பழக்க வழக்கங்கள் தான் உங்களை பணக்காரன் ஆக்கும்.. வெற்றிக்கான மூன்று மந்திரங்கள்.. பிரபலம் பதிவு
சென்னை: இன்றைக்கு நிறைய பேர் பணத்தை எப்படி முதலீடு செய்வது, எதில் முதலீடு செய்தால் அதிக பணம் கிடைக்கும் என்பதை அறிய அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அதற்காக பங்குசந்தை முதலீடுகள் தொடர்பான லேட்டஸ்ட் டிப்ஸ்கள், அதிக லாபம் தரும் நிறுவனங்களின் பங்குகள் போன்றவை குறித்து அறிய முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் பணம் சம்பாதிப்பதற்கும், முதலீடு செய்வதற்கும் ஆடம்பரமான புதிய வழிகளைத் தேடுவதை நிறுத்திவிட்டு, அடிப்படைக் கட்டுப்பாடான பழக்க வழக்கங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆடிட்டர் நிதின் கௌசிக் கூறியுள்ளார்.
இன்றைக்கு எந்த பங்கில் போட்டால் அதிக லாபம் கிடைக்கும். எந்த நிறுவனங்கள் எல்லாம் புதிதாக பங்கு சந்தையில் வருகின்றன. எந்த நிறுவனங்கள் புதிதாக வந்து அதிக லாபத்தில் இயங்குகின்றன என்று ஆய்வு செய்துதான் முதலீட்டாளர்கள் பணத்தை ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்கிறார்கள். அதற்காக பங்குசந்தை முதலீடுகள் தொடர்பான லேட்டஸ்ட் டிப்ஸ்களை அதிகம் பார்க்கிறார்கள். இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நிதி நிபுணரும், பிரபல ஆடிட்டருமான நிதின் கவுசிக் கூறுகையில், பணம் சம்பாதிப்பதற்கும் முதலீடு செய்வதற்கும் ஆடம்பரமான புதிய வழிகளைத் தேடுவதை நிறுத்திவிட்டு, அடிப்படைக் கட்டுப்பாடான பழக்கவழக்கங்களில் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்த வேண்டும்

ஒரே இரவில் பணக்காரன் ஆக முடியாது
இன்றைக்கு பங்கு சந்தை தொடர்பான லேட்டஸ்ட் ஆப்கள் , சூப்பரான பங்கு குறிப்பு அல்லது அதிக வருமானம் தரும் நிதி ஆகியவற்றை உடனே வாங்கினால், ஒரே இரவில் பணக்காரர் ஆகிவிடலாம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் இப்படி நினைப்பது என்பது, புதிய ஷூக்களைப் போட்டால் தானாக வேகமாக ஓடிவிடலாம் என்று எதிர்பார்ப்பதற்குச் சமம் ஆகும். ஏனெனில் புதிய டிப்ஸ்கள் உங்களை இன்னும் செயல்திறனை அதிகரிக்க வைக்குமே தவிர, அதை பணத்தை உருவாக்காது. முதலீட்டில் உண்மையான லாபமும் வெற்றியும் ஆப் போன்ற லேட்டஸ்ட் டெக்னாலஜிகளால் வருவதில்லை. செல்வம் என்பது ஒழுக்கமான பழக்க வழக்கங்களை உருவாக்குவதன் மூலம் மட்டுமே வருகின்றன.
வெற்றிக்கு மூன்று மந்திரங்கள்
எந்த ஒரு இணையதளமும், ரகசியத் திட்டமும் உங்களைச் சிறந்த முதலீட்டாளராக்க முடியாது. வெற்றிக்கான மூன்று மந்திரங்கள் உள்ளன. நிலைத்தன்மை வேண்டும். அதாவது தொடர்ச்சியாக முதலீடு செய்வதுதான் பலனைக் கொடுக்கும். அடுத்தாக கட்டுப்பாடு வேண்டும். முதலீடு செய்யும் விவகாரத்தில் சரியான ஒழுக்கம்தான் செல்வத்தைப் பெருக்குகிறது. அதேபோல் மூன்றாவது மந்திரமான பொறுமையும் அவசியம். பொறுமையாக இருப்பதுதான் முதலீட்டில் வெற்றியை தரும். அவசரமான குறுக்குவழிகளை நிச்சயம் உங்கள் பொறுமை வெல்லும்.
ஆட்டோமேஷன்
பணத்தை முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள் மிகப் பெரிய விஷயத்தை மட்டுமே தூரத்தி செல்வதற்கு பதிலாக, ஆட்டோமேஷன் , பல்வகைப்படுத்தல் மற்றும் காலமுறை மதிப்பாய்வு ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். ஆட்டோமேஷன் என்பது என்றால், உங்கள் முதலீட்டை நீங்கள் ஒவ்வொரு மாதமும் 'நினைவுபடுத்தி' செய்ய வேண்டியதிருக்கிறது.. வங்கிக் கணக்கில் இருந்து குறிப்பிட்ட நாளில் தானாகவே பணம் எடுத்து முதலீடு செய்யப்படும்படி அமைப்பது தான் ஆட்டோமேஷன்.
sip
இன்னும் தெளிவாக சொல்வது என்றால், வழக்கமாகச் சொல்லும் SIP முறை. நீங்கள் மாதம் ₹5000 முதலீடு செய்ய விரும்பினால், அந்தப் பணம் உங்கள் சம்பளம் வந்தவுடன் தானாகவே முதலீட்டுக் கணக்கிற்குச் சென்றுவிடும் அல்லவா.. அதுதான். இந்த ஆட்டோமேஷன், முதலீடு செய்யும் பழக்கத்தை நிலையானதாகவும், ஒழுக்கமானதாகவும் மாற்றுகிறது. நீங்கள் மறந்தாலும், சந்தையைப் பற்றிக் கவலைப்பட்டாலும், முதலீடு ஒரு நாளும் தடைப்படாது.
பல்வகைப்படுத்தல்
அடுத்ததாக பல்வகைப்படுத்தல்.. ஆங்கிலத்தில் இதனை Diversification என்று சொல்வார்கள். இதன் விளக்கம் என்னவென்றால், உங்களின் மொத்தப் பணத்தையும் ஒரே ஒரு பங்கு, ஒரே ஒரு நிறுவனம் அல்லது ஒரே ஒரு துறையில் மட்டும் முதலீடு செய்யாமல், பல்வேறு இடங்களில் பிரித்து முதலீடு செய்வது ஆகும். இன்னும் புரியும் படி சொல்வது என்றால். உங்கள் முட்டைகள் அனைத்தையும் ஒரே கூடையில் வைக்காதீர்கள் என்ற பழமொழி பலருக்கும் தெரியும். அதுபோல் நீங்கள் பங்குகள், பரஸ்பர நிதிகள் (Mutual Funds), தங்கம் மற்றும் வங்கிக் கணக்குகள் எனப் பலவற்றில் பிரித்து வைத்தால், ஏதேனும் ஒரு துறையில் சரிவு ஏற்பட்டாலும், மற்ற முதலீடுகள் உங்களைக் காப்பாற்றும். இதன் மூலம் முதலீட்டின் ஆபத்தை குறைக்க முடியும்.நீண்ட காலத்திற்குச் சீரான வருமானம் கிடைக்க உதவும்.
காலமுறை மதிப்பாய்வு
அடுத்தாக காலமுறை மதிப்பாய்வு.. ஆங்கிலத்தில் இதனை Periodic Reviews என்று சொல்வார்கள்.. உங்கள் முதலீடுகளை வாங்கிய பிறகு அப்படியே விட்டுவிடாமல், குறிப்பிட்ட கால இடைவெளியில் (உதாரணமாக, 6 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது ஒரு வருடத்திற்கு ஒரு முறை) மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும். அதாவது நீங்கள் வாங்கிய பங்குகள் அல்லது நிதிகள் இப்போதும் உங்கள் இலக்கை அடைய உதவுகிறதா? சில முதலீடுகள் மிக அதிகமாக வளர்ந்துவிட்டால், அவற்றின் லாபத்தில் ஒரு பகுதியை எடுத்து வேறு பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்வது போன்றவற்றைச் செய்வது தான் காலமுறை மதிப்பாய்வு என்று அழைக்கப்படுகிறது.
இப்படி செய்வதால், உங்களின் முதலீட்டுத் திட்டம் உங்களின் தற்போதைய நிதி இலக்குகளுக்கும் வாழ்க்கை நிலைக்கும் ஏற்றவாறு இருப்பதை உறுதிசெய்யும். எனவே பெரிய லாபத்தைத் தேடி ஓடாமல், இந்த மூன்று நல்ல பழக்கவழக்கங்களை அமைத்துக் கொண்டாலே போதும், செல்வம் தானாகச் சேர ஆரம்பிக்கும்.
தொடர்ச்சியான முதலீடு
இறுதியாக தொடர்ச்சியாக செய்யும் சிறு முதலீடு எவ்வளவு பெரிய லாபம் தரும் என்பதை பார்ப்போம். மாதத்திற்கு ₹5,000-ஐ 10 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து முதலீடு செய்யும் ஒருவர் ₹10 லட்சத்துக்கு மேல் திரட்ட முடியும் (12% ஆண்டு வருமானம் என்று வைத்துக் கொண்டால்). ' எனவே பெரிய டார்க்கெட்டை நோக்கி செல்வோர் இதனை கவனிக்க வேண்டும். இறுதியாக பேசிக்தான் முக்கியம். சேமிப்பு தொடர்பாக நல்ல பழக்கவழக்கங்களை உருவாக்குங்கள். நிலையாக இருங்கள். அதுவே வெற்றியை தரும். மற்றபடி வெறும் ஆப்ஸ்களோ, லேட்டஸ்ட் டெக்னாலஜியோ வெற்றியை உருவாக்காது" இவ்வாறு கௌசிக் தனது பதிவில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications