பஞ்சாப் நேசனல் வங்கி மோசடி - இந்தியாவின் ஆபரண நகைகள் ஏற்றுமதி கடும் பாதிப்பு
பஞ்சாப் நேசனல் வங்கி மோசடியின் விளைவாக இந்தியாவின் தங்க நகை உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆபரண ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: பஞ்சாப் நேசனல் வங்கியில் வைர வியாபாரி நீரவ் மோடி செய்த மோசடியினால் நகை உற்பத்தியாளர்களுக்கு போதிய கடனுதவிகள் செய்ய வங்கிகள் தயக்கம் காட்டுகின்றன. இதனால் ஆபரண நகை உற்பத்தி பாதிக்கப்பட்டதோடு ஏற்றுமதியும் சரிவடைந்துள்ளது. இதனைப் பயன்படுத்தி இந்தியாவின் ஆபரண ஏற்றுமதி சந்தையை சீனா, தாய்லாந்து நாடுகள் கைப்பற்றும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்தியாவின் பாரம்பரிய நகை டிசைன்களுக்கு வெளிநாடுகளில் மிகுந்த வரவேற்பு உள்ளது. நாட்டின் ஏற்றுமதியில் ஆபரண ஏற்றுமதி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அமெரிக்கா, சீனா, ஐக்கிய அரபு எமிரேட்களில் கடந்த நிதியாண்டு இறுதியில் தேவைகள் சற்று அதிகரித்திருந்தன. இதனால், துவக்கத்தில் மந்த நிலையில் இருந்த நகை ஏற்றுமதி மீண்டுவர தொடங்கியது. வைரம் பட்டை தீட்டுதல் தொழிலிலும் இந்தியா முதன்மை இடத்தில் திகழ்கிறது. இந்தியாவின் நகை மற்றும் நவரத்தினம் ஏற்றுமதியில் அமெரிக்கா 45 சதவிகித பங்களிப்பை கொண்டுள்ளது.
இந்தியாவின் நகை மற்றும் நவரத்தின கற்கள் ஏற்றுமதிக்கு லத்தீன் அமெரிக்க நாடுகள், தெற்காசிய நாடுகள், கம்போடியாவில் வாய்ப்புகள் உள்ளன. கடந்த ஆண்டில் நகை ஏற்றுமதி சரிவை சந்தித்தது. ஐக்கிய அரபு நாடுகளில் நகை இறக்குமதிக்கு 5 சதவீத வாட் வரி விதிக்கப்பட்டது. இது ஜனவரி 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வந்தது. கடந்த நிதியாண்டில் நகை ஏற்றுமதி சரிவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது.
இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான கால கட்டத்தில் நகை ஏற்றுமதி அதிகரித்திருந்தது. இதனிடையே இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில், மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரியான நீரவ் மோடி, அவரது உறவினர் மெஹுல் சோக்சியுடன் இணைந்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரூ.13,700 கோடியை மோசடி செய்தது வங்கித் துறையையே ஆட்டம்காண வைத்தது. அடுத்தடுத்து வங்கிகளில் நகை வியாபாரிகள் செய்த மோசடிகள் அம்பலமாகி வருகின்றன.
இந்த மோசடிக்குப் பின்னர் நகை மற்றும் ரத்தினங்கள் துறையினருக்குக் கடன் வழங்கவே வங்கிகள் தயங்குகின்றன. இதனால் அத்துறையினர் போதிய மூலதனம் இல்லாமல் தொழில் நடத்த முடியாமலும், ஏற்றுமதியில் ஈடுபட முடியாமலும் தவித்து வருகின்றனர்.
சென்ற வாரம், டெல்லியைச் சேர்ந்த நகை விற்பனை நிறுவனமான பிசி ஜூவல்லர்ஸ் கடன் நெருக்கடி காரணமாக இந்த ஆண்டில் தனது ஏற்றுமதியை 25 சதவிகிதமாகக் குறைத்துக்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. இதுபோல பல்வேறு நிறுவனங்கள் தங்களது தொழில் செயல்பாட்டுக்கான போதிய மூலதனம் இல்லாததால் தங்களது ஏற்றுமதியைக் குறைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளன.
இந்தியாவின் ஒட்டுமொத்த வணிக ஏற்றுமதியில் 16 சதவிகிதப் பங்களிப்பைக் கொண்டுள்ள நகை மற்றும் ரத்தினங்கள் ஏற்றுமதித் துறை இந்த ஆண்டின் அக்டோபர் வரையிலான ஏழு மாதங்களில் 2 சதவிகிதம் சரிவைச் சந்தித்திருக்கிறது. இதற்கு முந்தைய நிதியாண்டில் நகை மற்றும் ரத்தினங்கள் ஏற்றுமதியில் 5 சதவிகிதம் சரிவுடன் மொத்தம் 14 பில்லியன் டாலர் மதிப்புக்கு மட்டுமே ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற்றிருந்தது.
வைரம் ஏற்றுமதி சென்ற ஆண்டு அளவிலேயே இருக்கும் எனவும், மிகப் பெரிய வளர்ச்சி எதுவும் இருக்காது எனவும் நகை ஏற்றுமதி கவுன்சில் தலைவரான கோலின் ஷா தெரிவித்துள்ளார்.