‘செல்வ மகள்’ சேமிப்பு திட்டத்தில் சேர்ந்தால் வருமான வரிச் சலுகை உண்டு
சென்னை: ‘செல்வ மகள்' சேமிப்பு திட்டத்தின் கீழ் சேமிக்கப்படும் தொகைக்கு வருமான வரிச் சலுகை அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :-
''வருமான வரிச்சட்டத்தின் 80-வது பிரிவு, உட்பிரிவு 2-ன் கீழ் உள்ள 8-வது சட்ட உட்கூறின் கீழ் ‘செல்வ மகள்' சேமிப்புத் திட்டம் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ‘செல்வ மகள்' சேமிப்புத் திட்டத்துக்கு வருமான வரி சலுகை வழங்கப்படுகிறது. இந்தச் சலுகையை அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை சேமிப்பவர்கள் பெறலாம்.
கடந்த ஆண்டு வருமான வரிக் கணக்கில் ‘செல்வ மகள்' சேமிப்புத் திட்டத்தின் கீழ் உள்ள தொகையை சேர்க்க தேவையில்லை. சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர் அல்லது பெற்றோர் / பாதுகாவலர் இச்சலுகையை பெற உரிமை கோரலாம்''
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.