ஜிஎஸ்டி வரி வசூல் கடும் சரிவு - பிப்ரவரியில் ரூ. 85,174 கோடி மட்டுமே கலெக்சன்
பிப்ரவரி மாதத்திய ஜிஎஸ்டி வரி வசூல் கடும் சரிவை சந்தித்துள்ளதாக நிதியமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி: பிப்ரவரி மாதத்திய ஜிஎஸ்டி ரிட்டன் மிகக் குறைவாக தாக்கல் செய்துள்ளதால் நவம்பர் மாதத்திற்கு பின்பு தற்போது இரண்டாவது முறையாக பிப்ரவரி மாதத்திய ஜிஎஸ்டி வரி வசூலும் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை கடந்த ஆண்டு ஜூலை முதல் அமல்படுத்தப்பட்டு ஜிஎஸ்டி இணைய தளத்தில் பதிவு செய்த 9.9 மில்லியன் வணிகர்களும் தொழில் நிறுவனங்களும் மாதாந்திர ரிட்டனை தாக்கல் செய்து நிகர வரியையும் செலுத்தி வருகின்றனர்.
ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்ட புதிதில் ஆரம்ப ஜோரிலும், ஆர்வக் கோளாறினாலும், அனைவரும் போட்டி போட்டு மாதாந்திர ரிட்டன் தாக்கல் செய்ததால் ஜிஎஸ்டி வரி வசூலானது கடந்த ஜூலை மாதத்தில் உச்ச பட்சமாக 94,063 கோடியை தொட்டு சாதனை படைத்தது.
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் இதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்து, ஜிஎஸ்டி என்ற வரி முறையை கொண்டு வந்ததால் நாங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைத்து விட்டது. இனிமேல் இந்தியப் பொருளதாதாரம் விரைவில் நாம் எதிர்பார்க்கும் சதவிதிதத்தை தொடும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
நிதியமைச்சரின் கூற்றை உண்மை என்று நிரூபிப்பது போல ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வரி வசூலும் முறையே 90,669 கோடி மற்றும் 92,150 கோடி ருபாய் என்று உச்சத்தை தொட்டது. இதற்கு காரணம் வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினர் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை தெளிவாக புரிந்து கொள்ளாததுதான். இதனை விளைவாக தங்களின் மாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டன்களை முழுமையாக ஆய்வு செய்யாமல் தாக்கல் செய்ததுதான்.
பின்னர் வந்த மாதங்களில் அனைத்து வர்த்தகர்களும் தொழில் துறையினரும் ஒரளவு புரிந்துகொண்டு தங்களின் மாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டன்களை தாக்கல் செய்ததால் வரி வருவாய் சரியத் தொடங்கியது. தற்போது பிப்ரவரி மாத ஜிஎஸ்டி வரி வசூலும் கடுமையாக சரிவடைந்து 85,174 கோடி ரூபாயை எட்டியது.
இதில் மாநில வரி (SGST) வருவாயாக 20,456 கோடி ரூபாயும் மத்திய வரி CGST) வருவாயாக 14,945 கோடி ரூபாயாயும் ஒருங்கிணைந்த (IGST) வரி வருவாயாக 42,456 கோடி ரூபாயும் இதர இழப்பீடு வரியாக 7,317 கோடி ரூபாயும் வசூலாகி உள்ளது.
பிப்ரவரி மாத ஜிஎஸ்டி வரி வசூல் குறைந்ததற்கு மற்றொரு காரணம், கடந்த மார்ச் 25ம் தேதி வரையிலும் சுமார் 69 சதவிகிதம் வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினர் மட்டுமே பிப்ரவரி மாத ஜிஎஸ்டி ரிட்டன்களை தாக்கல் செய்ததுதான். இன்னும் சில வர்த்தகர்களும் தொழில் துறையினரும் ஜிஎஸ்டிஆர் படிவங்களை சரிவர புரிந்துகொள்ள முடியாமல் தத்தளித்துக்கொண்டு இருப்பதால், பிப்ரவரி மாத ஜிஎஸ்டி ரிட்டன்களை தாக்கல் செய்ய முடியாமல் திணறிவருகின்றனர்.
ஜிஎஸ்டி ஆணையமும் வர்த்தகர்களின் சங்கடங்களை புரிந்துகொண்டு வரும் 2018-19ம் நிதியாண்டில் இருந்து முற்றிலும் புதிய படிவத்தை அறிமுகம் செய்து ஜிஎஸ்டி வரி வருவாயை பெருக்க ஆலோசனை செய்துவருகின்றது.
ஜிஎஸ்டி வரி முறையை கொண்டுவரும்போது ஒரே தேசம், ஒரே வரி முறை என்று விளம்பரம் செய்துவிட்டு, அதை அமல்படுத்தும்போது ஒரே தேசம் தான், ஆனால் வசூலிக்கும் வரிவிகிதம் தான் பலவகைகள் என்று இருப்பதால் ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி வரி வசூல் குறையக் காரணம்.
எனவே வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினரின் மனக்குமுறலை அறிந்துகொண்டு அதற்கேற்ற வகையில் ஜிஎஸ்டி வரி முறையில் மாற்றம் கொண்டுவரவேண்டும் என்பதே வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினரின் எதிர்பார்ப்பாகும்.