இன்று ரூ.50 லட்சம் உள்ள வீட்டின் விலை.. 10 ஆண்டுகளில் எந்தளவுக்கு உயரும்? அம்மாடி தலை சுத்துதே
மும்பை: பணவீக்கம் என்பது பொருளாதாரத்தின் தவிர்க்க முடியாத பகுதியாகும். பொதுமக்களின் வாங்கும் திறனை நிர்ணயம் செய்வதில் பணவீக்கத்திற்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது. ஆனால் நம்மில் பலருக்கும் பணவீக்கம் குறித்துத் தெளிவாகத் தெரிவதில்லை. பணவீக்கம் காரணமாக ஒரு பொருளின் விலை எந்தளவுக்கு அதிகரிக்கிறது.. இது எப்படி ஒருவரது வாங்கும் சக்தியைப் பாதிக்கிறது என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியாவைப் பொறுத்தவரைப் பணவீக்கம் என்பது ஆண்டுக்கு 6% என்ற ரேஞ்சில் இருக்கிறது. அதாவது அனைத்து பொருட்களின் விலையும் சராசரியாக 6% வரை உயர்கிறது.

பணவீக்கம்:
சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பணவீக்கம் இதைக் காட்டிலும் சற்று கூடுதலாகவே இருக்கும். பணவீக்கம் காரணமாகப் பொருட்கள் விலை உயர்வதால், பொதுமக்களின் வாங்கும் சக்தி பாதிக்கப்படுகிறது.
இது தொடர்பாக பேங்பஜார் நிறுவனத்தின் சிஇஓ ஆதில் ஷெட்டி கூறுகையில், "அனைவருக்கும் புரியும்படி எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால்.. பொருட்கள் மற்றும் சேவைகள் எவ்வளவு தூரம் அதிகரிக்கிறது என்பதே பணவீக்கமாகும். இது பொதுமக்களின் வாங்கும் சக்தியைப் பாதிக்கிறது. அதாவது இன்று நீங்கள் குறிப்பிட்ட அளவு பணத்துடன் சில பொருட்களை வாங்குகிறீர்கள் என்றால்.. வரும் காலத்தில் அதே அளவு பொருளை வாங்க உங்களுக்குக் கூடுதலாகச் செலவாகும்" என்றார்.
பணவீக்கம் என்றால் என்ன:
அதாவது இன்று நீங்கள் ரூ.1000 கொண்டு மளிகை, காய்கறிகளை வாங்குகிறீர்கள் என வைத்துக் கொள்வோம்.. பணவீக்கம் காரணமாக அடுத்தாண்டு அதே பொருளை வாங்க உங்களுக்கு ரூ.1060 செலவாகும். அதாவது ஓராண்டில் பணவீக்கம் காரணமாக விலைவாசி 6% அதிகரித்து இருக்கிறது என்பதே இதன் பொருளாகும்.
10 ஆண்டுகளில் எந்தளவு உயரும்:
உதாரணத்திற்கு நீங்கள் ரூ.50 லட்சம் செலவில் ஒரு வீடு வாங்கத் திட்டமிடுகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். பணவீக்கம் ஆண்டுக்குச் சராசரியாக 6% வரை அதிகரிக்கிறது என வைத்துக் கொள்வோம். அதன்படி பார்த்தால் அடுத்தாண்டு உங்களுக்கு அதே வீட்டை வாங்க ரூ.53 லட்சம் தேவைப்படும். 5 ஆண்டுகளில் உங்களுக்கு அதே வீட்டை வாங்க 66.91 லட்ச ரூபாய் செலவாகும்.
10 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் அதே வீட்டை வாங்க வேண்டும் என்றால் உங்களுக்கு ரூ.89.54 லட்சம் தேவைப்படும். அதாவது கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அளவு அதன் விலை அதிகரித்துள்ளது. பணவீக்கம் காரணமாகவே அதன் மதிப்பு இப்படித் தொடர்ந்து அதிகரித்து வந்து இருக்கிறது. வீடு என்று இல்லை எல்லா பொருட்களின் விலையும் கூட இதுபோல தான் பணவீக்கத்தால் அதிகரிக்கும்.
பணவீக்கத்தை எப்படிச் சமாளிக்கலாம்:
சரி, பணத்தைச் சேமித்து வாங்கும் காலத்தில் பணவீக்கத்தால் ரேட் எல்லாம் அதிகமாகிறது என்பது புரிகிறது. அப்போ கடன் வாங்கி வீடு, சொகுசு காரை எல்லாம் வாங்கலாமா.. அது சரியா இருக்குமா என்று உங்களுக்குக் கேள்வி வரும். அந்த தப்பை மட்டும் நாம் செய்யவே கூடாது. கடன் என்பது இல்லாத பணத்தை எடுத்து செலவு செய்வது போல எனவே கடன் வாங்கி செலவழிக்கவே கூடாது.
அப்போ இந்த பணவீக்கத்தில் இருந்து சமாளிக்க என்ன செய்வது என கேட்டால்.. சரியான திட்டங்களில் முதலீடு செய்வதே அதற்குத் தீர்வாக இருக்கும். உதாரணமாகப் பங்குச்சந்தை முதலீடு, பணவீக்கத்துடன் இணைக்கப்பட்ட கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதன் மூலம் இதில் இருந்து நாம் தப்பிக்கலாம்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications