டிசம்பர் காலாண்டின் ஜிடிபி வளர்ச்சி 6.9 %- ராய்டர்ஸ் கணிப்பு
பெங்களூரு: நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் 6.9 சதவிகிதமாக இருக்கும் என்று பிரபல ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் கணித்துள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product)கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2017-18 முதலாம் காலாண்டில் 5.7% ஆக குறைந்தது. உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறைந்து போனதற்கு எதிர்கட்சியினர் ஆளும் பாஜக அரசை கடுமையாக சாடினர்.
ஏனெனில் கடந்த ஆண்டு இதே காலத்தில் ஜிடிபி வளர்ச்சி 7.9 சதவீதமாக இருந்தது. தவிர மார்ச் காலாண்டின் வளர்ச்சி 6.1 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஜூன் காலாண்டு வளர்ச்சி சீனாவின் வளர்ச்சியை விடக் குறைவாகும். கடந்த காலாண்டில் சீனாவின் வளர்ச்சி 6.9 சதவீதமாக இருந்தது.
கடந்த 2016ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட உயர்பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் 2017ம் ஆண்டில் ஜூலையில் அமல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி வரிவிதிப்பால் ஆரம்பத்தில் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் சற்று குழப்பமான சூழ்நிலையே நிலவி வந்தது. இதனால் ஜிடிபி வளர்ச்சியும் சற்று தொய்வடைந்து 6.3 சதவிகிமாக இருந்தது.
விலை குறைவு
ஜிஎஸ்டி வரி விதிப்பைப் பற்றி பெரும்பாலான வர்த்தகர்களும் தொழில் நிறுவனங்களும் ஓரளவு புரிந்துகொண்டதால், உற்பத்தி அதிகரித்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது வேகமெடுக்க தொடங்கியது. உற்பத்தியும் அதிகரித்து விவசாய விளைபொருட்களின் விலையும் குறைந்தது.
நிதி நெருக்கடி குறைந்தது
இதனை பின்பற்றி நுகர்பொருட்களின் பணவீக்க விகிமும் குறையத் தொடங்கியது. கூடவே, அக்டோபர்-டிசம்பர் காலாண்டின் வரி வருவாயும் எதிர்பார்த்ததை விட அதிகமாக வசூலானது. எதிர்பார்த்த வரி வருவாயை விட அதிகமாக வரி வசூலானதால், நடப்பு நிதி ஆண்டில் மத்திய அரசுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி பெருமளவு குறைந்தது.
வளர்ச்சி விகிதம் அதிகரிப்பு
வரி வசூல் அதிகரிப்பால் உற்பத்தியும், நுகர்வோர் பணவீக்க விகிமும் குறைந்ததால், அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் வளர்ச்சி விகிமானது 7 சதவிகிதத்தை எட்டக்கூடும் என்றும் அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஜிடிபி வளர்ச்சி அதிகரிப்பு
தற்போது நடப்பு நிதியாண்டின் அக்டோபர்-டிசம்பர் காலாண்டுக்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் பற்றிய ஆய்வறிக்கையை பிரபல ராய்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் அக்டோபர்-டிசம்பர் காலாண்டுக்கான ஜிடிபி வளர்ச்சியானது 6.9 சதவிகிமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நடப்பு நிதியாண்டின் மிகச் சிறந்த ஜிடிபி வளர்ச்சியாகும்.
நுகர்வோர் தேவை அதிகம்
2017-18ம் நிதியாண்டின் அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் நுகர்வோர் தேவையானது அதிகமாக இருந்தது. இதன் காரணமாக உற்பத்தித் துறையில் வேகமான போக்கு காணப்பட்டது. மேலும் வாகன உற்பத்தியில் வலுவான நிலை இருந்ததால் வளர்ச்சியும் வலுவானதாக இருந்தது என்று ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் முதன்மை தரகு நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் அபிஷேக் உபாத்யாய் தெரிவித்தார்.
ஜிடிபி அதிகரிக்க காரணம்
அதுபோலவே, உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்பு சற்று மந்த கதியில் இருந்த கட்டுமானத்துறையும் வேகமெடுத்ததால், சிமெண்ட் உற்பத்தித் துறையிலும் அதிக உற்பத்தி நடைபெற்றது. இதுவும் ஜிடிபி வளர்ச்சி அதிகரிக்க காரணமாகும்.