இந்திய பங்குச் சந்தை 2017ஆம் ஆண்டும் மந்தமாகவே இருக்கும் – டச்சு வங்கி கணிப்பு
இந்த ஆண்டும் பங்குச் சந்தை மந்தமாகவே இருக்கும் என்றும் அடிக்கடி ஏற்ற இறக்கமாகவே இருக்கும் என்றும் டச்சு மற்றும் யுபிஎஸ் வங்கியும் ஹெச்.டி.எஃப்.சி செக்யூரிட்டிஸ் நிறுவனமும் கணித்துள்ளன.
மும்பை: உயர் பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் மூலம் இந்தியப் பங்குச் சந்தையானது கடந்த ஆண்டின் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தின் மூன்றாவது வாரம் வரை சற்று ஆட்டம் கண்டு தள்ளாட்டத்துடனேயே இருந்தது. இருப்பினும் டிசம்பர் மாதத்தின் இறுதியில் சற்று நிதானித்து ஏற்றம் காண ஆரம்பித்தது.
இந்நிலையில், பிரபல ஐரோப்பிய வங்கிகளான டச்சு மற்றும் யுபிஎஸ் வங்கியும், ஹெச்.டி.எஃப்.சி வங்கியும் இந்த ஆண்டில் இந்திய பங்குச் சந்தை எப்படி இருக்கும் என்று கணித்து கூறியுள்ளது.
அதில் இந்திய பங்குச் சந்தையை பொருத்தவரை கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் சற்று மந்தமாகவும். ஏற்ற இறக்கமாகவும் இருக்கும் என்றும், இருந்தாலும் இந்த ஆண்டின் இறுதியில், மும்பை சென்செக்ஸ் குறியீடு 29000 புள்ளிகளையும், தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி 8,800 புள்ளிகளையும் எட்டும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது,
இதர பங்குச் சந்தைக் குறியீடுகளும் (BENCHMARK INDEX) 6 முதல் 8 சதவீதம் வருமானத்தை தரலாம் என்றும், மும்பை குறியீடான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தைக் குறிடான நிஃப்டியும் குறைந்தது 2 முதல் 3 சதவீதம் வருமானத்தை தரும் என்றும், மொத்தத்தில் பங்குச் சந்தை வருமானம், கடந்த ஆண்டை விட சிறிதளவே அதிகமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தியப் பொருளாதாரம் 2017 நிதியாண்டின் இரண்டாவது பருவத்தில் சிறப்பான வளர்ச்சி பெறும் எனவும் 2016ம் ஆண்டைவிட மிதமான வருமானத்தை தரும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஏனெனில், வட்டி வீத குறைப்பு நடவடிக்கையின் மூலம் வருவாய் வளர்ச்சி அதிகரிப்பதால், அதன் தாக்கம் 2018ம் ஆண்டில் இரண்டாம் பருவத்தில் எதிரொலிக்கும் என்றும், அது பங்குச்ச ந்தையின் உத்வேக வளர்ச்சிக்கு நிச்சயமாக சாதகமாக இருக்கும் எனவும் யுபிஎஸ் வங்கி தனது ஆய்வறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.
கூடுதலாக, உலகிலேயே, இந்தியா மட்டுமே அதிக அளவில் முதலீட்டை ஈர்க்கும் நாடாக இருப்பதாகவும் பாதகமான அம்சங்கள் இப்போதைக்கு எதுவும் இல்லை எனவும் தெரிவித்தள்ளது.
தற்போதைய சூழ்நிலையில், வரவிருக்கும் மத்திய பட்ஜெட் மற்றும் ஜிஎஸ்டி வரி முறையை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களினாலும், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் நடைபெறவிருக்கின்ற சட்டசபைத் தேர்தல்களினாலும், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் கச்சா எண்ணை விலை உயர்வு போன்ற காரணிகள் இந்திய பொருளாதாரத்திற்கு கவலை அளிக்கும் விஷயங்களாகும்.
இருப்பினும், அமெரிக்காவின் வட்டி விகித அதிகரிப்பு மற்றும் டாலரின், ஸ்திரத்தன்மையால், அந்நிய நேரடி முதலீட்டாளர்கள்(Forein Institutional Investors), மற்றும் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் (Domestic Institutional Investors) தொடர்ச்சியான முதலீட்டினாலும், இந்தியப் பங்குச் சந்தை உயர்வுக்கு வழிவகுக்கும்.
இதை எல்லாம் கவனத்தில் கொண்டுதான் ரிசர்வ் வங்கியானது தன்னுடைய கொள்கை முடிவுகளை எடுக்கும் என்று எதிர்பார்ப்பதாக டச்சு வங்கி தன்னுடைய அறிக்கையில் விளக்கி உள்ளது.