நாட்டின் ஜிடிபி 7.1% ஆக சரிவு: முட்டுக்கொடுக்கும் பாஜக - மார்தட்ட வேண்டாம் என்கிறார் ப.சி
நடப்பு நிதி ஆண்டின் 2ஆம் காலாண்டில் நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.1 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. முந்தைய ஜூன் காலாண்டில் 8.2 சதவீதமாக இருந்தது.
டெல்லி: இந்தியாவின் நிதிப்பற்றாக்குறை ஏப்ரல் - அக்டோபர் வரையிலான காலத்தில் ரூ. 6.49 லட்சம் கோடியாக உள்ள நிலையில் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.1 சதவிகித வளர்ச்சியை மட்டுமே பதிவுசெய்துள்ளதாக அரசு தரப்பு அறிக்கை வெளியாகியுள்ளது.
செப்டம்பர் காலாண்டில் இந்திய ஜிடிபி 7.4 சதவிகிதமாக இருக்கும் என்று கணித்திருந்தனர். ஆனால், அதை விடக் குறைந்து 7.1 சதவிகிதம் ஆக உள்ளது. இந்தப் பின்னடைவுக்கு ரூபாய் மதிப்பு வீழ்ச்சியும், வங்கி சாரா நிதி நிறுவனங்களின் நிதி நெருக்கடியும் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இதனால் நுகர்வும், முதலீடும் பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு இன்னமும் வேகம் காட்ட வேண்டும், மார்தட்ட வேண்டாம் என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜிடிபி சரிவு
ஜூலை - செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறித்த அறிக்கை அரசு தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது. இக்காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வெறும் 7.1 சதவிகிதம் மட்டுமே. இதற்கு முந்தைய ஏப்ரல் - ஜூன் காலாண்டில் கூட இந்தியா 8.2 சதவிகித வளர்ச்சியைக் கொண்டிருந்தது.

வளர்ச்சியில் பாதிப்பு
சென்ற ஆண்டின் இதே ஜூலை - செப்டம்பர் காலாண்டிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.3 % ஆக இருந்தது. குவாரி மற்றும் சுரங்கத் துறையில் ஏற்பட்ட 2.4 சதவிகித வீழ்ச்சியினால் இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. எனினும் உற்பத்தித் துறையின் வளர்ச்சி 7.1 சதவிகிதத்திலிருந்து 7.4 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
|
சுபாஷ் சந்திர கார்க்
மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் ட்விட்டரில் வெளியிட்ட செய்தியில், நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் ஜிடிபி 7.1 சதவிகிமாகக் குறைந்தது வேதனை அளிக்கிறது. ஆனால், உற்பத்தித் துறை வளர்ச்சி 7.4 சதவிகிதமாகவும், வேளாண்மை வளர்ச்சி 3.8 சதவிகிதமாகவும் சீராக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

ஜிடிபி வளர்ச்சி
கட்டுமானத்துறையில் 6.8 சதவிகிதம், சுரங்கத்துறையில் மைனல் 2.4 சதவிகிதமாக வளர்ச்சி இருக்கிறது. ஆனால், ஒட்டுமொத்த நடப்பு நிதியாண்டின் முதல்பாதியில் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவிகிதம் இருப்பது ஆரோக்கியமானதாகும். இது உலகில் எந்த நாட்டிலும் இல்லாத பொருளாதார வளர்ச்சி எனவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
|
ப.சிதம்பரம் கருத்து
2019 மே மாதத்தில் பொதுத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த அறிக்கை அனைவரின் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. ஜிடிபியில் ஏற்பட்டுள்ள சரிவு எதிர்கட்சியினருக்கு மோடி அரசை விமர்சிப்பதற்கு நல்லதொரு வாய்ப்பாக அமைந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பொருளாதார வளர்ச்சி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 2ஆம் காலாண்டில் நன்றாக இருக்கிறது. ஆனால், முதலாம் காலாண்டைக்காட்டிலும் ஒரு சதவிகிதம் குறைவு. கடந்த ஆண்டில் மிகவும் குறைந்த அடிப்படை வைத்துக் கணக்கிட்டதால், முதலாம் காலாண்டில் வளர்ச்சி அதிகமாக இருந்தது. அதனால் முதலாம் காலாண்டில் வளர்ச்சி அதிகமாக இருந்தது என்று பாஜகவினர் மார்தட்டுவது சரியல்ல. இதேபோல, 3ஆம், 4ஆம் காலாண்டிலும் வளர்ச்சி வேகம் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications