பண மதிப்பிழப்பு 2ஆம் ஆண்டு - அருண்ஜெட்லி அடுக்கும் காரணங்கள் இவைதான்
பண மதிப்பிழப்பின் நோக்கம் பணத்தை கைப்பற்றுவது இல்லை. முறையான பொருளாதாரத்தின் கீழ் கொண்டு வரும் நோக்கத்திலேயே பண மதிப்பிழப்பு மேற்கொள்ளப்பட்டது என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
டெல்லி: ரூபாய் நோட்டை தடை செய்வது என்பது பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் நோக்கம் அல்ல. நாட்டில் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதுதான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் முக்கிய இலக்கு என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். வரி செலுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் அருண் ஜெட்லி பதிவிட்டுள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி இரவு தொலைக்காட்சியில் பேசிய பிரதமர் மோடி உயர் பணமதிப்புடைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார். கறுப்புப் பண ஒழிப்பு, கள்ள நோட்டுத் தடுப்பு என்று காரணம் கூறப்பட்டாலும் இந்த நடவடிக்கையால் பலதரப்பட்ட மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வங்கி, ஏடிஎம் வாசல்களில் வரிசை கட்டி நின்றனர்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டு 2ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. இந்த நாளை கறுப்பு நாளாக எதிர்கட்சிகள் அனுசரிக்கின்றன. ஆனால் ஆளுங்கட்சியோ கறுப்பு பண ஒழிப்பு தினமாக கொண்டாடி வருகிறது.
மன்மோகன்சிங் சாடல்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நரேந்திர மோடி அரசு எடுத்த தவறான முடிவின் காரணமாக மோசமான அழிவுகளை ஏற்படுத்திய பணமதிப்பிழப்பு கொண்டு வரப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிவுற்றுள்ளன. இந்திய பொருளாதாரத்திலும் சமூகப் பரப்பிலும் பணமதிப்பிழப்பு ஏவிவிட்ட அழிவுக்கு தற்போது அனைவரும் சாட்சியாக உள்ளனர். காலம்தான் பெரிய மருந்து என்று கூறுவார்கள். ஆனால் பணமதிப்பிழப்பால் ஏற்பட்ட காயங்களும் வடுக்களும் இன்னும் ஆறவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
அருண் ஜெட்லி விளக்கம்
இந்த நிலையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது எதனால்? என விளக்கம் அளித்து அருண் ஜெட்லி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பண மதிப்பிழப்பின் நோக்கம் பணத்தை கைப்பற்றுவது இல்லை. முறையான பொருளாதாரத்தின் கீழ் கொண்டு வரும் நோக்கத்திலேயே பண மதிப்பிழப்பு மேற்கொள்ளப்பட்டது. ஒட்டு மொத்த பணமும் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு விட்டதாக, தவறான தகவல்களை கொண்ட விமர்சனம் முன் வைக்கப்பட்டு வருகிறது.
கறுப்பு பணம் ஒழிப்பு
பொருளாதார முறைப்படுத்துதலில் அரசு மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளில் மிகவும் முக்கியமான நடவடிக்கை பண மதிப்பிழப்பு நடவடிக்கையாகும். வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை அரசு முதலில் குறி வைத்தது. இதை செயல்படுத்த தவறியவர்கள் கருப்பு பணச்சட்டத்தின் கீழ் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்கள். வெளிநாட்டில் உள்ள வங்கி கணக்குகள் மற்றும் சொத்து விவரங்கள் அரசாங்கத்திற்கு கிடைத்தது. இதன் விளைவாக விதிகளை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிந்தது.
வங்கிகளில் பணம் டெபாசிட்
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கிகளில் பணத்தை செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. விதிமீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வங்கிகளில் பெருமளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டதன் மூலம், வங்கிகளின் கடன் வழங்கும் வலிமை மேம்பட்டது. அதிக அளவும் பணம் பெறப்பட்டதால், மியூட்சூவல் பண்ட் உள்ளிட்ட மேலும் சில முதலீட்டுக்கு பணம் திருப்பி விடப்பட்டது. முறையான பொருளாதரத்தின் ஒரு பிரிவாக இவை உருவெடுத்தது.
டிஜிட்டல் பரிவர்த்தனை
2018-19 நிதியாண்டில் தனிநபர் வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை, கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் 20.2 சதவீதம் அதிகரித்தது. கார்பரேட் வரி வருவாயும் 19.5 சதவீதம் அதிகரித்தது. நேரடி வரி வசூல் 6.6 சதவீதம் மற்றும் 9 சதவீதம் என முறையே அதிகரித்துள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. இந்தியாவால் உருவாக்கப்பட்ட யுபிஐ, ருபே ஆகியவற்றால், விசா, மாஸ்டர் கார்டு போன்றவை இந்தியாவில் மார்கெட் பங்குகளை இழக்கத்தொடங்கியது என்று அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.