Petrol: தினமும் ரூ.750 கோடி நஷ்டம்.. புடின் மட்டும் இல்லைன்னா மொத்தமும் காலி.. ஆபத்பாந்தவனாக வந்த ரஷ்யா!
மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை 4 வருடங்களாக கச்சா எண்ணெய் விலை 50 டாலருக்கு கீழ் குறைந்த போதும் விலையை குறைக்காமல் தொடர்ந்து 100 ரூபாய் அளவிலேயே வைத்திருந்த நிலையில், தற்போது ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்த 2 மாதத்தில் விலையை உயர்த்தியுள்ளது.
கடந்த வாரம் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்திய மத்திய அரசு, இன்று லிட்டருக்கு 90 பைசா வரையில் உயர்த்தியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் 2வது முறையாக உயர்த்தப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் மக்கள் பெரும் நெருக்கடியில் இருக்கும் நிலையில், எண்ணெய் விலை உயர்வில் இருந்து இந்தியாவை காப்பாற்றுவது ரஷ்யா என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
சொல்லப்போனால் ரஷ்யா மட்டும் இல்லையென்றால் மத்திய அரசு தற்போது லிட்டருக்கு 10 ரூபாய்க்கும் அதிகமாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியிருக்கும்.

இந்த நிலையில் மத்திய அரசு ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதியை தொடர்ந்து செய்யும் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அமெரிக்கா சிறப்பு விலக்கு (sanctions waiver) நீட்டிக்காத போதிலும், இந்தியா தனது எரிசக்தி பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து இந்த முடிவை எடுத்துள்ளது.
இதேவேளையில் நேற்று இரவு அமெரிக்க கரூவுல செயலாளர் ஸ்டார் பெசென்ட் உலக நாடுகள் ரஷ்யாவின் எண்ணெய் வாங்க அடுத்த 30 நாட்களுக்கு விலக்கு அளிப்பதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் விலக்கு மே 16ஆம் தேதியுடன் முடிவடையும் வேளையில் இந்த அறிவிப்பு நேற்று வெளியானது.
தினசரி நஷ்டம் ரூ.750 கோடியாகக் குறைந்தது
மத்திய அரசு சமீபத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தியதால், அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் (OMCs) தினசரி நஷ்டம் ரூ.1,000 கோடியில் இருந்து ரூ.750 கோடியாகக் குறைந்துள்ளது. இருப்பினும், தற்போதைய விலையும் உண்மையான உற்பத்திச் செலவைவிட குறைவாகவே உள்ளது. உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை இந்த நஷ்டத்தை அதிகரித்து வருகின்றன.
இன்று 90 பைசா அதிகரித்துள்ளது மூலம் தினசரி நஷ்டத்தின் அளவு 65-70 கோடி ரூபாய் அளவில் குறைய வாய்ப்புள்ளது.
ரஷ்யா இந்தியாவின் ஆபத்பாந்தவன்
உலக அரசியல் பதற்றம் அதிகரித்துள்ள இந்த நேரத்தில் ரஷ்யா இந்தியாவுக்கு மிக முக்கிய எண்ணெய் சப்ளையராக உருவெடுத்துள்ளது. மே மாதத்தில் இந்தியா ரஷ்யாவில் இருந்து சுமார் 19 லட்சம் பேரல் எண்ணெய் இறக்குமதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா தடை விதித்தாலும், இந்தியா வணிக ரீதியான காரணங்களுக்காக ரஷ்ய எண்ணெய் வாங்குவதைத் தொடரும் என்று பெட்ரோலியத் துறை அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
கப்பல் போக்குவரத்துச் செலவு உயர்வு
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்வை தாண்டி கப்பல் போக்குவரத்துச் செலவும் பெருமளவு உயர்ந்துள்ளது. மேற்கு ஆசியாவில் இருந்து எல்பிஜி கொண்டு வரும் செலவு ஒரு டன்னுக்கு 94 டாலரில் இருந்து 207 டாலராக உயர்ந்துள்ளது. இது இந்திய எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தை அதிகரித்து வருகின்றன.
இந்தியாவின் பல திசை உத்தி
இந்தியா ரஷ்ய எண்ணெயை மட்டும் சார்ந்திருக்காமல், கச்சா எண்ணெய் மூலம் ஏற்படும் நிதி சுமையை குறைக்க அமெரிக்கா, வெனிசுவேலா, ஓமன், பிரேசில், அங்கோலா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தும் எண்ணெய் வாங்கி வருகிறது. இருப்பினும், ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக ரஷ்ய எண்ணெயின் முக்கியத்துவம் இன்னும் அதிகரித்துள்ளது.
மக்களுக்கு என்ன பலன்?
ரஷ்ய எண்ணெய் ஒப்பீட்டளவில் குறைந்த விலையில் கிடைப்பதால், இந்தியா பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை ஓரளவு கட்டுப்படுத்த முடிகிறது. இல்லையெனில் தற்போது லிட்டருக்கு 10 ரூபாய் வரையில் உயர்ந்திருக்க கூடும், பல தென்கிழக்கு ஆசிய நாடுகளில் எரிபொருள் விலை 20 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இதேபோல் கடுமையான பயன்பாட்டு கட்டுப்பாடுகளும் விதித்துள்ளது.
ஆனால் இந்தியாவுக்கு ரஷ்யா பெரிய அளவில் உதவி செய்யும் காரணத்தால் எரிபொருள் விலை உயர்வு கையைமீறி போகாமல் தடுக்க முடிகிறது. இதன் மூலம் இந்தியாவின் ஆபத்பாந்தவனாக ரஷ்யா விளங்குகிறது.












Click it and Unblock the Notifications