடி மட்டுமே. இது அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 25 சதவீதம் குறைவாகும்.
சாக்லேட் டப்பாக்கள்
டிஜிட்டல் கேமரா, வாட்சுகள், பேனாக்கள், பர்சுகள், செல்போன்கள், டேப்லட்களை தரும் நிறுவனங்கள் பலவும் சாக்லேட் டப்பாக்கள், உலர் பழங்களின் பாக்கெட்டுகளை மட்டுமே பரிசாக கொடுத்து ஒப்பேற்றி விடுகின்றன.
அதாவது பரவாயில்லை பல நிறுவனங்கள் எதுவுமே கொடுக்காமல் ஊழியர்களுக்கு அல்வா கொடுத்ததுதான் சோகத்திலும் சோகம்.