“விஜய் ஆட்சிக்கு வந்ததும் அதிரடி மாற்றங்கள்.." மாரி செல்வராஜின் ஒரு பதிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
சென்னை: புதிய அமைச்சரவை அமைப்பிலேயே தனது அரசியல் அணுகுமுறையை தெளிவாக வெளிப்படுத்தியிருக்கும் விஜய், இளம் தலைமுறை, பட்டியலின மக்கள், சிறுபான்மை சமூகத்தினர் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு முக்கிய இடம் கொடுத்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். இந்த நிலையில், திரைத்துறையிலிருந்தும் பாராட்டு மழை பெய்ய தொடங்கியுள்ளது. குறிப்பாக இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்ட பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி அரசியல் வட்டாரங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.

முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடு
முதலமைச்சராக பதவியேற்ற விஜய் தலைமையிலான இந்த அமைச்சரவையில், தவெக சார்பில் 31 அமைச்சர்களும், கூட்டணி கட்சிகள் சார்பில் 4 அமைச்சர்களும் இடம்பெற்றுள்ளனர். மொத்தத்தில் இது ஒரு சாதாரண அமைச்சரவை அல்ல; சமூகநீதி, இளம் தலைமுறை முன்னேற்றம், சிறுபான்மை மற்றும் பட்டியலின மக்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் புதிய அரசியல் அணுகுமுறையாக இதை பலரும் பார்க்கிறார்கள்.
இளைஞர்களுக்கு வாய்ப்பு
குறிப்பாக, தமிழக அரசியலில் பல ஆண்டுகளாக பேசப்பட்டு வந்த "இளைஞர்களுக்கு வாய்ப்பு எப்போது?" என்ற கேள்விக்கு விஜய் தனது முதல் அமைச்சரவையிலேயே பதில் கொடுத்திருக்கிறார் என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். அனுபவமுள்ளவர்களுடன் இளம் முகங்களையும் இணைத்திருப்பது, எதிர்கால அரசியலுக்கான ஒரு புதிய சிக்னலாக பார்க்கப்படுகிறது.
விஜய் அரசியலுக்கு வந்த நாள் முதல், "அவர் வெறும் நடிகரா அல்லது முழுமையான அரசியல்வாதியா?" என்ற கேள்வி தொடர்ந்து எழுந்துகொண்டே இருந்தது. ஆனால் தேர்தல் வெற்றியும், அதற்குப் பிறகு நடந்த வேகமான முடிவுகளும் அந்த சந்தேகங்களுக்கு பதிலாக அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பதவியேற்ற உடனேயே மக்கள் சார்ந்த முக்கிய முடிவுகள், நிர்வாக ரீதியான மாற்றங்கள், வேகமான ஆலோசனைகள் போன்றவை நடந்து வருவதாக பேசப்படும் நிலையில், தற்போது திரைத்துறையிலிருந்தும் விஜய்க்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
அந்த வகையில், இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்ட பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமூகநீதி சார்ந்த கதைகளை தனது படங்களில் ஸ்ட்ராங்காக பேசிய இயக்குநரான மாரி செல்வராஜ், விஜயின் அமைச்சரவை அமைப்பை வெளிப்படையாக பாராட்டியிருக்கிறார்.
மாரி செல்வராஜ் பதிவு
அவர் தனது எக்ஸ் தள பதிவில், "சமூகநீதியின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக தனது அரசின் முதல் அமைச்சரவையை ஒரு கூட்டணி அமைச்சரவையாக வடிவமைத்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும், தமிழ்நாட்டின் முதல்வர் மாண்புமிகு திரு. சி.ஜோசப் விஜய் அவர்களுக்கும் எனது நன்றிகளையும் பெரும் பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், அமைச்சரவையில் இடம்பிடித்துள்ள இளம் தலைமுறை அமைச்சர்கள், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள், சிறுபான்மை சமூக அமைச்சர்கள், கூட்டணி கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் அவர் தனிப்பட்ட வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். இறுதியில், "மக்கள் பணிகள் சிறக்கட்டும்" என்று அவர் கூறியிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இது மட்டும் அல்லாமல், திரைத்துறையில் இருந்து பல பிரபலங்கள் விஜயின் அரசியல் பயணத்தை ஆரம்பத்திலிருந்தே கவனித்து வந்தனர். சிலர் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தனர்; சிலர் அமைதியாக இருந்தாலும் அவரது அரசியல் வளர்ச்சியை ஆர்வத்துடன் பார்த்தனர். இப்போது ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, அந்த அமைதி மெதுவாக உடைந்து பாராட்டு குரல்கள் அதிகரித்து வருகின்றன.
ஒரு நடிகராக கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த விஜய், இப்போது அரசியல்வாதியாக மக்களின் நம்பிக்கையையும் பெற முயற்சிக்கிறார். அந்த முயற்சியின் முதல் கட்டமாக இந்த அமைச்சரவை பார்க்கப்படுகிறது.













Click it and Unblock the Notifications