டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்ந்தது!!
டெல்லி: டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டது.
பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்ட போதிலும், டீசல் விலை நிர்ணயம், இன்னும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.
இருப்பினும், டீசல் உற்பத்தி செலவுக்கும், சில்லறை விற்பனை விலைக்கும் இடையிலான வேறுபாடு நீங்கும்வரை, மாதந்தோறும் லிட்டருக்கு 50 காசுகள் வீதம் டீசல் விலையை உயர்த்திக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிகாரம் அளித்துள்ளது.
தேர்தல் முடிந்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், நேற்று டீசல் விலை 50 காசுகள் உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு, நேற்று நள்ளிரவு அமலுக்கு வந்தது. உள்ளூர் வரிகளுக்கு ஏற்ப, ஒவ்வொரு மெட்ரோ நகரிலும் விலை உயர்வில் வேறுபாடு காணப்பட்டது.
அதன்படி சென்னையில், டீசல் விலை லிட்டருக்கு 71 காசுகள் உயர்ந்தது. அதாவது விலை ரூ.60.50-ல் இருந்து ரூ.61.21 ஆக உயர்ந்தது.
டெல்லியில், ரூ.56.71 ஆக இருந்த டீசல் விலை, 57 காசுகள் உயர்ந்து, ரூ.57.28 ஆகவும், கொல்கத்தாவில், ரூ.61.38 ஆக இருந்த டீசல் விலை, 59 காசுகள் உயர்ந்து, ரூ.61.97 ஆகவும் உயர்ந்தது.
மும்பையில், ரூ.65.21 ஆக இருந்த டீசல் விலை, 63 காசுகள் உயர்ந்து, ரூ.65.84 ஆனது.