ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்ய நவ.30 வரை காலக்கெடு நீட்டிப்பு
ஜிஎஸ்டி ஜூலை மாத கணக்குகளை தாக்கல் செய்யும் இறுதி தேதியை நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லி: ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதற்கான தேதியை நீட்டித்து மத்திய நிதியமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு ஜூலை 1 முதல் அமலுக்கு வந்தது. ஜிஎஸ்டி வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய நடைமுறைகளில் சில சிக்கல்கள் இருந்ததால் வணிகர்கள் கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டது.

மேலும் விற்பனை கொள்முதல் என தனியாக ஜிஎஸ்டிஆர் 1, ஜிஎஸ்டிஆர் 2 மற்றும் ஜிஎஸ்டிஆர் 3 என மூன்று படிவங்களாக தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டது.
ஜூலை மாதத்திற்கான இந்த படிவங்களை தாக்கல் செய்ய இரண்டு முறை கால அவகாசம் வழங்கப்பட்டு பின்னர் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் ஜிஎஸ்டிஆர் படிவங்கள் தாக்கலுக்கு மீண்டும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
விற்பனைக்கான ஜிஎஸ்டிஆர் 1 படிவத்தை அக்டோபர் 31க்குள் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து கொள்முதலுக்கான ஜிஎஸ்டிஆர்- 2 படிவத்தை அக்டோபர் 31ம் தேதக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிதியாண்டின் இரண்டாவது (ஜூலை மாத) கணக்குகளை தாக்கல் செய்ய அக்டோபர் மாதம் 31ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை சுமார் 12 லட்சம் நிறுவனங்கள் கணக்குகளை தாக்கல் செய்துள்ளன.
தற்போது இதற்கான காலக்கெடு நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே மொத்த கணக்கையும் குறிப்பிடும் ஜிஎஸ்டிஆர் 3 படிவத்தை நவம்பர் 10-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. தற்போது இதற்கான காலக்கெடு டிசம்பர் 11ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்கீழ் சுமார் 30 லட்சம் தொழில் நிறுவனங்கள் ஒவ்வொரு நிதியாண்டின் போதும் நான்கு தவணைகளாக வரி கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று வர்த்தகர்களும் தொழில் துறையினரும் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், ஜூலை மாத கணக்குகளை தாக்கல் செய்யும் இறுதி தேதியை நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. இதேபோல், மூன்றாவது காலாண்டு கணக்குளை தாக்கல் செய்யும் தேதியும் நவம்பர் 10-ம் தேதியில் இருந்து டிசம்பர் 11ஆம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications