தாறுமாறாக சரியும் தங்கம் விலை! காரணம் என்ன! இன்னும் எவ்வளவு நாள் குறையும்! நாம் செய்ய வேண்டியது என்ன
மும்பை: டிரம்ப் ரெசிப்ரோக்கல் வரி அறிவிப்பிற்கு பிறகு தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால் மக்கள் உற்சாகத்தில் உள்ளனர். தங்கம் விலை திடீரென இப்படி குறைய என்ன காரணம்.. இது இன்னும் எத்தனை காலம் தொடரும் என்பது குறித்து வல்லுநர்கள் சில முக்கிய கருத்துகளை பகிர்ந்துள்ளனர். அது குறித்து நாம் பார்க்கலாம்.
புவிசார் அரசியல், பொருளாதார குழப்பம் உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில காலமாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இடையில் டிரம்ப் வேறு ரெசிப்ரோக்கல் வரி என்று உலக நாடுகளை அச்சுறுத்திய நிலையில், தங்கம் விலை சட்டென அதிகரித்தது. இது இந்திய சந்தையிலும் எதிரொலித்தது.

ரெசிப்ரோக்கல் வரி
அதிகபட்சமாக டிரம்ப் ரெசிப்ரோக்கல் வரியை அறிவிக்கும் முன்பு தங்கம் விலை ஒரு சவரன் ரூ.68,480 வரை சென்றது. ஆனால், அதன் பிறகு தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்தே வருகிறது. கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை இன்றும் சரிந்துள்ளது. சென்னையில் ஒரு சவரன் ரூ.66,280க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவது மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் தங்கத்தை வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதேநேரம் தங்கம் விலை இப்போது திடீரென ஏன் குறைகிறது. இது எத்தனை காலம் குறையும் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். இதற்கான பதிலை வல்லுநர்கள் அளித்துள்ளனர்.
இயல்பானது தான்
இது தொடர்பாக வல்லுநர்கள் கூறுகையில், "வேறு இடங்களில் பணம் தேவைப்படும்போது டக்கென தங்கத்தை விற்று பணமாக மாற்றிக் கொள்ள முடியும். சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தை எளிதாக பணமாக மாற்றும் சொத்தாகவே பார்க்கிறார்கள். இதனால் ஆபத்தான நிகழ்வுக்குப் பிறகு (இங்கு டிரம்ப் வரி விதிப்பு) தங்கம் விற்கப்படுவது இயல்பான நிகழ்வு தான். வரலாற்றில் கடந்த காலங்களில என்ன நடந்துள்ளதோ.. அதேதான் இப்போதும் நடக்கிறது" என்றனர்.
காரணங்கள்
கடந்த சில நாட்களாக தங்கம் விலை சரிந்தாலும் கூட இந்தாண்டு தொடக்கத்துடன் ஒப்பிட்டு பார்க்கும்போது தங்கம் விலை 15.6% உயர்ந்தே இருக்கிறது. உலக நாடுகளின் மத்திய வங்கிகள் (நமது நாட்டின் ரிசர்வ் வங்கி போல மற்ற நாடுகளின் வங்கிகள்) தங்கத்தை தொடர்ந்து வாங்குவதே இதற்கு பிரதான காரணம். மேலும், பொருளாதார குழப்பம் மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் ஆகியவையும் தங்கத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்து. இதன் காரணமாகவே கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.
ரெசிப்ரோக்கல் வரி
அதாவது ரெசிப்ரோக்கல் வரியை அறிவிக்க போகிறேன் என டிரம்ப் தொடர்ந்து பல வாரங்களாக கூறி வந்தார். இதனால் அந்த அச்சமும் தங்கம் விலை எகிற முக்கிய காரணமாக இருந்தது. இப்போது டிரம்ப் ரெசிப்ரோக்கல் வரியை அறிவித்துவிட்ட நிலையில், அந்த ப்ரீமியம் தொகை தான் இப்போது சரியாகி வருவதாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். பொருளாதார மந்தநிலை குறித்த அச்சமும் இதற்கு இன்னொரு காரணமாக இருக்கிறது.
எப்போது உயரும்
இது தொடர்பாக சிட்டி இன்டெக்ஸின் மூத்த ஆய்வாளர் மாட் சிம்ப்சன் கூறுகையில், "தங்கம் விலை கடந்த சில நாட்களாக இறங்கினாலும் கூட இன்னும் பல முதலீட்டாளர்கள் தங்கத்தை தான் பாதுகாப்பான முதலீடாக கருதுகிறார்கள். டிரம்பின் புதிய வரிகள் நாம் எதிர்பார்த்ததை காட்டிலும் மோசமாக இருக்கிறது. இது பணவீக்கத்தை அதிகரித்து, வளர்ச்சியை குறைக்கலாம். இதனால் சீக்கிரமே முதலீட்டாளர்கள் தங்கத்தை நோக்கி வர வாய்ப்பு இருக்கிறது" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications