டிசிஎஸ் தொடர்ந்து.. இன்போசிஸ், டெக் மஹிந்திராவும் சிக்கியது? பூதாகரமாக வெடிக்கும் புகார்கள்!
இந்திய பொருளாதாரத்தின் முக்கிய பங்கு வகிக்கும் ஐடி துறையில் பணியிட பாதுகாப்பு பெரும் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது. டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் மத மாற்றம் அழுத்தம் தொடர்பான புகார்கள் விசாரணையில் உள்ள நிலையில், இன்போசிஸ் மற்றும் டெக் மஹிந்திரா நிறுவனங்களிலும் இதே போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த சம்பவங்கள் ஐடி துறையில் ஊழியர்களின் பாதுகாப்பு, குறிப்பாக பெண் ஊழியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கியுள்ளன. இன்போசிஸ், டெக் மஹிந்திரா நிறுவனத்தில் நடந்தது என்ன?

டிசிஎஸ் நாசிக் வழக்கு
டிசிஎஸ் நாசிக் பிபிஓ அலுவலகத்தில் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, அலுவலக பணிகள் முடக்கப்பட்டு உள்ளன. பாலியல் துன்புறுத்தல் மற்றும் மத மாற்ற அழுத்தம் தொடர்பான புகார்கள் காரணமாக போலீஸ் விசாரணை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் 9 பேர் மீது குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.
எச்ஆர் அதிகாரி நிதா கான் உள்ளிட்டோர் மீது மத மாற்றம் மற்றும் துன்புறுத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ளன. முன்னாள் எச்ஆர் தலைவர் அஷ்வினி சைனானி பாதிக்கப்பட்டவர்களை புகார் அளிக்க வேண்டாம் என்று தடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ATS, NIA மற்றும் தேசிய மகளிர் ஆணையம் ஆகிய அமைப்புகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளன.
இன்போசிஸ்: ஜிஹாதி துன்புறுத்தல் புகார்
டிசிஎஸ் விவகாரம் தொடர்ந்து இன்போசிஸ் நிறுவனத்திலும் இதே போன்ற புகார்கள் எழுந்துள்ளன. புனேவில் உள்ள இன்போசிஸ் பிபிஎம் அலுவலகத்தில், குறிப்பாக டெய்ம்லர் திட்டத்தில் பல பெண் ஊழியர்கள் ஜிஹாதி துன்புறுத்தல் நடப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். BackupBrainy என்ற ட்விட்டர் கணக்கு இந்த புகார்களை மகாராஷ்டிரா அமைச்சர் நிதிஷ் ரானே மற்றும் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோருக்கு டேக் செய்து பதிவிட்டது. இதற்கு அமைச்சர் நிதிஷ் ரானே "கவனித்துக்கொள்கிறேன்" என்று பதிலளித்துள்ளார்.
இன்போசிஸ் நிறுவனம் இந்த புகார்களை உறுதியாக மறுத்துள்ளது. புகார்கள் உடனடியாக தனி குழு மூலம் விசாரிக்கப்படும் என்றும், இதுப்போன்ற துன்புறுத்தலுக்கும் ஜீரோ சகிப்பின்மை கொள்கை அடிப்படையில் நிர்வாகம் இயங்கும் என்று இன்போசிஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. புகார் அளிக்கும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கும் ஸ்பீக் அப் கலாச்சாரம் நிறுவனத்தில் உள்ளது என்றும் இன்போசிஸ் கூறியுள்ளது.
மேலும் இந்த பதிவு தற்போது நீக்கப்பட்டு உள்ளது.
டெக் மஹிந்திரா: கோரேகான் கேம்பஸ்
டெக் மஹிந்திராவின் மும்பை கோரேகான் ஐடி பார்க் கேம்பஸிலும் மத சார்பு மற்றும் பாரபட்சமான பணியமர்த்தல் குறித்து புகார்கள் எழுந்துள்ளன. மும்பை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அஷுதோஷ் துபே தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அந்த பதிவில், "இங்கு 60 சதவீதத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் முஸ்லிம் இளைஞர்கள். முஸ்லிம் ஆண்கள் அதிகப்படியாக இந்து பெண் நண்பர்களுடன் இருப்பதை பார்க்கிறேன். முஸ்லிம் பெண்கள் புர்கா, நிகாப் அணிய அனுமதி உள்ளது. முஸ்லிம் எச்ஆர் குலாம் கௌஸ் முஸ்லிம் ஊழியர்களை மட்டும் பணியமர்த்துகிறார். ரம்ஜான் காலத்தில் இஃப்தார் பார்ட்டிகள் நடைபெறுகின்றன. இது ஒரு மினி பாகிஸ்தான் போல் உள்ளது" என்று ஒருவர் அனுப்பிய மெசேஜை ஸ்கிரீன்சாட் எடுத்து பதிவிட்டு உள்ளார். மற்றொரு பதிவில், "ரம்ஜான் காலத்தில் தொழுகை மற்றும் இஃப்தார் நிகழ்ச்சிகளுக்காக பேன்ட்ரி காலணி இல்லாத பகுதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
டெக் மஹிந்திரா இந்த குற்றச்சாட்டுகளை உறுதியாக மறுத்துள்ளது. "இந்த புகார்கள் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை. காலணி இல்லாத பகுதி படம் எங்கள் அலுவலகத்துடன் தொடர்பில்லாதது. பணியமர்த்தல் தொடர்பான பதிவும் பொய்யானது" என்று நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
பெரு நிறுவனங்களுக்கு எச்சரிக்கை
டிசிஎஸ், இன்போசிஸ் மற்றும் டெக் மஹிந்திரா ஆகிய மூன்று பெரிய ஐடி நிறுவனங்களிலும் ஒரே நேரத்தில் எழுந்துள்ள இந்த புகார்கள் மறுக்கப்பட்டாலும் இத்துறையின் உள் புகார் தீர்வு அமைப்புகளின் செயல்திறன் குறித்து பெரிய கேள்வியை எழுப்பியுள்ளன. பணியிடத்தில் அதிகார துஷ்பிரயோகம், மத சார்பு மற்றும் பாலியல் துன்புறுத்தல் போன்ற பிரச்னைகள் தொடர்ந்து வருவது ஊழியர்களின் பாதுகாப்பை பாதிக்கிறது. இந்த சம்பவங்கள் பெரு நிறுவனங்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளன.















Click it and Unblock the Notifications