இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை 2 மடங்காக உயர்வு - சி எம் ஐ இ
நாட்டில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது. உழைக்க தயாராக இருப்பவர்களின் விகிதமானது குறைந்துள்ளது.
டெல்லி: இந்தியாவில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை ஒரே ஆண்டில் இரு மடங்காக அதிகரித்து விட்டதாக இந்திய பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் அமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேலை இல்லா திண்டாட்டத்தை ஒழிப்போம் என்று கூறி ஓட்டு கேட்டு ஆட்சிக்கு வருகின்றனர். ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த பின்னர் அதைப்பற்றி சிந்திப்பதற்கு ஆட்சியாளர்களுக்கு நேரம் இருப்பதில்லை. முந்தைய காங்கிரஸ் ஆட்சியை குறை சொல்லி ஆட்சிக்கு வந்த பாஜக அரசு பல திட்டங்களை அறிவித்தும் வேலை இல்லாதவர்கள் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
மும்பையில் செயல்பட்டு வரும் இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் அமைப்பின் (CMIE)சார்பில் நாடு முழுவதும் உள்ள வேலை இல்லாதோர் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
மோடி தலைமையிலான பாஜக ஆட்சி பொறுப்பேற்று புதிய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு 4 வருடம் முடிந்த பிறகும் வேலைவாய்ப்பு குறித்த நிலைமை முந்தைய அரசைப் போல மிக மோசமாகத்தான் உள்ளது. வேலைவாய்ப்பை பெருக்க மோடி அரசு அறிவித்த பல திட்டங்கள் எந்த பயனையும் தரவில்லை என்றே தெரிகிறது.
அந்த அறிக்கையில் கடந்த 2017லிருந்தே வேலை இல்லாதோர் எண்ணிக்கையானது படிப்படியாக உயர்ந்து வருகிறது. வேலை இல்லாதோர் எண்ணிக்கையானது கடந்த 2 ஆண்டுகளில் இல்லாதவாறு இரு மடங்காக அதாவது 6.9 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது.
இது மட்டுமின்றி வேலை செய்ய விரும்புவோர் எண்ணிக்கையும் கடந்த 2016லிருந்து 42.4 சதவிகிதமாகக் குறைந்து விட்டது.
பண மதிப்பிழப்பிற்கு முன்னதாக, தொழிலாளர் பங்கெடுப்பு 47-48 சதவிகிதமாக இருந்தது. ஆனால் இது பண மதிப்பிழப்பிற்கு பின்னர் மிகவும் மோசமான அளவில் வீழ்ச்சி அடைந்தது. அது இதுவரை மீளவில்லை.
கடந்த அக்டோபரில் 39.7 கோடி பேர்தான் வேலையில் இருந்தனர். இது கடந்த ஆண்டை விட 2.4 சதவிகிதம் குறைவானதாகும். இதற்கிடையில், 2017 ஜூலையில் வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை 1.4 கோடியாக இருந்தது, 2018 அக்டோபரில் 2.95 கோடி அதிகரித்துள்ளது. இது பாஜக ஆட்சியில் வேலை வாய்ப்புகள் மிகவும் குறைந்துள்ளதையே காட்டுகிறது.
ஆண்டுதோறும் 1.2 கோடி மக்கள் தொழிலாளர்களாக மாறுகின்றனர். ஆனால் அதற்கு ஏற்றார் போல வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதில்லை இதனாலேயே வேலைவாய்ப்பின்மை உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வேலை செய்யக்கூடிய ஒருவர் வேலை தேடியும் அது கிடைக்கவில்லை எனில் அவரை வேலையில்லாதவர் என்கிறோம். செயல்திறன் உடைய தொழிலாளர்களில் வேலை தேடி கிடைக்காதவர்களின் சதவிகிதம் வேலையின்மையின் சதவிகிதம் எனப்படும். வேலை செய்ய விரும்பாதவர்கள், இயலாதவர்கள் இதில் சேர்க்கப்படமாட்டார்கள்.
டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா, ஸ்கில் இந்தியா, ஸ்மார்ட் சிட்டி மற்றும் ஸ்டேன்ட் அப் இந்தியா போன்ற பல திட்டங்கள் இருந்தும் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. போன்ற நடைவடிக்கைகள் புதிய வேலைவாய்ப்பை உருவாக்குவதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளன என்று ஏற்கனவே ஒரு ஆய்வில் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.