பினாமி சொத்து, கருப்பு பணம் பற்றி தகவல் கொடுப்பவர்களை கோடீஸ்வரர்களாக்கும் மத்திய அரசு
பினாமி சொத்து குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.
டெல்லி: உள்நாட்டில் பினாமி பெயரில் நடைபெறும் பணப்பரிவர்த்தனை மற்றும் சொத்துக்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.1 கோடி வரை பரிசு வழங்கப்படும் எனவும் வெளிநாடுகளில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்கள் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 5 கோடி ரூபாய் வரையில் பரிசு வழங்கப்படும் எனவும் மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கருப்புப் பணத்தை வெளியே கொண்டு வரவும், வரி ஏய்ப்பைத் தடுக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வருமான வரித்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு பொதுமக்களின் பங்களிப்பை பெறுவதற்கு வகை செய்யும் விதத்தில் புதிய பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் பினாமி பெயரில் நடைபெறும் பணப்பரிவர்த்தனை மற்றும் சொத்துக்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.1 கோடி வரை பரிசு வழங்கப்படும். வருமான வரி செலுத்தாதவர்கள் தொடர்பான தகவல்களை தருபவர்களுக்கு ரூ.50 லட்சம் வரை வெகுமதி அளிக்கப்படும்.
இதேபோல், வெளிநாடுகளில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 5 கோடி ரூபாய் வரையில் பரிசு வழங்கப்படும் என்று அந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கறுப்பு பணம் ஒழிப்பு மற்றும் வருமான வரி ஏய்ப்பை தடுக்க கொண்டுவரப்பட்டுள்ள புதிய திட்டத்தின் மூலமாக பினாமி சொத்து மற்றும் பரிவர்த்தனை குறித்து தகவல் கூறலாம். தகவல் தெரிவிப்பவர்கள் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும். வெளிநாட்டினரும் இந்த தகவல்களை தெரிவிக்கலாம்.
இந்த திட்டம் என்பது பினாமி சொத்து, பரிமாற்றம் குறித்து தகவல் அளிப்பவர்களை ஊக்கப்படுத்துவதற்காகவும்,கறுப்பு பணம், பினாமி சொத்துக்களை கட்டுப்படுத்துவதற்காகவும்தான் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.