தங்கத்திற்கு பற்றாக்குறை இருக்கா? அமெரிக்கா + பிரிட்டனால் உயரும் தங்கம் விலை? ஆனந்த் சீனிவாசன் நறுக்
சென்னை: தங்கம் விலை கடந்த சில காலமாகவே தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இதற்கான காரணம் புரியாமல் மக்கள் குழம்பிப் போய் உள்ளனர். இதற்கிடையே தங்கம் விலை உயர்வுக்குப் பின்னால் இருக்கும் சர்வதேச காரணத்தை விளக்கியுள்ள ஆனந்த் சீனிவாசன், இது வரும் காலங்களில் எந்தளவுக்கு உயரும் என்பது குறித்தும் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
நேற்று வரை கடந்த 10 நாட்களில் மட்டும் 22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.185 வரை உயர்ந்துள்ளது. அதாவது நேற்று (பிப்ரவரி 25) சென்னையில் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8075க்கு விற்பனையானது.

தங்கம் விலை
ஒரு சவரன் தங்கம் ரூ.64,600-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை குறுகிய காலத்தில் வேற லெவலில் உயர்ந்துவிட்ட நிலையில், மக்களால் இனி தங்கத்தையே வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தங்கம் விலை ஏற்றத்திற்குப் பின்னால் இருக்கும் சர்வதேச அரசியலை ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். மேலும், தங்கம் விலை வரும் காலங்களில் எந்தளவுக்கு உயர வாய்ப்பு இருக்கிறது என்பதையும் எளிமையாக விளக்கியுள்ளார்.
ஆனந்த் சீனிவாசன்
இது தொடர்பாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் தனது யூடியூப் பக்கத்தில், "அமெரிக்காவில் ப்யூச்சர்ஸ் மார்க்கெட்டிலும் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இந்தியாவில் விற்பனையாகும் தங்கம் விலையைக் காட்டிலும் அமெரிக்காவில் தங்கம் விலை சற்று அதிகமாகவே இருக்கிறது. ஆனாலும், இப்போது நமது நாட்டில் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.8000ஐ தாண்டிவிட்டது. ஸ்டாம்பிங் சார்ஜ் (தங்க காயின்களுக்கு செய்கூலிக்குப் பதில் இருக்கும்) மற்றும் ஜிஎஸ்டியை சேர்த்தால் இப்போதே தங்கம் விலை ரூ.8500ஐ தாண்டிவிட்டது. 24 கேரட் தங்கத்தில் இதையெல்லாம் சேர்த்தால் ரூ.9000க்கு மேல் போய்விட்டது.
என்னைப் பொறுத்தவரைத் தங்கம் விலை அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.10 ஆயிரத்தைக் கடந்துவிடும். அதாவது வரி, ஸ்டாம்பிங் சார்ஜ் எல்லாம் சேர்த்தே சொல்கிறேன். 22 கேரட் தங்கம் ரூ.10 ஆயிரத்தைக் கடந்துவிடும்.
அமெரிக்கா
(அமெரிக்காவின்) கோல்ட்மேன் சாக்ஸ் இந்தாண்டு இறுதிக்குள்ளாகவே தங்கம் விலை 200 டாலர் ஏறும் என்கிறார்கள். அதாவது 200 டாலர் என்றால் இந்தாண்டு இறுதிக்கு உள்ளாகவே 22 கேரட் தங்கம் ரூ.9700 முதல் ரூ.9800 வரை போகும் என்கிறார்கள். அதாவது இந்தாண்டில் மட்டும் 26% வரை லாபம் வரும் என எதிர்பார்க்கிறார்கள். டிரம்ப் இதுபோல தொடர்ந்து சர்ச்சைகளைக் கிளப்பினால் அது 3300 டாலர் வரை போகலாம் என்கிறார்கள்.
பிரிட்டன்
சர்வதேச நாடுகளின் மத்திய வங்கிகளும் 50 டன் தங்கத்தை வாங்கியுள்ளன. லண்டனில் தங்கத்தை டெலிவரி செய்யவே கஷ்டப்படுகிறார்களாம். டிரம்பிற்கு பயந்து வங்கிகள் எல்லாம் தங்கத்தை (லண்டன் டூ அமெரிக்கா) நகர்த்துகிறார்கள். டெலிவரி செய்யக் கஷ்டப்படுவதால் தங்கத்திற்குப் பற்றக்குறை வந்துவிட்டதோ என அஞ்சுகிறார்கள். ஆனால், இதுபோல நகர்த்த டிரம்பின் வரி தான் காரணம். தங்கத்திற்குப் பற்றாக்குறை எதுவும் ஏற்படவில்லை.
என்னைப் பொறுத்தவரை இரண்டு ஆண்டுகளில் ரூ.10 ஆயிரம் வரலாம். ஆனால், அமெரிக்க மத்திய வங்கி வட்டியை குறைத்தால் தங்கம் விலை வேகமாக அதிகரிக்கும். ஆனால், அதற்கு வாய்ப்பு குறைவு என்றே நினைக்கிறேன்" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications