31.45 கோடி ஜன் தன் யோஜனா வங்கி கணக்கு - ரூ. 80 ஆயிரம் கோடி டெபாசிட்
ஜன் தன் யோஜனா வங்கி கணக்குகளில், 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வைப்புத்தொகை இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி: ஜன் தன் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள மொத்த நிதியின் மதிப்பு 80,000 கோடி ரூபாயைத் தாண்டிவிட்டதாக மத்திய அரசின் அதிகாரபூர்வமான தகவல் தெரிவித்துள்ளது. வங்கிக் கணக்குதாரர்களின் எண்ணிக்கை 31.45 கோடியாக அதிகரித்துள்ளது.
அனைவருக்கும் வங்கி கணக்கு என்ற பெயரில் கடந்த 2014ல் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய அரசின் மானியங்கள் இந்த வங்கி கணக்கு மூலம் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் மக்களிடையே ஆர்வம் குறைவாக இருந்தது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் ஜன் தன் வங்கி கணக்கு தொடங்குவது வேகமெடுத்தது. ஜன் தன் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும் தொகை 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதுவரை 31 கோடியே 45 லட்சம் பேர் இந்த திட்டத்தில் இணைந்துள்ளனர்.
பணமதிப்பழிப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட போது வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை கணிசமாக உயர்ந்திருந்தது. கடந்த வாரம் உலக வங்கி வெளியிட்ட 'குளோபல் பிண்டெக்ஸ் ரிப்போர்ட் 2017’ அறிக்கையில் ஜன் தன் யோஜனா திட்டத்தின் வெற்றி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தின் முற்பகுதியில் 45,300 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது, அதே மாதத்தின் பிற்பகுதியில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை 74,000 கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது என்று அரசின் தகவலின் மூலம் தெரிகிறது.
டெபாசிட் தொகை மட்டுமல்லாமல் வங்கிக் கணக்குதாரர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நவம்பர் 9, 2016 அன்று இருந்த வங்கிக் கணக்குதாரர்களின் எண்ணிக்கை 25.51 கோடி. இந்த எண்ணிக்கை 2017ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 26.5 கோடி இருந்துள்ளது.
ஏப்ரல் 11, 2018 தேதி கணக்கின்படி வங்கிக் கணக்குதாரர்களின் எண்ணிக்கை 31.45 கோடியாக அதிகரித்துள்ளது.கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி வரை 80,545.70 கோடி ரூபாய் ஜன் தன் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சகத்தின் தகவல் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications